அங்கு ஆசிரியர் ஒருவர் பின்னர் அவரை நோக்கி, 'ஐயா! எங்களுக்குப் போதித்தலைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லுவார்:
உங்கள் உள்ளத்திலே, ஏற்கெனவே பாதி உறக்கத்திலே கிடக்கும் அறிவின் உதயத்தை அல்லாமல், வேறெதையும் எந்த மனிதனாலும் உங்களுக்குப் போதிக்க முடியாது.
கோயிலின் நிழலிலே தன் மாணவர் குழுவுடன் அமர்ந்துள்ள ஆசிரியர், தம்முடைய ஞானத்தை அவர்களுக்குத் தருவதில்லை. மாறாகத் தம்முடைய நம்பிக்கையையும் விருப்பத்தையுமே தருகிறார்.
அவர் உண்மையாகவே ஞானமிக்கவரானால், தம் அறிவகத்தின் வாயிலுக்கு உங்களை அழைக்கமாட்டார். மாறாக உங்கள் உள்ளத்தினுடைய, அறிவின் நுழைவாயிலுக்கே வழிகாட்டுவார்.
வான்வெளியைக் கணிப்பவர், உங்களிடம் தம் வான சாஸ்திர ஞானத்தை எல்லாம் போதிக்கலாம். ஆனால், அவர் உங்களுக்குத் தம்முடைய சாத்திர ஞான அறிவைப் பங்கிட்டுத் தர முடியாது.
பரந்தவெளி அனைத்திலும் பரவிக் கிடக்கும் இசை ஞானத்தை எல்லாம் திரட்டி, ஒரு பாடகன் உங்களுக்கு இன்னிசை வழங்கலாம். ஆனால், அப் பாடகன் அவ்விசையைச் சிறை செய்யத்தக்க காதுகளையோ, பண்ணிசைக்கின்ற அவன் குரலையோ உங்களுக்குத் தர இயலாது.
கணிதத்திலே மேதையான ஒருவர் உங்களுக்கு எடைகளையும், அளவைகளையும், அவை சார்ந்த கணித உலகத்தைப் பற்றிய அனைத்தையும் கற்றுத் தரமுடியும். ஆனால், உங்களை அவர் அக்கணித உலகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது.
ஏனெனில், ஒரு மனிதனின் பார்வை மற்றொரு மனிதனுக்குத் தன் சிறகுகளைத் தந்துதவாது.
கடவுளின் உணர்விலே நீங்கள் ஒவ்வொருவரும் தனித்து நிற்பதைப் போலவே, நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றிய அறிவிலும் உலகத்தைப் பற்றிய அறிவிலும் தனித்து நின்றே உணர வேண்டும்.
0 கருத்துகள்