பின்னர் ஒரு வயது முதிர்ந்த பூசாரி அவரை நோக்கி, 'எங்களுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்' என அவர் கூறினார். நான் உங்களிடையே இன்று, வேறு எதைப் பற்றியாவது பேசினேனா? சமயம் என்பது எல்லாச் செயல்களும் எல்லாச் சிந்தனைகளுமேயன்றோ? அதுதான் செயல்களும் சிந்தனைகளும் இல்லையாயினும், கைகள் கல்லைச் செதுக்கும் போதோ, தறியைச் செப்பனிடும் போதோ, மக்கள் ஆத்மாவிலிருந்து திடீரென உதயமாகும் வியப்பும் உணர்வுமே அன்றோ? யாரால் தன்னுடைய செயல்களில் இருந்து தன் விசுவாசத்தைத் துண்டித்துக் கொள்ள முடியும்? அல்லது தன் தொழிலில் இருந்து தன் நம்பிக்கையைப் பிரிக்க முடியும்? யார் தன்னுடைய காலத்தைத் தனக்கு முன்னால் பரப்பி, இது கடவுளுக்காக, இஃது எனக்காக என்றும், இஃது என் ஆத்மாவுக்கு, இஃது என் உடலுக்கு என்றும் கூற முடியும்? எல்லா நாழிகைகளும் ஓர் ஆத்மாவிலிருந்து மற்றோர் ஆத்மாவுக்குச் சிறகடித்துப் பறப்பனவே. யார் தம்முடைய ஒழுக்கமே, தனக்குச் சிறந்த ஆடை எனக் கொள்கின்றனரோ அவருக்கு வேறு ஆடையே தேவை இல்லை. புய...