அங்கிருந்த ஓர் இளைஞன், 'எமக்கு நட்பைப் பற்றிச் சொல்ல வேண்டும்' என, அவர் கூறுவார்: உங்களது நிறைவேற்றப்பட்ட தேவைகளே உங்கள் நண்பன் ஆகும். நீங்கள் அன்போடு விதை தூவி, நன்றியோடு அறுவடை செய்யும் வயலும் அவனே. உங்கள் உணவும் உங்களது குளிர்காயும் கணப்பும் அவனே. ஏனெனில், அவனிடம் நீங்கள் பசியுடனே வருகின்றீர்கள்; உங்கள் அமைதிக்காகவே அவனைத் தேடுகின்றீர்கள். உங்கள் நண்பன், தன் உள்ளத்தைத் திறந்து உங்களிடம் பேசும் போது, உங்கள் உள்ளத்திலே உதிக்கும் மாறான கருத்துக்கான அச்சமும் நீங்கள் கொள்வதில்லை. உடன்பாட்டுக் கருத்தையும் நீங்கள் மறைப்பதில்லை. அவன் பேசாமல் மௌனமுற்றிருக்கும் போதும் உங்கள் நெஞ்சம் அவன் இதய ஒலியைக் கேட்பதைத் தடுப்பதும் இல்லை. ஏனெனில், நட்பின் இடையே சொற்களின்றி எல்லா நினைவுகளும், எல்லா அவாக்களும், விருப்பு வெறுப்புகளும், எல்லா எதிர்பார்த்தலும் உதித்து இருவரிடையேயும் மகிழ்வோடு, ஆனால் ஆரவாரமின்றிப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன...