அப்போது மாலைக்காலம் ஆயிற்று. ஆல் மித்ரா என்னும் அத் தீர்க்கதரிசினி, 'இந்த நாளும், இந்த இடமும், பல தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிய உங்களுடைய ஆத்மாவும் வாழ்க என்றாள் . அதற்கு அவர் பேசியவன் நானா? கேட்பவருள் நானும் ஒருவன் அல்லனோ' என்றார் . பின்னர் அவர் கோயிலின் படிக்கட்டுகளை விட்டுக் கீழிறங்கிச் சென்றார். எல்லா மக்களும் அவரைப் பின்தொடர, அவர் கப்பலைச் சென்று அடைந்து, அதன் மேல் தட்டில் ஏறி நின்றார். ஆங்கு நின்று அவர் மக்களை நோக்கித் தம் குரலை உயர்த்திக் கூறத் தொடங்கினார். ஆர்பலீஸ் நகர மக்களே, உங்களை விட்டுப் பிரிந்து செல்லக் காற்று என்னைப் பணிக்கிறது. காற்றைக் காட்டிலும் நான் விரைவு குறைந்தவனே. ஆயினும் நான் போகத் தான் வேண்டும். நாங்கள் துறவிகள், நாடோடிகள்; எப்போதும் தனித்த நெறியைத் தேடுபவர்கள்; எங்கும் ஒரு நாளைக் கழித்த இடத்திலே மறு நாளைத் தொடங்காதவர்கள், மற்றும் உதிக்கின்ற ஞாயிறு மறைந்த மாலைக் கால ஞாயிறு விட்ட இடத்திலே எங்களைக் காண்பதில்லை. நிலம் உறக்கத்தில்...