அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி, 'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என்றார். அவர் சொல்லலுற்றார்: உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும்போது நீங்கள் மிகக் குறைவாகத் தான் கொடுப்பவர்கள் ஆவீர்கள். ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக் கொடுத்துவிடும் போது தான் நீங்கள் உண்மையான கொடை வள்ளல்கள். உங்கள் உடைமை என்பது என்ன? நாளைக்கு உங்களுக்கு இவை இவை தேவைப்படும் என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது. நாளை, இந்த நாளை என்பது என்ன? யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக் கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத் துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால் அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த வி...