பிறகு அந்நகர நீதிபதி ஒருவர் அவர் முன்பு வந்து,' 'குற்றத்தைப்பற்றியும் தண்டனையைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லுங்கள் ' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்: உங்கள் உயிர் காற்றிலே அலைந்து திரியும்போது தான் - நீங்கள் மட்டுமே துணையின்றி உள்ள போது தான் - நீங்கள் பிறருக்குத் தவறிழைத்து அதன் மூலம் உங்களுக்கு நீங்களே ' தவறிழைத்துக் கொள்கின்றீர்கள் . அத்தகைய உங்கள் தவறுகளுக்காக , நீங்கள் பரலோகத்தின் கதவைத் தட்டும் போது, ஆங்குப் பதிலளிப்போர் இல்லாமையால், சிறிது காலம் பரலோகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டியதே. உங்கள் அரிய உயிர் ஒரு கடலைப் போன்றது. எக்காலத்திலும் அது வற்றாது. வேறு நீரைப் பெய்து அதை நிரப்ப வேண்டியும் இராது. காற்றைப் போல இலேசான சிறகுடையவற்றை மட்டுமே அது மேலெழுப்ப வல்லது. மற்றும் உங்கள் தூய ஆத்மா கதிரவனைப் போன்றதுமாகும். அந்த ஆத்மாவோ கறையானின் வழிகளையும் அறியாது; பாம்பின் வளைகளையும் தேடாது. உங்கள் தூய உயிர் உங்களுள்ள...