அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி, 'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என்றார். அவர் சொல்லலுற்றார்:
உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும்போது
நீங்கள் மிகக் குறைவாகத் தான் கொடுப்பவர்கள் ஆவீர்கள்.
ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக் கொடுத்துவிடும்
போது தான் நீங்கள் உண்மையான கொடை வள்ளல்கள்.
உங்கள் உடைமை என்பது என்ன? நாளைக்கு உங்களுக்கு இவை இவை தேவைப்படும் என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு
காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது.
நாளை, இந்த நாளை என்பது என்ன?
யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக் கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத் துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால் அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த
விழிப்பான நாய்க்கு உதவுமா? இது போன்றதன்றோ நாளை என்பதும் உங்களுக்கு?
தேவை என்பதைத் தவிர்த்துத் தேவைக்கான அச்சம் என்பது தான் என்ன?
நம்முடைய கேணி நிறைந்திருக்கும் காலத்திலும் தீர்க்க முடியாத நீர் வேட்கை நமக்கு ஏற்படுவது பயங்கரமானது அன்றோ?
தங்களிடம் உள்ள பெருஞ்செல்வத்தில் சிறிது கொடுக்கும் பலர் உள்ளனர். அவர்கள் அதைத் தம் சுய விளம்பரத்துக்கெனக்
கொடுக்கின்றனர். அவர்களிடையே மறைந்துள்ள அந்த அவா, அவர் தம் கொடையைத் தூய்மையற்றதாக்கி விடுகின்றது.
தங்களிடம் உள்ளது மிகக் குறைவேயாயினும் உள்ள யாவற்றையும் கொடுத்துவிடும் சிலர் உள்ளனர்.
அவர்களே, வாழ்க்கையிலும் கொடையிலும் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களின் செல்வம் எக்காலும் வற்றுவதே இல்லை.
மகிழ்ச்சியோடு கொடுப்பவர்கள் சிலர் உள்ளனர்.அந்த மகிழ்ச்சியே அவர்கள் பெறும் பரிசாகும்.
துன்பத்தோடு தருபவர்கள் பலர். அவர்கள் தம் துன்பமே அவர்களின் மனந்திரும்புதல் ஆகும்.
மற்றும் சிலர் தாம் கொடுக்கும் போது , துன்பத்தையும் காணாமல் இன்பத்தையும் தேடாமல் அறத்தைப் பற்றிக் கூடச் (ஈதல் அறம்
என்பதைப் பற்றியும்) சிந்திக்காமல்கொடுக்கிறார்கள்.
அவர்களே, பரந்த வெளியில் வீசும் தென்றலுக்கு,மல்லிகை தன் முகை அவிழ்ந்து தன் நறுமணத்தைத் தந்து பரவச் செய்வதைப்
போலத் தரும் கொடையாளிகள் ஆவார்கள்.
இப்படிப் பட்டவர்களின் கைவண்ணம் மூலமாகவே இறைவன் பேசுகிறான்.அவர்களுடைய கண்களின் மூலமாகக் கண்டு, உலகைப் பார்த்து முறுவல் பூசுகிறான்.
கேட்கும் போது கொடுப்பது நல்லது. ஆனால்,பிறர் கேளா, முன்னரே, குறிப்பறிந்து ஈதலே அதைவிட நல்லது.
கொடையாளிக்குத் தான் தரும் ஈகையை ஏற்றுக் கொள்பவனைத் தேடுவது ஈதலைக் காட்டிலும் இன்பத்தைத் தரத்தக்கதாகும்.
கொடுப்பதற்கு இல்லை என மறுக்கத்தக்கது ஏதாவது உண்டா?
உங்களிடம் உள்ளவெல்லாம் ஏதாவது ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே.
எனவே, இன்றே கொடுத்துவிடுங்கள். இந்த ஈகை உங்களுடைய சந்ததியார் காலத்துக்கென நீங்கள் தள்ளிப் போடாமல் உங்கள்
காலத்திலேயே நிகழ்ந்ததாக இருக்கட்டும்.
நாங்கள் கொடுப்போம். ஆனால், தக்கவர்களுக்கே கொடுப்போம் என நீங்கள் அடிக்கடி சொல்கின்றீர்கள்.
உங்கள் தோட்டத்திலே உள்ள பழமரங்கள் இப்படிச் சொல்லவில்லையே! வயல் வெளியிலே மேயும் பசுமந்தைகள் இப்படிக் கூறவில்லையே!
அவையாவும் தாம் வாழவே கொடுக்கின்றன. ஏனெனில்,
கொடுக்க மறுப்பவையாவும் அழிந்தே விடும்.
தன்னுடைய தேவைக்கெனப் பகலையும் இரவையும் அனுபவிக்கப் பெற்றிருக்கும் ஒருவனுக்கு உங்களிடமிருந்து எல்லாவற்றையுமே பெறத் தகுதியுண்டு.
வாழ்க்கை எனும் பெருங்கடலையே பருகத் தகுதி பெற்றிருக்கும் ஒருவனுக்கு உங்களுடைய சிறு வாய்க்கால் நீரில் தன் குவளையை
நிரப்பிக்கொள்ள நிச்சயமாகத் தகுதியுண்டு.
நம்பிக்கையிலேயும், தைரியத்திலேயும்,
ஈகையிலேயும், பெறுவதிலேயும் பொதிந்து
கிடக்கும் மனப் பரப்புக்கு மிக்கதொரு
நிலப்பரப்பு எங்கேனும் உண்டோ? பிற மக்களுடைய ஆசைகளைப்
போர்வையின்றியும் பெருமையைக் குழப்பமின்றியும் நீங்கள் காணவேண்டும் என்பதற்காக, உங்களிடம் கை நீட்டிப் பெறுபவர்கள் தங்கள் நெஞ்சத்தையே உங்களுக்குக் கொடுத்து விடவும் தம்
பெருமையைக் கூடத் திறந்து காட்டவும் விழைகின்றீர்கள் என்றால், அதற்கு நீங்கள் யார்?
முதலில் நீங்கள் கொடுக்கத் தகுதி
உடையவர்களாக, பிறருக்குக் கொடுப்பதற்கு
ஏற்ற ஒரு கருவியாக உங்களை நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் உண்மையிலேயே, வாழ்க்கை தான் வாழ்க்கைக்குத் தருகின்றது(நீங்கள் பிறருக்குத் தருவதன்று). அக்காலத்தில் நீங்கள் அதற்கு ஒரு சான்றாக இருப்பதை விடுத்து, 'நாங்களே, கொடுப்பவர்கள் கொடை வள்ளல்கள்!' எனக் கருதுகின்றீர்கள்.
மற்றும், நீங்கள் கொடுக்கப்படும் கொடையைப் பெறுகின்ற நீங்கள் யாவரும் பெறுபவர்களே நன்றியின் சுமையைச் சிறிதும் கருதாதீர்கள். அது உங்களுக்கும், கொடுக்கும் வள்ளலுக்கும்
இடையே நுகத்தடியைப் போலக் கொடிய பாரத்தைத் தரும் ஆதலின். வள்ளல்களோடு நீங்களும் அவர்கள் தரும் ஈகையின் மேலமர்ந்து
சிறகடித்து மேன்மேலும் உயர்ந்து செல்லுங்கள்.
ஏனெனில்,உங்கள் நன்றிக் கடனையே நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உளமுவந்து நல்கும் நிலநல்லாளைத் தாயாகவும்
இறைவனையே தந்தையாகவும் பெற்ற வள்ளலின் வண்மையின் மேலே உங்களுக்குள்ள நம்பிக்கை இன்மையையே அது காட்டுவ தாகும் .
0 கருத்துகள்