வணக்கம் வள்ளுவ!

 எட்டாவது சீர்....

ஏழாவது சுரம்
கதவை இழுத்து மூடியதால்
எட்டாவது சுரம் 
ஏமாந்து திரும்பியிருக்கலாம்

ஆனால் இசை தேவதை
ஆலாபனை நிறுத்திவிட்டுக்
கதவைத் திறக்க
ஓடியிருக்க மாட்டாளா?

ஏழு வண்ண வில்
எழுதி வைத்திருக்கலாம் வாசலில்
'எட்டாவது வண்ணத்திற்கு
இங்கு இடம் இல்லை!'

அதற்காக
உறங்க முடியாத வானம்
நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்
வருந்தி அழுதிருக்காதா?

வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த 
எட்டாவது கிழமை 
ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்

அதனால் 
மாதத்தின் மார்பு துடித்து
வெடித்திருக்காதா?

வள்ளுவ! 
எட்டாவது சீர்
உன்னைத் தேடி வந்தபோது
என்ன செய்தாய்?

'போடுவதற்கு ஒன்றுமில்லை
போ'
என்று
வாசல் யாசகனை
வீடுகளில் விரட்டுவதுபோல்
விரட்டி விட்டாயா?
எட்டாவது சீர்
ஏன் உனக்குத் தேவைப்படவில்லை?

யாப்பு
கூப்பிட்டு மிரட்டியதால்
ஏற்பட்ட அச்சமா?
ஏழு சீர்களிலேயே
ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று
முச்சீரடியில் உனக்கும்
மூச்சு முட்டியதா?l

'காசும்' 'பிறப்பும்'
உன்முன் வந்து கண்களைக் 
கசக்கினவா?

'நாளும்' 'மலரும்'
நச்சரித்தனவா?

இல்லை,
எட்டாவது சீர்தான்
அடுத்த குறளின் முதற் சீரா?

அப்படியே ஆனாலும்
கடைசிக் குறளின் காலடியே
எட்டாவது சீர் ஒன்று
தோளில் என்னைத் தூக்கிக்கொள்
என்று கெஞ்சியிருக்குமே!

கடலின்
கடைசி அலையின்
தாகத்தைத் தணிப்பது என்வேலை
இல்லை என்கிறாயா?
சிந்தனைகளை எண்ணியவனே
நீ
சீர்களை எண்ணவில்லையோ?

உனக்கு
எண்ணங்களே முக்கியம்
எங்களுக்கோ
எண்ணிக்கையே முக்கியம்.

ஏழு சீர்களில்
சொன்னதே எதற்கு என்று
எண்ணிக் கொண்டிருக்கிறேன்...
ஏன்
எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு
என்கிறாயா?
போதைப் 'பொருளுக்கு'
அறத்தையும் இன்பத்தையும்
அவசரமாய் அடகு வைப்பவர்கள்
நாங்கள்
அப்படித்தான் இருப்போம் .

வீடு தேடுகிற
வெறியில் 
அறம் பொருள் இன்பத்தை 
மிதித்துக் கொண்டு
ஒடுகிறவர்கள் நாங்கள்
அப்படித்தான் இருப்போம்

இலக்கணக்காரன்
இப்போது எப்படி ஏங்குகிறான் 
தெரியுமா?

'எட்டாவது சீருக்கு
இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்
சொல்லியிருப்பாயே!'

'வாய்ப்புள்ளவன்
அந்த ஒரு சீரில் சிந்தித்து
வரிகளைச் சமப்படுத்தட்டும்
என நான்தான் 
விட்டு வைத்திருக்கிறேன் ' என்கிறாயா?

என்னோடு 
நிறைவடைந்து விடவில்லை...
சிந்திக்க இடம்
இன்னும் உண்டு என்பதைக் 
கோடி காட்டுகிறாயா?

உண்மையின் 
உள்ளத்திலிருந்து பேசுபவர்
எவரோ அவரே - நீ 
எழுதாது விட்ட எட்டாவது சீரா?

ஆனால்
வள்ளுவ!

எட்டாவது சீர்கள் எல்லாம்
இப்போது உன் சிலை முன் 
உண்ணாவிரதம் இருக்கின்றன. 
என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்
நீ வந்து இன்னொரு திருக்குறள்
எழுதும்போது
ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!

வள்ளுவர் வழங்கும் விடுதலை

தாயாய், தந்தையாய்,
மகனாய், மகளாய், மாமனாய்,
அத்தையாய் மானுடத்தை 
வளர்த்தெடுக்க வந்தவரில்லை
வள்ளுவர்.
இவ்வுறவுகளில் எல்லாம் 
இருப்பதும் இல்லாமல் இருப்பதுமான 
மனுசியை , மனிதனைக் கண்டெடுக்க, 
வளர்த்தெடுக்க வந்தவர் அவர்.
ஆள்பவனாய், ஆளப்படுபவனாய்,
காவலனாய், நீதிபதியாய்,
உழைப்பவனாய், உறிஞ்சுபவனாய்
மானுடத்திலிருந்து 
பதவியர்களை, பாட்டாளிகளை
உரித்தெடுத்து வைப்பதற்கு 
வந்தவரில்லை வள்ளுவர்....

வள்ளுவர் 
வந்தது மானுடத்தை விடுதலை செய்ய!
உறவுகளால் ஆகும் அன்பைவிட
அன்பினால் ஆகும் உறவே
உயர்ந்தது!
வள்ளுவர்
மனிதனை மீட்டெடுக்கப் போராடினார்.

கடவுளையே கோயில்களிலிருந்து 
விடுதலை செய்தவர் அவர்;
குருக்கள், குடமுழுக்குகள், தட்சிணை,
பிரசாதம், உண்டியல், உற்சவம் எல்லாவற்றையும்
பொறுத்துக் கொண்டு
கோயிலில் சிறைபட்டுக் கிடந்த 
கடவுளை வள்ளுவர் விடுதலை செய்தார்.
செம்பிலிருந்தும் கல்லிலிருந்தும்,
வள்ளுவர் 
கடவுளை விடுதலை செய்தார்.

ஆனால்
திருந்தாத மக்கள் 
கடவுளைக்
கைதியாக்கித் 
தண்டித்துக் கொண்டிருக்கின்றனர்
இன்னும்...
வள்ளுவர் 
மலைகளோடு போராடவில்லை
உயரங்களை விடுதலை செய்ய;

பூமியோடு போராடவில்லை
விதைகளின் கதைகளை விடுதலை செய்ய;

வானத்தோடு போராடவில்லை
திசைகளை விடுதலை செய்ய;

முப்பதாயிரம் விளக்குகள் 
வள்ளுவர் மூளையில் எரிந்து கொண்டிருந்தன;
உறங்க முடிந்ததில்லை அவரால்.

தெருக்களிலேயே
ஊர்களைப் புதைப்பதுபோல்
விளக்குகளிலேயே 
வெளிச்சத்தைப் புதைப்பதுபோல்
மனிதனை 
மனிதனுக்குள்ளேயே 
வாழ்க்கை புதைத்தது;
பார்த்த
வள்ளுவர் உள்ளம் பதைத்தது.






விபத்துக்களால்
இறந்தவர்களை விட இரக்கத்திற்கு
உரியவர்கள்
விபத்துக்களாய்,
விபத்துக்களால் 
இருந்து கொண்டிருப்பவர்கள்!

வள்ளுவரின் உறங்காத 
இரவுகளிலிருந்து ஊற்றுக்கள்
கண் திறந்தன....

காலம்,
பகல் இரவுகளைத் தரமுடியும்;
வாழ்க்கையைத் தரமுடியுமா?

காலம்,
பிறப்பு இறப்புகளைத் தரமுடியும்;
வாழ்க்கையைத் தரமுடியுமா?

காலத்தையும் 
வாழ வைக்கும் மனிதன் 
காரணங்களால் மிரட்டப்படுகிறான்;
காரியங்களால் 
வாயடைத்து வைக்கப்படுகிறான்.

'இலை உதிர் காலம் 
எனக்குத் தெரியாது'
எந்த மரம் இப்படிச் சொல்லும்?

'வசந்தம் வருவதும் போவதும்
யாருக்குத் தெரியும்?
எந்தக் குயில் இப்படிச் சொல்லும்?

'கோடைக் காலம்
எனக்குத் தெரியாது'
எந்தப் பங்குனி இப்படிச் சொல்லும்?

'மாரிக் காலம் பற்றி 
எங்களுக்குத் தெரியாது'
எந்தக் குளமும் ஏரியும் இப்படிச் சொல்லும்?

மனிதனுக்கு மட்டுமே 
வாழ்க்கையின் வெப்பம், ஈரம்,
நிறம், குணம், மணம்
எதுவும் தெரியவில்லை!

மனிதனை விடுதலை செய்யக் 
கடவுளால், அரசாங்கத்தால் ,
படை, குடி, கூழ், அமைச்சால் முடியாது.

பின்?
மனிதனை 
மனிதனே விடுதலை செய்யமுடியும்!

விடுதலைப் போரில் இறங்கும் 
ஒவ்வொருவர் கையிலும் வள்ளுவர்
ஓர் ஆயுதம் தருகிறார்...

அந்த ஆயுதம்,
கிண்ணமான பின்னும் அதைவிட்டு
விலகாத வெள்ளியைப்போல் 
பானையான பின்னும் அதைவிட்டு
விலகாத மண்ணைப்போல்
வென்ற பிறகும் மனிதனை விட்டு
விலகாத ஆயுதம்...
அன்பு.

தன்மைகளும் உண்மைகளும்

ஒளியாய் இருப்பதும்
ஒளியைத் தொடுவதும்
அறிவென அறிவோம் வள்ளுவ!

அறிவது அறிவென நாங்கள் 
அறிந்தாலும்
அறிவது எப்படியென்று அறிவித்தவன் நீ!

பொருள்களின் பெயர்களில் 
பொருள்கள் இல்லை!
ஆம்!
ரோஜாவின் பெயரில் ரோஜா 
இருக்காதுதான்!

தண்ணீர் என்னும் பெயரைப் 
பிழிந்தால் 
ஒருசொட்டுத் தண்ணீரும் 
தராதுதான்!

ஆனால்
பொருளில் இருக்கும் 
பொருள் தெரிந்தாலும் 
பொருள் தெரியாது என்றாய் நீ!

ஏனெனில் 
பொருளின் பொருளை மறைக்கும் 
பொருள்கள்!

மெய்ப் பொருளின்மேல்
பொய்ப் பொருள்கள் அடைஅடையாய்க் 
கட்டி,
தாமே மெய்ப் பொருளென 
மருட்டும்;....
காலத்தைக் கையகப்படுத்தும்
முயற்சிகளில் முனையும்....

கருத்துக்கள் 
வளர்வதைவிட 
கருத்துக்கள் பற்றிய கருத்துக்கள் 
வேர்கள் இல்லாமலேயே 
வேகமாய் வளர்ந்து விடுகின்றன.
மூலவிதையும் 
தெரிவதில்லை;
மூலவிதையிலிருந்து முளைத்ததும்
தெரிவதில்லை.


அப்போது கேட்பேன்...

நிலாவுக்கு
அர்த்தம் சொன்னார்கள்;
முகம் என்றும் முறுவல் என்றும் 
கன்னம் என்றும் புரிந்து,
நிலா என்னவென்றும் புரியாமல்
போனது.

கடல் என்பதற்குக்
கருத்துரை கேட்டேன்;
கவிதை, காதலி உள்ளம்,
உப்புத் திடல், கப்பல் வீதி
இப்படிக்
கடல் எனக்குத் தெரியாதபடி 
கண்டதைக் கொட்டி
மூடிவிட்டனர்.

பூ
என்ன என்பது எனக்குப்
புரிந்தபோதும்,

பொருள் சொல்ல வந்தவர்கள்,
'குழந்தைகள் கன்னம்,
குமரிகள் சிரிப்பு,
வண்டின் படுக்கை,
மதுக்கிண்ணம், வாசவிடுதி....'
என்னென்னவோ சொல்லிப்
பூவுக்கு 
நெடுந் தொலைவில்
என்னை 
இழுத்துக் 
கொண்டு
போய்
நிறுத்தினார்கள் -

'அம்மாவை'
அர்த்தப்படுத்தி வார்த்தைகளால் 
கூறுபோட்டுக் கொடுத்தார்கள்
துண்டு துணுக்குகளாய்த்
தெறித்து விழுந்தவளைத் 
திரட்டிச் சேர்க்க முடியாமல்
திணறினேன்.

இப்படித்தான் 
வள்ளுவர்க்குப் பொருள் சொல்ல
வந்தவர்கள்,
வள்ளுவர்க்குப் பொருள்
பரிமேலழகர் என்றார்கள்,
வள்ளுவர்க்குப் பொருள் 
மணக்குடவர் என்றார்கள்....
வள்ளுவர்க்குப் பொருள் 
மற்ற மற்ற மற்றையவர்கள் 
என்றார்கள்.

வள்ளுவர்க்குப் பொருள்
வள்ளுவர் இல்லை என்றானபின்
வள்ளுவரை 
ஏன் நான் படிக்க வேண்டும்?

தண்ணீரின் பொருள் 
தண்ணீராக இல்லாவிட்டால்
அது
என் தாகத்தைத் தணிக்குமா?

எப்போது
எனக்கு வள்ளுவரின் வள்ளுவர்
கிடைப்பார்...?
அப்போது வள்ளுவரைக் கேட்பேன்
"எப்போது
எனக்கு நான் கிடைப்பேன்?"

வள்ளுவர் வருந்தினார்

நெஞ்சுக்குள்
நிலாவை அழைத்துவரும் நட்பு,
உணர்வுக்குள்
நதிகளை உற்பத்தி செய்யும் நட்பு,
வள்ளுவர் எழுசீர்களில் 
இதழ் மலர்ந்திருப்பது

வார்த்தைகளால்
அர்த்தம் இழக்கும் அந்த நட்பை
அவர் அவரவர் 
உணர்வுகளால் 
பதவுரைப் படுத்திக் கொள்ளச் சொன்னார்.

நாறிக் கிடக்கும்
மனித உறவுகளில் இன்று
நட்பின் நரம்புகளில் அழுகிப் போய்விட்டது
இதயத்தின் இசை.

நிபந்தனைகளில்,
நிர்பந்தங்களின் ஒப்பந்தங்களில்,
கண்ணீர் வெடிக்கும் நேயம்,

ஒரு சமயம்,
கடல்களைப் பொறாமைப்படச் செய்திருக்கிறது 
அரூப அகல நீள ஆழங்களால்.

ஒருவருக்குத் தெரியாமல் 
ஒருவர் சட்டைப் பையில் ஒருவர் போய்
உட்கார்ந்து
சில்லறை சுருட்டும் மனிதர்கள்
வெளியே வந்ததும்
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் 
கட்டுமானம் செய்த உதாரணத்தை 
எட்டி உதைத்தார்கள்.

நட்பாவது 
வெங்காயமாவது 
நமக்கவரால் என்ன இலாபம்
என்பவர்கள்
வள்ளுவ வாசகத்தின் உள்ளே புகுந்து,
இதயங்களை இணைக்க 
அவர் தயாரித்து வைத்த ஈரச்சங்கிலியைச் 
சிதைத்தனர்.
ஒருகண்ணி
வள்ளுவர் கைப் பனையோலைமேல் விழுந்து 
புகைந்தது.

அறிவற்றவர்கள்; கல்லாதவார்கள்
நட்புக்கு 
அருகதை அற்றவர்கள் என்று பேசிய 
வள்ளுவர் 
பேதைகளின் வெளிப்படாத வெகுளிக்கு 
ஆளானார்.

அவர்களிடம் 
மன்னிப்புக் கேட்க வள்ளுவர் 
புறப்பட்டபோது,
கற்ற முட்டாள்களும், கெட்டவர்களும்
அவர் புகழ்க் கடலைக் 
கையகலக் குட்டையாகச் சுண்டவைத்து 
ஆவியாக்கிவிட அவசரப்பட்டனர்.

பேதையின் நட்பைவிட 
அறிவுடையவன் பகை மேலானது
என்று வள்ளுவர்
கலங்கிய உள்ளத்தோடு,
தவித்துக் கிடந்தார் அன்றைய இரவுமுழுவதும்.
அவர்
கண்ணுக்கு வெளியே தவித்த 
தூக்கத்தின் உடம்பெங்கும் முள்கள்!

வைகறையை, அந்தியை, வானவில்லை
விற்றுக் 
காசாக்கத் துடிக்கும் கற்றவர்கள் 
நட்பின் வண்ணங்களைப்
பாதுகாப்பார்கள் என்று நம்பியது 
தப்பாகப் போனதற்கு வருந்தினார் வள்ளுவர்.

நட்புக் குறித்த 
அதிகாரங்கள், நம்பிக் கொண்டிருந்தன 
தேவையான 
திருத்தங்களோடு வள்ளுவர் தமக்குப் 
பாதையைத் 
திறந்து வைப்பாரென்று!

ஈத்து உவக்கும் இன்பம் 

இதயம் இருந்தால்
இதயத்தில் ஈரம் இருந்தால் 
விரல்களே கிளைகளாகும்
நகங்களும் கனிகளாகும்.

உள்ளங் கையின் ரேகைக் கொடியிலும்
வாசப்பூக்கள் ஆயிரம் பூக்கும்.

மனிதருக்காக மற்றைய உயிர்களுக்காக 
மனத்தில் ஒற்றைச் சாளரம் திறந்தால்,
கதவு திறந்துவந்து
புகழ்த் தேவதை கட்டியணைப்பாள்.

வான மழையின் வயிற்றில் பிறந்தவன் 
தானம் கொடுப்பதில்லை;
தன்னையே கொடுக்கிறான்.

கடலின் மூத்த சகோதரன் அவன்,
வாழ்க்கைக் கரைகளில் அதிரும் கவலைக்
குரல்களைக் கண்ணீரோடு கேட்கிறான்.

காற்றுக்குத் தெரியாமல் 
காடுகள் அழுதால்கூடக்
கண்டுபிடித்து விடுகிறான்

அலைகளுக்குத் தெரியாமல் 
நதிகள் புலம்பினாலும் 
'நான் இல்லையா?' என்று கேட்டு 
அருகில் ஓடுகிறான்

அவலங்களின் அதிகாரத்தை அழிக்கக் 
கடிவாளம் பூட்டாத கருணையை 
ஏவி விடுகிறான்

சுயநலத்தால் சூரியன்
வைகறைகளை அலமாரிக்குள் வைத்துப் 
பூட்டுவதில்லை;
உயிர்களின்மீது
ஓயாமல் தன்னை இறைத்துக் 
கொள்கிறான்.

இரவுகளில் தனது நிழலை 
நிரப்பி வைக்கிறான் உறக்கங்களில் 

நட்சத்திரத்தின் உள்ளமும் 
சின்ன மின்மினியின் உள்ளமும் 
ஒரே பரிமாணம்!
ஒளி ஊற்றுகள் திறக்கும் அவற்றைப் 
போற்றும் இரவின் பாடலும் 
ஒரே நிறத்தில்தான்!
ஒரே எடையில்தான்!

வண்ணங்களை 
ஒளித்து வைக்கத் தெரியாத
பட்டாம் பூச்சிகளையும்,
வார்த்தைகளின் வாயடக்கி வைத்துவிட்டு 
முகம் திருப்பிக் கொள்ளாத 
பூக்களையும் பார்த்த பிறகும் 
கடுகுக்குள் புகுந்து 
கதவை மூடுபவன் மனிதனா என்ன?

நிலாவைக் கண்டு 
நெஞ்சம் மகிழ வேண்டுமானால் 
நரிகளுக்கு 
நிலாவிலிருந்து எலும்புகள்
விழ வேண்டும்!
நரிகளை
ஆசை நரம்புகளில் வளர்ப்பவன் 
நல்லதாய் எவருக்கும்
எதையும் கொடுப்பதில்லை.
அவனைத் தொட்ட மரணம்,
குளிக்காமல்
அடுத்த ஆளைத் தொடுவதே இல்லை!

படுக்கையில் பணவாடை இல்லாவிட்டால்
சிலருக்குத் தூக்கமே வராது;
அவர்கள் அருகே போனால்
பிணவாடை அடிக்காமல் இருக்காது.

மனித நேயத்தை மறுதலித்தவன் 
ஒவ்வொரு காசுக்குள்ளும் தன்னைப் 
புதைத்து விடுகிறான் 

புகழ் புறக்கணித்த தெருக்களில்
தனது பிணத்தை விற்றுப் பணம் சேர்க்க 
அலைந்து திரிகிறான்

இறந்த வீணையின் 
எலும்புகளிலிருந்துகூட 
இசை 
அதிர்ந்து கொண்டிருக்கும்

வற்றிய நதிகளில்கூட 
வாடிய பயிர்களின் நினைவுகள் 
அலையடித்து ஓடிக்கொண்டிருக்கும்
இதயம் இருப்பவன் எப்போதும்
இல்லை என்பது இல்லை;
அவன் கல்லறைகூடக் 
கருணை பிறக்கும் கருவறையாகும்

ரோஜாவின் ஒவ்வோர் அத்தியாயத்திலும்
அதன் உள்ளம்
துடித்துக் கொண்டிருப்பதுபோல்,
வள்ளுவச் சாளரம் ஒவ்வொன்றிலும்
உலகைத் தொடும் உண்மையின் பார்வை 
ஊற்றெடுப்பதுபோல்,
ஈகையின் இரத்தநாளம் ஒவ்வொன்றிலும்
பாய்ந்து பெருகுவது
இன்பம்!

தேரில் அன்று
பயணம் போனபோது அடைந்ததைவிட
அதிக இன்பத்தை,
அதை முல்லைக் கொடிக்கு நிறுத்திவிட்டு
நடந்தபோது பெற்றான் பாரி!

அன்று நின்றுவிட்ட தேர் 
கால காலமாய்க் கவிதைக்குள்ளும் 
நமக்குள்ளும் 
ஓடிக் கொண்டிருக்கிறது!

சங்கப் பாட்டின் மாரிக்கால நாள்களுக்குள் 
நான் நடுங்கும் போதெல்லாம் 
போர்வையோடு பேகன் 
வருகிறான் என்முன்.

ஈர இழைகளால் நெய்யப்பட்டிருந்தும் 
அந்தப் போர்வை இந்த நாள்வரை 
இற்றுப் போகவில்லை!
ஆடும் மயில்கள் அத்தனையும்
அதற்கு உத்தரவாதம்.

மரணவிலக்கு மாத்திரை
அருநெல்லி என
அறிந்திருந்தும்
தமிழ் ஔவைக்கு அதனைத் தந்தான் 
தான் உண்ணாமல் அதியன்.

ஔவையும் வாழ்கிறாள் 
அதியனும் வாழ்கிறான் 
இடையில் இருந்து அந்த ஈகையும் 
இன்னும் வாழ்கிறது!

உள்வாங்கிய மூச்சை
உடனே வெளிவிடுவதுபோல்
ஈட்டிய பொருளை
எடுத்துக் கொடுப்பதே வாழ்க்கை.


ஆயினும் ஒரு மனிதனை அழித்து
வள்ளலாக்குவதும்
ஒரு மனிதனை அழித்து
வறியவனாக்குவதும் பணம் எனில் 
அவசர அவசரமாய்
அந்தப் பணத்தை அழித்து
மனிதனை மீட்போம்.

சுயமரியாதை மேல்
சூடுபோடும் ஈகையைவிட 
வாழ்வைக் கவுரவிக்கும்
வறுமை மேலானது

ஈகையில் இன்பம்
இருக்கிறதென்பதற்காக ....
வள்ளல்கள் வாசலில் 
ஏழைகளை நிறுத்துவது 
என்ன நியாயம்?

வஞ்சியாது கொடுப்பவனிடம் 
யாசகம் பெறுவதும் ஓர் அழகென்று
சொன்ன வள்ளுவன்மீதும்
கோபம் உண்டு எனக்கு,
பள்ளங்கள்மீது பரிதாபம் கொண்டதால்
வள்ளுவன் 
மேடுகளோடு சமரசம் பேசினான்.

எனவேதான்
செல்வத்தைச் செலவழித்தவன் 
இன்பத்தைச் சேமிக்கிறான் என்றும்,
செல்வத்தைச் சேமித்தவன்
இன்பத்தை இழக்கிறான் என்றும் பேசினான்.

உண்மைதான்....
வங்கிக் கணக்கை மட்டும் வளர்ப்பவன்
வாழ்க்கைக் கணக்கில் விடை தெரியாமலே
விடை பெறுகிறான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்