இறுதி

     அப்போது மாலைக்காலம் ஆயிற்று.

    ஆல் மித்ரா என்னும் அத் தீர்க்கதரிசினி, 'இந்த நாளும், இந்த இடமும், பல தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிய உங்களுடைய ஆத்மாவும் வாழ்க என்றாள் .

    அதற்கு அவர் பேசியவன் நானா?

    கேட்பவருள் நானும் ஒருவன் அல்லனோ' என்றார் .

    பின்னர் அவர் கோயிலின் படிக்கட்டுகளை விட்டுக் கீழிறங்கிச் சென்றார்.  எல்லா மக்களும் அவரைப் பின்தொடர, அவர் கப்பலைச் சென்று அடைந்து, அதன் மேல் தட்டில் ஏறி நின்றார்.  ஆங்கு நின்று அவர் மக்களை நோக்கித் தம் குரலை உயர்த்திக் கூறத் தொடங்கினார்.

    ஆர்பலீஸ் நகர மக்களே, உங்களை விட்டுப் பிரிந்து செல்லக் காற்று என்னைப் பணிக்கிறது.  காற்றைக் காட்டிலும் நான் விரைவு குறைந்தவனே.  ஆயினும் நான் போகத் தான் வேண்டும்.

    நாங்கள் துறவிகள், நாடோடிகள்; எப்போதும் தனித்த நெறியைத் தேடுபவர்கள்; எங்கும் ஒரு நாளைக் கழித்த இடத்திலே மறு நாளைத் தொடங்காதவர்கள், மற்றும் உதிக்கின்ற ஞாயிறு மறைந்த மாலைக் கால ஞாயிறு விட்ட இடத்திலே எங்களைக் காண்பதில்லை.  நிலம் உறக்கத்தில் உள்ள நேரத்திலும் நாங்கள் சஞ்சரிக்கிறோம்.

    நாங்கள்  பிடுங்கிப் போடுதற்கியலாத உறுதியான செடிகளின் விதையை ஒத்தவர்கள்.  எங்களுடைய இதயத்தின் முழுமையான பழுத்த நிலையிலே தான், நாங்கள் புயலால் உந்தப்பட்டுச் சிதறடிக்கப் படுகிறோம்.

    உங்களுடன் கழித்த என் நாள்களோ, மிகச் சில, மற்றும் என் மொழிகளோ அவற்றினும் மிகச் சுருக்கமானவை.

    ஆனால், என் மொழிகள் உங்கள் காதுகளில் இருந்து தேய்ந்து மறைந்தாலோ, என்னுடைய அன்பு உங்கள் நினைவில் இருந்து நீங்கிவிட்டாலோ நான் திரும்பவும் வருவேன்.

    நன்கு செழித்த இதயத்தோடும், உங்கள் ஆத்மாவுக்கு மிக்க பயன் விளைவிக்கும் உதடுகளோடும் நான் மீண்டும் வந்து உரையாடுவேன்.

    ஆம்! நான் பருவத்தோடே வருவேன்.

    என்னை மரணம் மறைத்து விடினும், மகத்தான மோனம் என்னை ஆட்கொண்ட போதிலும் நான் உங்களது அறிவாற்றலைத் தேடிடுவேன்.

    ஆனால், நான் ஒரு பயனுமில்லாமல் உங்களைத் தேட மாட்டேன்.

    நான் பேசியதில் ஏதாவது உண்மை உள்ளதானால், என் சொற்கள் உங்கள் சிந்தனையோடு உறவாடியதைக் காட்டிலும், நான் கூறியதில் உள்ள அந்த உண்மையே தன்னைத் தானே தெளிந்த குரலால் வெளிப்படுத்தும்.

    ஆர்பலீஸ் நாட்டு மக்களே, நான் காற்றோடே பயணம் செய்கிறேன்.  ஆனால், வெறும் சூனியத்துக்குள் அல்லேன் .

    இன்றைய நாள், உங்களுடைய தேவைகளையும் என்னுடைய அன்பையும் நிறைவு செய்யும் நாளாக அமையாமல் போகுமானால், அடுத்த நாளுக்குரிய வாக்குறுதியாகவாவது இஃது இருக்கட்டும். 

    மனிதனின் தேவைகள் மாறுதல் அடைவன .  ஆனால் அவனுடைய அன்பும், அவ்வன்பு தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையும் மாற்றம் அடையாதவையே.



    ஆகையால், மிகப் பெரிய மோன சாம்ராஜ்யத்தினின்று நான் திரும்பி வருவேன் என்பதை உணர்வீர்களாக!

    அதிகாலையில் வயல் வெளியிலே பனி நீரைப் புல் நுனிமேல் எச்சமாக்கி மறைந்துவிடும் மூடுபனி மேல் எழும்பிக் கார் முகிலோடு கலந்து பின்னிப் பின்னர் மழையாகத் திரும்பி வரும்.

    நான் அந்த மூடு பனியைப் போல இல்லாமலில்லை.

    இரவின் அமைதியிலே நான் உங்கள் வீதிகளிலே உலாவினேன் .  என்னுடைய ஆத்மாவோ (உயிராற்றலோ) உங்கள் இல்லங்களின் உள்ளே நுழைந்திருக்கின்றது.

    உங்கள் இதயத் துடிப்போ என் இதயத்திலே இருந்தது.  உங்கள் மூச்சுக் காற்று.  என் முகத்திலே வீசிற்று.  உங்கள் அனைவரையும் நான் அறிவேன்.

    ஆம். உங்கள் இன்பங்கள் துன்பங்கள் அனைத்தையும் நான் அறிவேன்.

    உறக்கத்திலே நீங்கள் கண்ட கனவுகள் எல்லாம் என் கனவுகளே.

    பல நேரங்களில், உங்களிடையே நான் குன்றுகளிடையே அமைந்த ஏரியைப் போல இருந்திருக்கிறேன்.

    உங்கள் உள்ளத்தினது உயர்ச்சியையும், வளைந்த சரிவுகளையும், எண்ணத் திரள்களின் ஓட்டத்தையும், உங்கள் அவாக்களையும் கூட நான் பிரதிபலித்திருக்கிறேன்.

என்னுடைய அமைதியிலே உங்கள் குழந்தைகளின் சிரிப்பொலி அருவியாகவும் , உங்கள் இளைஞர்களின் ஏக்கங்கள் ஆறாகவும் வந்தன.

    அவை என்னுள்ளே ஆழ்ந்து சென்ற பின்னரும் கூட, அந்த அருவிகளும் ஆறுகளும் தம் பண்ணிசைத்தலை இன்னும் நிறுத்தவில்லை.

    ஆனால், சிரிப்பைக் காட்டிலும் இனிமையானதும், ஏக்கத்தைக் காட்டிலும்  மகத்தானதுமான ஒன்று என்னிடம் வந்தடைந்துள்ளது.

    உங்களிடையே வரம்பு அற்றிருக்கும் ஒன்றே அது.

    பரம்பொருளாகிய பேருருவத்தின் பரமாணுவும் தசை நார்களும் அன்றி நீங்கள் வேறல்லர்.  நீங்கள் பாடுகின்ற இசைகள் யாவும் யாருடைய நாத வெள்ளத்திலே வெறும் ஒலியற்ற துடிப்பாக இருக்கின்றதோ?

    அந்த அகண்டாகார உருவிலே நீங்கள் வியாபித்து உள்ளீர்கள்.

    அவனைக் காண்பதன் மூலம் உங்களை நான் கண்டேன்;  அன்பு கூர்ந்தேன்.  அந்தப் பரந்த வெளியிலே இல்லாத எந்தத் தூரத்தைத் தான் அன்பு சென்று அடைய முடியும்?  எந்தத் தோற்றமும் எந்த எதிர்பார்ப்பாலும் எந்த அனுமானமும் அந்த அன்பின் வேகத்தைத் தாண்டிப் போக இயலாது.

    பருத்த மரத்திலே ஆப்பிள் பழங்கள் பழுத்துக் குலுங்கியத்தைப் போலவே, உங்கள் உள்ளேயே அந்த விசுவரூப மானுடம் உள்ளது.

    அவனுடைய வல்லமை உங்களை நிலத்திலே பிணிக்க, அவனுடைய மணம் உங்களைப் பரவெளியிலே உயர்த்த, அவன் தன் சிரஞ்சீவித் தன்மையினால் நீங்கள் இறவாமையை அடைந்துள்ளீர்கள்.

    சங்கிலியிலே உள்ள மிகப் பலவீனமான கரணையைப் போல நீங்கள் பலவீனமானவர்கள் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால், அதிலே பாதி தான் உண்மை.

    சங்கிலியிலே உள்ள மிக வலிவான கரணையைப் போலவும் நீங்கள் வலிவு மிக்கவர்களே .

    உங்களது அற்பச் செயல்களை மட்டுமே கொண்டு உங்களை அளந்தறிவது, பெரிய கடலின் சக்தியை அதன் நுரையின் நோய்மையால் அளந்தறிவதைப் போலவே ஆகும்.

    உங்களது தோல்விகளைக் கொண்டு உங்களை அளந்தறிவது, பருவகாலங்களை அதன் நிலையற்ற தன்மையைக் கொண்டு குற்றஞ்சாட்டுவதையே நிகர்க்கும்.

ஆம்! நீங்கள் ஒரு பெரிய கடலைப் போன்றவர்களே.

    உங்களது கரை ஓரங்களிலே பெரிய கப்பல்கள் அலைகளை எதிர்நோக்கி நிற்கின்றன.  நீங்களோ அந்தக் கடலைப் போலவே உங்கள் அலைகளை விரைவுபடுத்த இயலாது.

    பருவ காலங்களைப் போன்றவர்களே நீங்களும் உங்களது மாரிக்காலப் பருவம் உங்களுக்கு வசந்த காலத்தை மறுதலித்தாலும்.

    உங்களுள்ளே ஓய்வு கொண்டுள்ள வசந்தம் தன் தூக்கக் கலக்கத்திலே புன்னகை பூக்குமே அல்லாமல் அதனால் துன்பம் அடையாது.

    இவற்றை நான், நீங்கள் ஒருவருக்கொருவர், 'இவர் நம்மைப்பற்றிப்  புகழ்ந்து பேசினார்.  நம்மிடையே உள்ள நல்லனவற்றையே இவர் கண்டார் எனப் பேசிக் கொள்வதற்காகக் கூறினேன்' என நினைக்காதீர்கள்.

    நீங்கள் உங்கள் எண்ணத்திலே நன்கு அறிந்தவற்றையே நான் உங்களுக்கு வார்த்தைகளால் உரைத்தேன்.  சொல்லறிவு என்பது வார்த்தைகளற்ற எண்ணத்தின் அறிவுச் சாயலன்றி வேறென்ன?

    உங்கள் நினைவும் என் சொல்லும், நம்முடைய நேற்றைய தினத்தின் ஏடுகளில் இருந்தும், இந்த நிலம் நம்மையோ தன்னையோ அறியாத பண்டைக் கால நாள்களிலிருந்தும், குழப்பத்துடனே இந்தப் பூமி தன்னை மேலுயர்த்தப் பணியாற்றிய இரவுகளில் இருந்தும், மூடி வைக்கப்பட்ட நினைவலைகள் அல்லவோ?

    ஞானிகள் உங்களிடம் தங்களுடைய ஞானத்தை நல்குவதற்கு வருவார்கள்.  ஆனால், நானோ அதை நீக்குவதற்கு வந்தேன்.

    ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எஃது என்பதை நான் அறிந்துள்ளேன் என்பதைக் காணுங்கள்.

    அதுதான் உங்களுள்ளே, தன்னைக் காட்டிலும் அதிகமாகச்  சுரந்து சேகரிக்கின்ற உயிராற்றலின் ஒளிப்பிழம்பு ஆகும்.

    அக்காலத்தில் அதனுடைய விரிவைப் பற்றிய சிந்தனை அற்றவர்களாய் , நீங்கள் உங்கள் நாள்கள் கழிவதைப் பற்றித் துக்கப்பட்டு இருந்தீர்கள்.  இது சவக்குழிக்கு அஞ்சும் உடல் வாழ்க்கையைத் தேடும் உயிர் வாழ்வாகும்.  இங்குச் சவக்குழிகள் இல்லை.  இந்தக் குன்றுகளும் சமவெளிகளும் நமக்குத் தொட்டிலும் படிக்கட்டுகளும் ஆகும்.

    உங்களுடைய முன்னோர்களைப் புதைத்த சமாதியின் பக்கத்திலே உள்ள வயற்புறத்தே நீங்கள் போக நேர்ந்தால், அவ்விடத்தை நீங்கள் உற்று நோக்குவீர்களானால் அந்த இடத்திலே நீங்களும் உங்கள் சந்ததியினரும் கைகோத்து நடனமாடுவதைக் காண்பீர்கள்.

    உண்மையாகவே அடிக்கடி நீங்கள் தன்னுணர்வின்றியே ஆனந்தப் படுகின்றீர்கள்.

    மற்றும் சிலர் உங்களிடம் வந்துள்ளனர்.  அவர்கள், உங்கள் மதத்தின் பேரால் செய்த பொன்னான வாக்குறுதிகளுக்காக அவர்களுக்குப் பொன்னும் அதிகாரமும் அந்தஸ்தும் அளித்தீர்கள்.

    வாக்குறுதியைக் காட்டிலும் குறைந்த ஒன்றே நான் உங்களுக்குக் கொடுத்தேன்.  ஆனால், நீங்கள் என்னிடம் அதிகத் தாராள மனப்பாங்கோடு நடந்து கொண்டீர்கள்.  வாழ்வைப் பற்றிய என் ஆழ்ந்த நீர் வேட்கையை நீங்கள் எனக்கு அளித்தீர்கள்.

    என்னுடைய எல்லாக் குறிக்கோளும் நீர் வேட்கையால் உலர்ந்த உதடுகளாகவும், வாழ்க்கை முழுமையுமே வற்றாத நீர் ஊற்றாகவும் மாறி வடிவம் அடைந்த இதனைக் காட்டிலும் நான் பெறத்தக்க பெரிய பரிசு வேறொன்றும் நிச்சயமாக இல்லை.  இதிலே தான் என்னுடைய மென்மையும் வெகுமதியும் மண்டிக் கிடக்கின்றன.

    நான் எப்பொழுதெல்லாம் நீர் ஊற்றுக்குத் தாகத்துடன் நீர் அருந்த வருகின்றேனோ, அப்போதெல்லாம் அந்த உயிர்ப்புள்ள (ஜீவனுள்ள) தண்ணீர் கூட, தாகம் மிகுந்துள்ளதாகவே இருக்கக் காண்கிறேன்.

    நான் அதைக் குடிக்கும்போது அந்தத் தண்ணீரும் என்னையே குடிக்கின்றது.

    நான் உங்களிடம் வெகுமதியைப் பெற்றுக் கொள்வதிலே நாணம் அடைந்தோ, பெருமை மிகுந்தோ இருந்ததாக உங்களில் சிலர் கருதினீர்கள். 

என் ஊதியத்தைப் பெறுவதில் மட்டுமே நான் மிகவும் வெட்கப்பட்டு இருக்கிறேன்;

    ஆனால், வெகுமதியைப் பெறுவதில் அன்று.  நீங்கள் என்னை உங்கள் பந்தி போஜனத்தின் இடையில் அமர்த்தச் சித்தமாய் இருந்த காலத்தில் எல்லாம் நான் குன்றுகளிடையே பழங்களைத் தின்று கொண்டிருந்தேன்.

    நீங்கள் எனக்கு மகிழ்ச்சியோடு தங்க இடம் அளிக்கக் காத்திருந்த காலத்தெல்லாம் நான் கோயில் பிரகாரத்திலே தூங்கினேன்.  ஆன போதிலும், என்னுடைய பகல்களையும் இரவுகளையும் பற்றி நீங்கள் அன்போடு நினைவு கூராதிருந்ததால் தான் பகலிலே நான் உண்ட அவ்வுணவு இனித்தது.  இரவு நேரத்திலே, என் தூக்கம் இனிய கனவுகளால் சூழப்பட்டு இருந்தது.

    இதற்காக நான் உங்களை மிகவும் வாழ்த்துகிறேன்.  நீங்கள் அதிகமாகவே கொடுத்து இருக்கிறீர்கள்.  ஆனால், நீங்கள் எதையும் கொடுத்ததாகவே அறியவில்லை.

    உண்மையாகவே, கண்ணாடியில் தன்  பிரதி பிம்பத்தைப் பார்க்கும் கருணையும் கல்லாக மாறிவிடுகிறது.   

    தன்னை மிக்க அன்போடு பல சொல்லிப் புகழும் நற்செயலும், சாபத்தின் தாயாக மாறிவிடுகிறது.

    என்னைத் தனித்தவன் என்றும், தன் தனிமையிலே மூழ்கிக் கிடப்பவன் என்றும் உங்களில் சிலர் கூறினீர்கள்.

    நீங்களோ, அவர் கானகத்தின் மரங்களிடையே அன்றி, மனிதரிடையே தம் ஆலோசனை மன்றத்தினை நடத்தமாட்டார் எனக் குறிப்பிட்டீர்கள்.

    மற்றும், குன்றின் உச்சியிலே தனித்தமர்ந்து அவர் நமது நகரத்தைக் கீழ் நோக்கிக் காணுகிறார் என்றீர்கள்.

    உண்மை.  நான் குன்றின் உச்சிக்கும் போனேன்.  மனித நட மாட்டமில்லாத இடங்களில் எல்லாம் நடந்து சென்றேன்.  மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் மிகமிகத் தொலைவில் இருந்துமல்லாமல் எப்படி உங்களை நான் காண முடியும்?

    சேய்மைக்கண்ணி இருந்தால் அல்லாமல் எப்படி ஒருவன் அண்மையில் இருக்க முடியும்.

    மற்றும் உங்களுள் சிலர் என்னை நோக்கிக் கூறாமல் கூறினார்கள்.

    புதியவரே , அன்னியரே , எட்ட முடியாத உயரத்தை விரும்புகின்றவரே.

    நீங்கள் ஏன் கழுகுகள் கூடு கட்டுகின்ற மலைமுகட்டை இருப்பிடமாகக் கொண்டீர்கள்? 

    பெற முடியாததை நீங்கள் ஏன் தேடுகின்றீர்கள்?

    உங்கள் வலையிலே எப்படிப்பட்ட புயலை நீங்கள் சிறைப் படுத்துவீர்கள் ?

    விண்வெளியிலே எந்த நுண்ணிய புள்ளினத்தை  நீங்கள் வேட்டையாடுவீர்கள்?

    இவ்விடம் வந்து எங்களிலே ஒருவராகக் கலந்திருங்கள்.

    கீழ் இறங்கி வந்து எங்கள் உணவினால் உங்கள் பசியையும், எங்கள் கொடிமுந்திரிச் சாற்றால் உங்கள் தாக்கத்தையும் தணித்துக் கொள்ளுங்கள்.  இவ்வண்ணமாகத் தத்தம் ஆத்மாவின் ஏகாந்தத்திலே சிலர் கூறினார்கள். 

    அவர்களது அந்தத் தனிமை மிகவும் ஆழமாகச் சென்றிருந்தால், நான் உங்களுடைய இன்ப துன்பத்துக்கான காரணத்தையே தேடினேன் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

    விண்ணில்  உலாவுகின்ற உங்கள் மகத்தான ஆத்மாவையே நான் வேட்டையாடினேன்.  ஆனால், வேட்டையாடுபவனே வேட்டை ஆடப்படுகிறான்.  ஏனெனில் என் வில்லிலிருந்து எய்யப்பட்ட அம்புகளில் பல, திரும்பவும்  என் நெஞ்சத்தை ஊடுருவித் தேடவே என் வில்லில் இருந்து வெளிப்போந்தன.

    பறப்பனவே ஊர்வனவாகவும் உள்ளன.

    ஏனெனில், மேலே பறக்கும் போது கதிரவன் ஒளியால் கீழ் விழுகின்ற என் சிறகுகளின் நிழலே ஊர்ந்து செல்லும் ஆமையாகவும் உள்ளது.

    நம்புகின்ற நானே சந்தேகப் படுபவனாகவும் இருக்கிறேன்.

    ஏனெனில், பல நேரங்களில் உங்களிடத்தில் அதிக நம்பிக்கை நான் கொள்ளவும், உங்களைப் பற்றிய முழு அறிவையும் நான் அறியவும் என்னுடைய இதயப் புண்ணிலேயே நான் விரலிட்டுக் கிண்டி என் இதயப் புண்ணை மேலும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

    இந்த நம்பிக்கையோடும் இந்த அறிவோடும் நான் உங்களுக்குக் கூறுகிறேன்.

    நீங்கள் இந்த உடலால் மூடப்பட்டவர்களோ, வீடுகள் வயல்கள் ஆகிய எல்லைக் கோட்டுக்கு உட்பட்டவர்களோ அல்லர்.

    நீங்கள் என்கின்ற அப்பொருள், மலைமேல் வசித்துக் காற்றிநூடே திரியும்.

    அது கதகதப்புக்காகக் கதிரவன் ஒளியிலே ஊர்கின்ற ஒன்றோ, தற்காப்புக்காக இருளிலே குழிபறிக்கும் ஒன்றோ அன்று.

    அது சுதந்தரமாக ஓர் ஆற்றல்.  நிலஉலகையே தன் கூட்டுக்குள் அடக்கி வெட்ட வெளியிலே சஞ்சரிப்பதாகும் அது. இவை தெளிவற்ற சந்தேகத்துக்கு இடனான சொற்களாக இருப்பின், நீங்கள் இவற்றை விளங்கிக் கொள்ள முயல வேண்டா.

    சந்தேகமும் குழப்பமும் எல்லாப் பொருள்களுக்கும் தொடக்கமே.  ஆனால் அவையே முடிவல்ல.

    நீங்கள் என்னைத் தொடக்கம் என்றே நினைவு கூர்வீர்கள்  என மகிழ்கிறேன்.

    இந்த வாழ்வும் எல்லா உயிர்களும், மூடுபனியால் சூழப்பட்டு உள்ளனவே அன்றி, பளிங்குக் கற்களால் மூடப்பட்டன அல்ல.

    ஆயினும் பளிங்குக் கற்களும், தேய்மானத்தினால் மூடு பனியே என்பதை யார் அறிவார்?

    என்னை நீங்கள் நினைவு கூர்தலினால் நான் உங்களை நினைக்க இது உதவும்.  உங்களுள் மிக்க பலவீனத்தோடும் குழப்பத்தோடும் காணப்படும் ஒன்றே வன்மை மிக்கதும் திட சித்தம் உடையதும் ஆகும்.

    உங்களுடைய மூச்சன்றோ உங்கள் எலும்புகளையும் யாக்கையையும் நேர் செய்து உறுதிப்படுத்தியது.

    உங்களுள் ஒருவரும் கண்டதாக, உங்கள் நினைவில் நிலைத்திராத ஒரு கனவன்றோ, உங்கள் நகரத்தை நிர்மாணித்து, அதில் உள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்தியது.

    நீங்கள் உங்கள் மூச்சின் அலைகளைக் காணக் கூடுமானால், வேறு எதையும் காணுவதற்கு நீங்கள் இணங்க மாட்டீர்கள்.

    அதைப் போலவே, நீங்கள் கனவின் இரகசிய ஒலியையும் கேட்கக் கூடுமானால், மற்றெந்த ஒலியையும் கேட்க விரும்பமாட்டீர்கள்.

    ஆனால், நீங்கள் அவற்றைக் காண்பதுமில்லை; கேட்பதுமில்லை.  அதுவும் நல்லதே!உங்கள் கண்களை மூடிய மேக படலமாகிய திரை, அதைப் பின்னிய கைகளாலேயே விலக்கப்படும்.

    மற்றும் உங்கள் காதுகளை அடைத்துக் கொண்டுள்ள களி மண்ணும் எந்த விரல்களால் அங்கு அடைக்கப் பட்டதோ, அதே விரல்களால் துளைத்தெடுக்கப்படும்.  அதன் பின்னர் தான் நீங்கள் பார்ப்பீர்கள்.  பின்னரே நீங்கள் கேட்க முடியும்.

    ஆயினும், நீங்கள் முன்னர்க் குருடாக இருந்ததற்காக வேதனையோ, செவிடாக இருந்தமைக்காக வருத்தமோ பின்னர் அடையமாட்டீர்கள்.

    ஏனெனில் அந்தப் பிற்றை நாளில் தான்.  நீங்கள் எல்லாப் பொருள்களிலும் பொதிந்துள்ள இரகசியத்தின் காரணத்தை நன்கு அறிவீர்கள்.  எனவே, அக்காலத்திலே ஒளியை வாழ்த்துவதைப் போலவே இருளையும் வாழ்த்துவீர்கள்.

    இவற்றைக் கூறிய பிறகு அவர் தம்மைச் சுற்றி நோக்கினார்.  கப்பல் தலைவன் சுக்கான் பக்கத்திலே நின்றபடி பாய் விரிக்கப்பட்ட பாய் மரத்தையும் நெடுந்தொலைவையும் மாறி மாறிப் பார்ப்பதைக் கண்டார்.

    என்னுடைய கப்பல் தலைவர் அமைதிக்கு மேல் அமைதியானவர்.

    காற்றோ வீசுகின்றது.  விரிக்கப்பட்ட பாயோ அமைதியற்றதாய்ப்  பட படக்கின்றது.

    மாலுமியோ உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்.

    ஆனால், என் கப்பல் தலைவரோ, என் அமைதிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

    பரந்த கடலின் கூட்டு இன்னிசையைக் கேட்ட என் கப்பல் பிரயாணிகளும், என் சொற்களையும் அமைதியோடு கேட்டனர்.

    இனி அவர்களும் நீண்ட நேரம் காத்திருக்க மாட்டார்கள்.

    நான் சித்தமாக இருக்கிறேன்.

    வாய்க்கால் கடலை வந்தடைந்து விட்டது.  மற்றும் ஒரு முறை அன்னை பராசக்தி தன் மகனைத் தன்  மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.

    ஆர்பலீஸ் நாட்டு மக்களே!  உங்களுக்கு என் இறுதி வணக்கம்.

    இந்த நாள் முடிவுற்றது. 

    தண்ணீரில் மலர்ந்துள்ள தாமரை தன்னுடைய மறுநாளைத் தன்னுள் கொண்டு கூம்புவதைப் போல் இந்த நாளும் முடிவடைந்தது.

    இங்கு நமக்குக் போதுமானதன்று.  குறைவானது என்றால் நாம் மறுபடியும் ஒருங்கே இணைந்து இங்கு வந்து ஒரு சேர நம் கைகளைக் கொடுப்போன் முன் நீட்டுவோம்.  நான்திரும்பவும் உங்கள் முன் வருவேன் என்பதை மறவாதீர்கள்.

    இன்னும் சிறிது நேரமே, என்னுடைய ஏக்கமுற்ற ஆசைகள் புழுதியையும் நுரையையும் மற்றோர் உடலுக்காகச் சேகரித்து விடும்.

    இன்னும் சிறிது காலமே - காற்றின் மீது ஒரு விநாடி ஓய்வே- பின்னர் மற்றொரு தாய் என்னைச் சுமந்து ஈன்றெடுப்பாள் . 

    உங்களுக்கும் உங்களோடு கழித்த என் இளமைக்கும் என் இறுதி வணக்கம்.

    போய் வருகிறேன்.

    நேற்றுத் தான் நாம் ஒரு கனவில் சந்தித்தோம்.

    என்னுடைய தனிமையிலே நீங்கள் பண் இசைத்தீர்கள்.

    நானோ உங்கள் ஆசைகளினால் ஆகாயத்தில் கோட்டை கட்டினேன் .

    ஆனால், இப்போது நம்முடைய உறக்கம் மறைந்தோட, கனவு முடிவெய்த, பொழுது விடிந்து வெகு நேரமாகிவிட்டது.

    உச்சிப் பொழுதின் நெருக்கம் நம்மீது விழ , நம்முடைய பாதி உறக்கம் முழுநாளாக மாறிவிட்டது.  நாம் பிரிய வேண்டியதே!

    நினைவினது விடியற் காலத்திலே , மற்றுமொரு முறை நாம் சந்திக்க நேர்ந்தால், மறுபடியும் நாம் கூடிப் பேசுவோம்.  நீங்களோ எனக்காக, மிக ஆழ்ந்த பண்  இசைப்பீர்கள்.

    நம்முடைய கைகள் மற்றொரு முறை வேறொரு கனவில் சந்திக்குமானால் நாம் இன்னுமொரு கோட்டையை  ஆகாயத்தில் கட்டுவோம்.

    இப்படிக் கூறியபடியே, அவர் கப்பல் தலைவனுக்குக் குறிப்புணர்த்த, கப்பல் செலுத்துவோர் நங்கூரத்தைத் தூக்கிக் கப்பல் தளையை நீக்கிச் செலுத்த அவர்கள் அனைவரும் கப்பலூடே கிழக்கே பிரயாணம் செய்தனர்.

    கரையிலிருந்த ஆர்பலீஸ்  நகர மக்கள் இடையிலே இருந்து, ஒரே இதயத்தில் இருந்து எழுப்பிய குரலொத்து, ஒரு சோகக் குரல் மேல் எழும்பி, வான் அந்தகாரத்துள் கலந்து, ஒரு பெரிய எக்காள ஒலிபோல் கடல் மீது மிதந்து சென்றது.

    ஆல்மித்ரா மட்டுமே, கப்பல் மூடுபனியூடே சென்று மறையும் மட்டும் அதைப்  பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தாள்.

    எல்லா மனிதர்களும், அங்கிருந்து நீங்கிச் சென்ற பின்னர் அவள் கடற்கேணியின் சுவர் மீது, அத் தீர்க்கதரிசி கூறியதை தன் உள்ளத்தே ஆழ்ந்து சிந்தித்தபடி நின்றிருந்தாள்.

    இன்னும் சிறிது காலமே, காற்றின் மீது ஒரு விநாடி ஓய்வே - பின்னர் மற்றொரு தாய் என்னைக் கலந்து பெற்றெடுப்பாள் .

    


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்