கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் ....


💧

உலகெங்கும் இதழாக 
இந்தப் பூக்கள் 
உதிர்ந்து விழுவது யாருக்காக?

எந்த தேவ தேவனுடைய 
கால்களை அர்ச்சிக்க இவை 
கண்ணவிழ்க்கின்றன?

அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல் 
பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை 
யார் வாங்குவார்கள்?



இவை 
எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற 
இலவசப் பூக்களா?
இல்லை -

கனமாகிப் போன மன அணைக்கட்டின் 
கசிவு -

வேதனையின்
குண்டு விளையாட்டு.

காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக் 
கலங்கும் 
இதயச் செடியின் காணிக்கை!



துக்கத்திற்கு அடையாளச் சின்னம் 
கறுப்பல்லவா ...
ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது?

சண்டை பிடிக்க முடியாத போது 
சமரசம் செய்து கொள்ள 
சமாதானப் புறா தயாராகிறதா?



துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு 
தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி 
இதனிடம்தான் இருக்கிறது.



வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான் 
இதயமுள்ள எந்த மனிதனையும் 
இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் .



இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்கும் 
செடியின் நீளம் 
மனக்குளத்தின் துயர மட்டத்தைப் பொருத்தே 
நீளும் - தாழும்!



எங்கெல்லாம் மானுடம் காயம் படுகிறதோ 
அங்கெல்லாம் பூக்கும் 
சகோதர சோகங்களின் சர்வதேசியப் பூக்கள் 
இவைதான்.

என்றாலும் 
இந்தப் பூக்களைப் பூத்துத் தருகிற கொடி 
ஏழைக் குடிசைகளின் மீதுதான் 
ஏறிப் படரும்.



ஓர் இதழே இத்தனை சூடாக இருந்தால் 
அந்தச் செடியின் அடியில் 
எத்தனை யுகங்களின் வெப்பம் 
சேமிக்கப்பட்டிருக்கும்?

இந்த நெய்த்துளிகள் விழுந்த பிறகே 
நெருப்புப் பற்றுகிறது.
பிறகுதான் 
எழுச்சி விளக்குகள் எரிகின்றன.

எரியப்  போகும் தீயை 
எடுத்துக் காட்டும் கண்ணாடியா இது?



போராட்டங்களைத் தூண்டி விடுவதும் 
போராடும் போது தூவப் படுவதும் 
இந்தப் பூக்களே!

எந்தத் துயரத்திற்கோ இவை 
சாட்சியம் சொல்கின்றன...

இவற்றுக்குச் சாட்சியங்களாகவே 
எங்கள் கவிதைகள் பிறக்கின்றன!

எங்கள் கவிதைகளுக்குச் 
சாட்சியம் கூறப்போவது எது?




தேசப்பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி 




உன்னுடைய படங்கள் 
ஊர்வலம் போகின்றன 
நீ ஏன் தலை குனிந்தபடி 
நடுத்தெருவில்
நிற்கிறாய்?

வெளுத்துப் போய்விட்ட 
தேசப் படத்துக்குப்
புதுச்சாயம் பூசும் ஜம்
புண்ணிய தினத்தில் 
புத்திர தேசத்துக்காக நீ 
புலம்புவது 
என் காதில் விழுகிறது!

எங்கள் தேசப்பிதாவே!
அமைதி கொலுவிருக்கும் 
உன் சிலைகளைப் 
பார்க்கும் போதெல்லாம் 
நான் அழுது விடுகிறேன்!

கண்ணீரின்
வெப்பத்தால்
என் கவிதை
முழுமை பெறாமலே 
முடிந்து விடுகிறது ...



தேசப் படத்திலுள்ள 
கோடுகள்-
விடுதலைக்குப் போராடிய 
வீரத் தியாகிகளின் 
விலா எலும்புக் கூடுகள்!

அழிக்க முடியாத -
கல்லெறி படாத 
அந்த நினைவுச் சின்னத்தின் 
மூலமே 
அவர்களுக்கு நாங்கள் 
அஞ்சலி செலுத்தி விடுகிறோம்!

★ 

கண்ணீர்க் கடலில் 
கலங்கள் மூழ்கிய பிறகு 
அடைக்கலம் தேடிய 
ஆபுத்திரனே!

அமுத சுரப்பியைத்தான் 
நீ தந்து சென்றாய் 
இப்போது 
எங்கள் கைகளில் இருப்பதோ 
பிச்சைப் பாத்திரம்!

இந்த மாற்றத்தை நிகழ்த்திய,
மந்திரவாதிகள் யார்?

நிழலுக்குள் மறைந்திருக்கும் 
நிழலை 
யார் அம்பலப்படுத்துவது?



சரித்திர மாளிகையில் 
அகிம்சைப் பேரொளியில்
பகத்சிங்குகள் 
மறைக்கப்பட்டதால் தானா 
சுதந்திர மாளிகையை 
எலிகள் 
சுரண்டுகின்றன?

மயிலுக்குப் போர்வை தந்தவனின் 
மரபிலே வந்தவர்கள் 
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டையையும் 
கழற்றிக் கொண்டு போகிறார்கள்!

ஆடுகளை 
உனக்காக வளர்த்தோம் 
நாளடைவில் நாங்களே 
மந்தை ஆடுகளாய் 
மாறிப் போனோம்!

எங்கள் 
வயிற்றைப் புறக்கணித்து விட்டுக் 
காம்புகளை நேசிக்கிறார்கள் .....

எங்களுக்குத்
தீவனம் கிடைக்காவிட்டாலும் 
மேய்ப்பவர்களுக்கு மட்டும் 
எப்படியோ 
இனாம் கிடைத்துவிடுகிறது....

கண்ணீரின் வெப்பத்தால் 
என் கவிதை 
முழுமை பெறாமலே 
முடிந்து விடுகிறது....



சட்டக் கட்டிடங்களில் 
ஓட்டைகள் விழுந்துவிட்டன 
வயதாகிப் போனதால் 
தர்ம ஸ்தூபிகள் 
தள்ளாடுகின்றன.

எங்கள் வாழ்க்கை 
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது!

பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு 
மொத்தமாகத் தீர்த்துக் கொள்ளப் 
போதுமான அளவு 
புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால் 

எங்கள் 
பாரத புத்திரர்கள் 
தூசு படாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்!



ராஜதானியில் 
மலர்க் கிரீடங்கள் 
சூட்டப்படுகிறபோது 
சேரிக் குழந்தைகளின் 
சின்ன விழிச்செடியில் 
உப்பு மலர்கள் 
உதிர்ந்து விழுகின்றன...

நீ கண்டுபிடித்த
சுதேசி ஆயுதமாம் 
கைராட்டையைச் சுற்றிய சிலர் 
தற்போது 
தங்க நூல் நூற்கிறார்களாம்... 

எங்களுக்கோ 
வெள்ளியும் தங்கமும் 
விழாக்களின் பெயரில்தான் 
வருகின்றன!



ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் 
இந்த நாட்டு மக்கள் 
உன்னை 
அப்படியே பின்பற்றுகிறார்கள்...
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்!

தேசம் போகிற 
போக்கைப் பார்த்தால் 
பிறந்தநாள் உடையே 
எங்கள் 
தேசிய உடையாகிவிடும் போல்
தெரிகிறது.



எங்கள் தலைவர்கள் 
வறுமையை எப்படியாவது 
வெளியேற்றிவிட 
வேண்டுமென்று தான் 
மேடையில் 
மைக்கின் முன்னால்
பேச்சுத் தவம் செய்கிறார்கள்!



இருபத்தைந்தாண்டுகளில் 
தேசத்தில் மாற்றமே நிகழவில்லை என்று 
யார் சொன்னது?

கண்ணீர்க் கடலில் 
கலங்கள் மூழ்கிய பிறகு 
அடைக்கலம் தேடிய 
ஆபுத்திரனே!

அமுத சுரபியைத்தான் 
நீ தந்து சென்றாய் -
இப்போது -
எங்கள் கைகளில் இருப்பதோ 
பிச்சைப் பாத்திரம்!

அணைக்கட்டுகளில் 
திறக்கப்படும் தண்ணீர் 
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு 
மேட்டை நோக்கியே 
பாய்கிறது.

சேரிகளில் மட்டுமே நீ 
யாத்திரை செய்வாய் 
என்பதைத் 
தெரிந்து கொண்டதால் 
உன்னை நேசித்தவர்கள் 
தேசத்தையே 
சேரியாக மாற்றிவிட்டார்கள்!

இந்த 
மாற்றங்களை நிகழ்த்திய 
மந்திரவாதிகளின் 
கழுத்துக்கு 
நாங்கள் 
மாலை சூட்டுகிறோம்!



உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன...
நீ ஏன்
தலை குனிந்தபடி 
நடுத் தெருவில் நிற்கிறாய்?

புத்திர தேசத்துக்காக நீ 
புலம்புவது
என் காதில் விழுகிறது.

அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப் 
பார்க்கும் போதெல்லாம் நான் 
அழுது விடுகிறேன்.

கண்ணீரின் வெப்பத்தால்
என் கவிதை
முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது.

என் முதற் காதல்

முகவரி
சரியாக எழுதப்படாத
ஒரு கடிதம் 

எங்கெங்கோ சென்று
முட்டி மோதி அலைந்து விட்டு
என்னிடமே திரும்பிவிட்டது!

அரளிப்பூ அழுகிறது

பூக்களிலே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும் 
பொன் விரல்கள் தீண்டலையே!

பொன் விரல்கள் தீண்டலையே-நான்
பூமாலை யாகலையே!

தேசத்தைப் போலவே
நம் வாழ்க்கையும்
தெருவில் நிற்கிறது

*
இந்த  சுதந்திர திருநாளில் 
உன் நினைவுகளுக்கும் சேர்த்தே 
அஞ்சலி செலுத்தி விடுகிறேன்!

என் அன்பே!
தேசத்தைப் போலவே
நம் வாழ்க்கையும்
இன்று
தெருவில் நிற்கிறது.

தலைமுறைகளாய்
வளர வேண்டிய உறவு 
தனிமைகளால் 
கேலி செய்யப்படுகிறது 

அன்புகூட ஒரு வகையில் 
அடிமைத் தளைதான்!
அந்த விலங்குகளை 
நொறுக்கத்தான் 
அடுப்பு மண்டபங்களில்
ஆலோசனை நடத்திப் 
படுக்கை அறைகளில் 
சுதந்திரப் பிரகடனம் 
பண்ணுகிறீர்களா?

ஒரு பொண்ணுக்குத் 
தாய்வீடே போதுமென்றால் -
தலைவனோடு 
தலையணைச் சவகாசம் 
தேவையில்லை ...
*
அரசியல் வாழ்க்கையில் 
சில 
கோமாளித்  தலைவர்கள் 
தேசத்தையே 
குட்டிச்  சுவராக்கி 
அதில் 
'வால்  போஸ்டர்கள்' ஒட்டுகிறார்கள்.

குடும்ப வாழ்க்கையில் 
சில 
கோமாளிக் கிழத் தலைகள் 
'வாய் போஸ்டர்'களாலேயே 
குட்டிச் சுவர் 
கட்டி விடுகிறார்கள்.
*
மாநிலங்களின் ஒப்பந்தங்கள் 
காலாவதி யாகும்போது 
கலகம் வருகிறது.

மணவாழ்க்கை ஒப்பந்தம் 
மதிப்பிழக்கும்போது 
கண்ணீர் வருகிறது.

என் அன்பே 
தேசத்தைப் போலவே 
நம் வாழ்க்கையும் 
இன்று 
தெருவில் நிற்கிறது!

*
அம்மாவின் வார்த்தைகள் மட்டுமே 
வேதவாக்கானால் - நீ 
தொட்டிலிலேயே கிடந்திருக்கலாம் 
கட்டிலுக்கு 
வந்திருக்க வேண்டியதில்லை!

மனச் சுமைகள் 
அதிகமாகும்போது ...
தாங்க முடியாத 
தாலிப் பாலங்கள் 
தகர்ந்து போகின்றன.

தண்டிக்கப்பட்டது 
என் 
ஆசைகளல்ல...
அன்புதான்!

உன் தாய் 
உன்னை அலங்கரிப்பது 
ஆபரணங்களால் அல்ல 
என் 
அவஸ்தைகளாலே தான்!

என் கண்கள் காணாத 
உன் அலங்காரங்கள் 
யாருக்காக?

*

நான் தென்றலாகத் தானே 
வந்தேன் 
நீ ஏன் உன் 
ஜன்னல்களைச் சாத்தினாய்?

உன் வீட்டுக் 
காற்றுக்குக் கூட 
விஷப் பல் முளைத்தது 
எப்போது?

*

உன்னை 
உதயமாக்க முயன்றதற்காகவா 
என்னை 
அஸ்தமன மாக்கிவிட்டாய்?

மனச் சுமைகள் 
அதிகமாகும் போது ..
தாங்க முடியாத 
தாலிப் பாலங்கள் 
தகர்ந்து போகின்றன.

என் அன்பே!
இந்த சுதந்திரத் திருநாளில் 
உன் நினைவுகளுக்கும் 
சேர்த்தே 
அஞ்சலி செலுத்தி விடுகிறேன்!

*

நம்முடைய இளமையின் 
பிருந்தாவனத்தில் 
இரவும் பகலும் 
சருகுகளாகவே உதிர்கின்றன.

மழையைக் கொடுக்காத 
இடியால் என்ன பயன்?
சமாதானத்தில் முடியாத 
சண்டைகளால் 
யாருக்கு லாபம்?

கரையைப் பற்றிக் கொள்ளாமல் 
நதி மகளே உன்னால் 
நடக்க முடியுமா?

*
நம் 
இதய வீணைகளின் 
நரம்புகளை வருடுபவை 
இளைய விரல்களல்ல...
முதிய மரக்கட்டைகள்!

*
உன்னை  நேசித்ததற்குப் பதிலாக 
நான் 
மதுவை நேசித்திருக்கலாம் ....
குடியிருப்புக்காவது 
குறைவு வந்திருக்காது!

*
ஒரு மகா காவியத்திற்கு 
உன்னை நாயகியாக்கினேன் 

நீயோ 
ஒரு கவிதைக்குக் கூட 
உருவம் கொடுக்காமல் 
போய் விட்டாயே!

இந்த நெடிய பாலை வழியில் 
ஒரு நொண்டி 
ஒட்டகத்தை நம்பிப் 
பயணப்பட்ட 
என் முட்டாள் தனத்தை 
என்ன சொல்வது?

என் இளமையின் 
பிருந்தாவனத்தில் 
இரவும் பகலும் 
சருகுகளாகவே உதிர்கின்றன...

என் அன்பே!
இந்த சுதந்திரத் திருநாளில் 
உன் நினைவுகளுக்கும் 
சேர்த்தே 
அஞ்சலி செலுத்திவிடுகிறேன்!
*

கண்ணீர்ப் பூக்கள் 

*
எந்த தேவதையாலும் அவன் 
ஆசிர்வதிக்கப்படவில்லை 
ஆனால் 
எல்லாச் சாத்தான்களாலும் 
இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!

எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை 
ஆனால் 
எல்லாப் புயல்களோடும் அவன் 
போராடியிருக்கிறான்!

மகிழ்ச்சி மலர்களை அவனால் 
பறிக்க முடியவில்லை 
அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம் 
கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.

என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை 

சோகச் சிலுவைகளை நெஞ்சில் 
சுமந்து கொண்டு 
அவன் நடக்கிறான் 
அழுகைக்குப் பிறகும் ஓர் 
அணிவகுப்பு நடத்துகிறான்!

சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது 
கவிப்பயணம் காலசைக்கிறது 
துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!
பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !

*
என் வாழ்க்கை நாடகத்தில் 
எத்தனையோ காட்சிகள் 
எத்தனையோ காட்சிகளில் 
எழமுடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 
மாபெரிய காவியம் 
மாபெரிய காவியத்தின் 
மனம் சிதைந்த ஓவியம்!

*
ஆடுகின்ற பேய்மனதில் 
ஆயிரமாம் ஆசைகள் 
ஆயிரமாம் ஆசைகட்கு
அனுதினமும் பூசைகள் !

சூடுகின்ற மாலைகளோ 
தோள்வலிக்கும் தோல்விகள் 
தோள்வலிக்கும் தோல்விகள் நான் 
தொடங்கிவைத்த வேள்விகள்!

*
காலமெனும் தாளிலொரு 
கதையெழுத வந்தவன் 
கதையெழுத வந்ததனால் 
கனவுகளில் வெந்தவன்!

ஓலமிடும் சிந்தனையால் 
உறங்குவதை விட்டவன் 
உறங்குவதை விட்டதனால் 
உடல் சிதைந்து கெட்டவன்!

*
மன்னவரின் சபைகள்தமை 
மயங்க வைத்த பாவலன் 
மயங்கவைத்த வேளையிலும் 
மயங்கிவைத்த கோவலன்!

மின்னும் விழிப் பொற்குளத்தில் 
மீன்பிடிக்கப் போனவன் 
மீன்பிடிக்கப் போனதனால் 
வேதனைக்குள் ளானவன் !

*
ஈரவிழிக் காவியங்கள் 
எழுதி வெளி யிட்டவன் 
எழுதி வெளி யிட்டதனால்  
இதயங்களைத் தொட்டவன்!

ஓரவிழிப் பார்வைகளின் 
ஊர்வலத்தில் சென்றவன் 
ஊர்வலங்கள் சென்றபோது 
ஒதுங்கிவந்து நின்றவன்!

*
பாயும் நதி மீதிலொரு 
படகினை நான் ஓட்டினேன் 
படகை நன்கு ஓட்டியதால் 
பரிசுகளை ஈட்டினேன்!

ஆய பல சுமைப் பரிசை 
அப்படகில் ஏற்றினேன் 
அப்படகு கவிழ்ந்ததனால் 
அலைநடுவே மாட்டினேன்!

*
வரங்கொடுக்கும் தேவதைகள் 
வந்தபோது தூங்கினேன் 
வந்தபோது தூங்கிவிட்டு 
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!

கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக் 
கைகழுவி வீசினேன் 
கைகழுவி வீசிவிட்டுக் 
காலமெல்லாம் பேசினேன்!

*
புல்லர்களின் மனக்குகையில் 
புனித விதை விதைத்தவன் 
புனித விதை விதைத்தபோது 
புதை மணலை மிதித்தவன்!

செல்லரித்த மானுடத்தைச் 
சீர்திருத்தப் பாடினேன் 
சீர்திருத்தப் பாடியதால் 
பேரெதிர்ப்பைத் தேடினேன்!

*
அற்பர்களின் சந்தையிலே 
அன்பு மலர் விற்றவன் 
அன்பு மலர் விற்றதற்குத் 
துன்ப விலை பெற்றவன்!

முட்புதரில் நட்பு மலர் 
முளைக்குமென்று நம்பினேன் 
முளைத்து வந்த பாம்புகளே 
வளைத்த போது  வெம்பினேன்!

நெஞ்சுவக்கும் மலர் பறிக்க 
நெருப்பினில் கை விட்டவன் 
நெருப்பினில் கை விட்டதனால் 
நினைவுகளைச் சுட்டவன்!

வஞ்சி மலர் ஊமை மன 
மாளிகையின் அதிபதி!
மாளிகையின் அதிபதிக்கு 
மனதில் இல்லை நிம்மதி!

*
சோலைவழி வீதிகளில் 
சுகமளிக்கும் பார்வைகள் 
சுகமளிக்கும் பார்வைகள் என் 
சுதந்திரத்தின் போர்வைகள்!

பாலைவன மணல் வெளியில் 
பாடகனின் யாத்திரை 
பாடகனின் யாத்திரையே 
பசித்தவர்க்கு மாத்திரை!

*
என் வாழ்க்கை நாடகத்தில் 
எத்தனையோ காட்சிகள் 
எத்தனையோ காட்சிகளில் 
எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 
மாபெரிய காவியம் 
மாபெரிய காவியத்தின் 
மனம் சிதைந்த ஓவியம்!

ஒரு கடிதம் 
அனாதையாகிவிட்டது 

*
சேரும் முகவரி சரியில்லை 
அனுப்பிய முகவரி அதில் இல்லை!
ஒரு கடிதம் 
அனாதையாகி விட்டது...
ஒரு கடிதம் 
அனாதையாகி விட்டது...

பற்பல ஊர்களின் 
முத்திரை பதிந்தது 
பற்பல தெருக்களில் 
விசாரணை நடந்தது 
பற்பல தினங்கள் 
பறந்து கடந்தது!

பிறந்த இடத்தின் 
பெயரே இல்லை 
புகுந்த இடமோ 
புரிய வில்லை.

அந்தக் 
கடிதத்தை -
அஞ்சல் நிலையங்கள் 
ஆராய்ச்சி செய்தன.

ஒட்டியிருந்த 
உறையின் உள்ளே 
இருந்த தாளில்  -
எழுதியிருந்தது 
இப்படி:

"ஒரு வாரத்திற்குள் 
உங்கள் 
பதில் வரவேண்டும் 
இல்லாவிட்டால் 
உயிர்ப்பறவை சிறகடிக்கும் 
கடைசி முத்தமிட என் 
கல்லறைக்கு வரலாம்"

*
சேரும் முகவரி சரியில்லை அனுப்பிய முகவரி அதில் இல்லை 
ஒரு கடிதம் அனாதையாகி விட்டது!
ஒரு கடிதம் அனாதையாகி விட்டது!

செருப்புடன் 
ஒரு பேட்டி 

* உங்கள் இனத்தைப் பற்றி நீயே ஏதேனும் 
உரைக்க முடியுமா?

உழைப்பதற்காகவே விலைக்கு வாங்கப்படும் 
அடிமைகள் நாங்கள் ! மனிதர்களின் 
பாதங்களுக்குப் பயண வாகனங்கள் 

கடைவீதிகள் காட்டிக் கொடுக்கக் 
'காலணி ' ஆதிக்கத்தால் கைதுசெய்யப் 
படுகிறோம்!

உள்ளே ஒருவர் 
இருக்கிறாரா இல்லையா என்று அறிவிக்கும் 
பித்தளை போர்டுகள் பின்னால் வந்தவை!
நாங்களோ 
வெகு காலமாக அந்த 
வேலையைச் செய்கிறோம்!
காலடியில் மிதிபட்டுக் காலமெலாம் 
உழைத்தாலும் 
வாசலில் மட்டுமே வாசம் புரிகிறோம்...
உழைப்பாதற் காகவே  விலைக்கு வாங்கப்படும் 
அடிமைகள் நாங்கள் !

* காலில் மிதிப்படுவதாய்க் கண்ணீர் 
விடுகிறீர்களே - உங்களைக் 
கைகளில் தூக்கி நாங்கள் 
கௌரவிப்ப தில்லையா?

சில சமயங்களில்...
கைகளில் தூக்கிக் காப்பாற்றி வைப்பது 
மீண்டும் எங்களை மிதிப்பதற்காகவே!

* போகட்டும்...
ஒப்பற்ற உழைப்புக்கு உங்களைத்தானே 
உவமானம் சொல்கிறோம்...

உவமானங்களால் மட்டுமே எங்கள் 
அவமானங்கள் அழிந்து விடுவதில்லை 
அதோடு 
இழிவு படுத்தவும் எங்களைத் தானே 
'எடுத்து'க்  காட்டுகிறீர்கள் ....

* சரி... சரி...
குறைகளைப்  பற்றி உங்கள் இனத்தவர் 
கூடிப் பேசிடலாமே...!

எவ்வித முன்னறிவிப்புமின்றி 
எங்கள் கூட்டங்களைக்கூட 
நீங்களே ஏற்பாடு செய்துவிட்டு 

தீர்மானம் நிறைவேற்றும் முன் 
திடீரென்று கலைத்து விடுகிறீர்கள்!

*  நீங்கள் கூட்டம் போடும்போது 
பார்வையாளர்கள் பங்கு கொள்வதுண்டா?

கோவில் வாசலில்... வைபவ நெரிசலில்...
நாங்கள் கூட்டம் போடும்போது 
எங்களில் கன்னிமை கழியாத புதியவர்களை 
சில கொள்ளைக்காரர்கள் 
நோட்டம் போடுகிறார்கள்.

* தனியாக உங்களுக்கென்று 
தத்துவப் பார்வை உண்டா?

உண்டு.
சருகை மிதித்தால் சப்திக்கும் நாங்கள் 
மலரை மிதிக்கும்போது மௌனம் சாதிக்கிறோம்.

* வாங்கிய புதிதில் காலைக்  கடிக்கும் 
வழக்கம் எதற்காக?

எங்களுக்கும் ரோஷம் இருக்கிற தென்பதைக் 
காட்டிக் கொள்ளவே 
ஆரம்பத்தில் கொஞ்சம் கடித்துப் பார்க்கிறோம் 

தொடர்ந்து போராடும் 
'தோல்' வலிமை யற்றதால் 
பாதம் படப் படப் பணிந்து விடுகிறோம்!

* திடீரென அறுந்து போய் நடுவீதியில் 
எங்களைத் திண்டாட வைப்பது ஏன் ?

நாங்கள் 
ஒத்துழையாமை இயக்கம் 
தொடங்கும் போதுதான் 
தெருவோரத் தொழிலாளியின் 
வயிற்றுப்  பாட்டுக்கு வழி பிறக்கிறது!

* பழசாகிப் போனதெனும் காரணம் காட்டி 
உங்களை நாங்கள் ஒதுக்கி விடும்போது...?

உங்களால் ஒதுக்கப்பட்டவர் 
எங்களை 
உபயோகித்துக் கொள்வர்!

* இனிய நினைவுகள் வாழ்வில் ஏதேனும்?

நாணத்தில்  கவிழும் தாமரைக் கண்கள் 
உங்களைச் சந்திக்கும் முன்பாக 
எங்களைத்தான் சந்திக்கின்றன!

* தீவிரமாக எதைப்பற்றியாவது  நீங்கள் 
சிந்திப்பதுண்டா?

உண்டு!
சில தேசங்களையும் 
சில ஆட்சிகளையும் 
பார்க்கும்போது 
மீண்டும் நாங்களே 
சிம்மாசனம் 
ஏறிவிடலாமா 
என்று 
யோசிப்பதுண்டு!

உனக்கான 
உதிரிப் பூ 

எந்தப்  பொற்பாதங்கள் 
என் இதயப் பாதையில் 
நடந்து நடந்து 
கவிச் சிலிர்ப்பை 
உண்டாக்கினவோ...
எந்தப் பூவிழிகள் 
என் நெஞ்சில் 
புதிய புதிய 
கனவுகளைப் படைத்தனவோ...
அவற்றிற்கு ...



உன் கண்ணீரை மொழி பெயர்த்தேன் 
அது கவிதையாயிற்று 
உன் புன்னகையை மொழி பெயர்த்தேன் 
அது சங்கீதமாயிற்று 
முழுமையாக 
உன்னையே மொழிபெயர்த்தேன் 
அந்த உயிருள்ள மொழிபெயர்ப்பு 
என்னையே மொழிபெயர்த்து 
எழுதலாயிற்று!



கண்ணகி 
காற்சிலம்பைக் கழற்றினாள் 
நான் 
சிலப்பதிகாரம் படித்தேன் 
நீ 
கைவளையல்களைக் கழற்றினாய் 
என் தோழர்கள் 
கண்ணீர்ப் பூக்களை வாசிக்கிறார்கள்!



வசந்த காலத்தில் 
உன்னுடைய தோட்டத்தில் 
எத்தனை அழகழகான பூக்களை 
நீ வளர்த்தாய்!
ஆனால் 
எல்லாப் பூக்களையும்விட 
மிக அழகாக வளர்ந்த பூ 
நீதான் பெண்ணே!



பாடசாலையை நோக்கிப் 
பாதங்கள் நடந்த போது 
உன்னுடைய பட்டுக் கரங்களால் 
எத்தனை எத்தனை புத்தகங்களைத் 
தொட்டுத் தூக்கிச் சென்றாய்!
ஆனால் 
எல்லாப் புத்தகங்களையும் விட 
ஒரு புதுமையான புத்தகம்
நீதான் பெண்ணே!



சங்கீத அலை பரவும் 
சௌந்தர்யத் தேன் குரலில் 
எத்தனை எத்தனை 
இனிய பாடல்களை நீ 
இசைத்தாய்!
ஆனால் 
எல்லாப் பாடல்களையும் விட 
இதயத்தை வருடியபடி 
இனித்திருக்கும் பாடல் 
நீதான் பெண்ணே!



ஆயிரம் கனவுகளை 
உன்னை 
யார் வளர்க்கச் சொன்னார்கள்?
நீ ஏன் 
என் 
நிழலோடு 
சண்டை பிடிக்கிறாய்?



காவியங்களில் மட்டுமே 
சந்திக்கக்கூடிய 
சில நல்ல மனிதர்களை 
வாழ்க்கையிலும் 
சந்திக்க நேரும்போது 
வாழ்த்தக்கூட முடிவதில்லை 
வணங்கத்தான் தோன்றுகிறது 
-என்றாய் 

எனக்குத் தெரியும் 
நீ வேண்டுவது 
தொழுவதை அல்ல 
தொடுவதை!



கல்யாணி ராகத்தைக் 
காணாமல் 
முகாரியிலேயே உன் பாடல் 
முடிந்து விடுமா?
எதற்கும் 
பாகவதரைக் கேட்டுப் பார்!



நான் சூறாவளியாய்ப் 
புறப்பட்டபோது 
தனித்து விடப்பட்டதொரு 
அனாதைச் செடியின் 
ஒற்றை ரோஜாவாய் நின்று 
என் இரக்கத்தைப் 
பெற்றுக் கொண்டாய்.

பார்வைப் பூக்களால் என் 
பாதங்களை அர்ச்சித்தாய் !

மெல்லிய பூங்காற்றாய் 
உன் மேனியை வருட வந்தபோது 
ஆயிரந் தலைவாங்கி 
அபூர்வ சிந்தாமணியாய் மாறி 
அவஸ்தைப் படுத்தினாய் 

மழை நிழல் பிரதேசமாக 
என்னை 
மாற்றினாய்!



உன்னைக் கண்ட பிறகுதான் 
நான் 
கனவு காணக் கற்றுக் கொண்டேன்.
இப்போது-
கனவுகளே உன்னை எனக்குக் 
கற்றுத் தருகின்றன.



நீ புறப்பட்டபோது 
என்னை மட்டுமே
அலட்சியப்படுத்துவதாக நினைத்தேன் 
இந்த பூமியையே 
அலட்சியப்படுத்திவிட்டுப் 
போய் விட்டாயே.

என் இரவே 
கண்களாய் மாறிக் 
கண்ணீர் சிந்தும்போது 
பகலுக்கு நான் 
என்ன 
பதில் சொல்வது?



ஒரே ஒரு பூவுக்காக 
நீ யாசித்தபோது 
என் கூடை 
காலியாயிருந்தது.

இப்போது 
என் கூடையெல்லாம் 
பூவாய்க் 
குவிந்திருக்கும்போது 
உன் 
கல்லறையைப் பார்த்து 
நட்சத்திரங்கள் 
கண் சிமிட்டுகின்றன!



முகம் தெரியாத 
அவளுக்காக 



இருண்ட இரவுகளில் உன் 
விழியின் ஒளியையே 
விளக்காகக் கொண்டு 
நான் எழுதும் 
இந்தக் கவிதைகளைப்  
பகலின் வெளிச்சத்தில் 
படித்துப் பார்ப்பவர்களால் 
புரிந்து கொள்ள முடியாது 



பேசக் கூடாதா?
என்னதான் 
மௌனம் 
மொழிகளிலேயே சிறந்த 
மொழியென்றாலும் 
இன்னொரு மொழியைத் 
தெரிந்து வைத்துக் கொள்வதில் 
என்ன குற்றம்?
பேசு!



ஒரு மூங்கிற் காட்டையே 
அழித்து 
ஒரே ஒரு 
புல்லாங்குழல் செய்தேன் 
ஊதும்போதுதான் 
அது 
ஊமையென்று தெரிந்தது 
உன்னைப் போலவே!


கண்ணீர்ப் பூக்கள்



O  

என் வீதியில் 
எல்லா வாகனங்களும் 
வருகின்றன.
எனக்கு மட்டும் 
இடம் இல்லை 
என்கிறார்கள் 



தேசங்களையெல்லாம் 
சுற்றி வந்தாலும் 
என் கால்கள் 
உன் தெருவிற்கே 
வந்து சேர்கின்றன.



நிலவைப் பார்வையிடும் 
நட்சத்திரங்களைப் போல் 
அணைந்தணைந்து எரியும் என் 
ஆசைகள் உன்னைப் 
பார்வையிடுகின்றன.



எத்தனை பாராட்டுக் கிடைத்தாலும் 
இதயம் 
நிறைவுபெற மறுக்கிறது 
ஒரே ஒரு முறை உன் 
கண்களால் என்னை 
கௌரவிக்க மாட்டாயா?



என் செய்தியை 
நான் எழுதத் துடிப்பது 
உன் இதயத்தில்தான் 
அறிந்தும் அறியாதவள்போல் 
நீ ஏன் 
ஆட்டோகிராஃபை 
நீட்டுகிறாய்?



வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான் 
ராகம் பிடிபடுகிறது 
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான் 
என் நெஞ்சம் புரிகிறது 
உனக்கெங்கே 
புரியப்போகிறது?



இந்த ஆரவாரம் 
எங்கிருந்து கேட்கிறது...
எங்கிருந்து?

என் மகத்தான கவிதையை 
எழுதி முடிக்கவிடாமலே 
இடையூறாய் இருக்கும் நீ 
எங்கிருக்கிறாய்?
எங்கிருக்கிறாய்?

O  

வீதியில் நான் கொட்டும் 
போர் முரசுதான் 
வீட்டுக்கு வந்ததும் 
வீணையாகி விடுகிறது!

அதுவும் 
அழுகையை மட்டுமே 
ஆசிர்வதிக்கிறது.



இந்த சோக வீணையைத் 
தூக்கிச் 
சுமக்க வேண்டியிருக்காது 
நீ மட்டும் என் 
தோளில் இருந்தால்!

O

என் இதயத் தோட்டத்தில் 
ரோஜாக்களைப் பயிரிட்டேன் 
அறுவடை செய்ய 
உன்னை அழைத்தேன் 
அறிவாளோடு 
நீ வந்த பிறகுதான் 
என் தவறு 
எனக்குப் புரிந்தது!



சில பேர் காவியங்களைப் படைக்கிறார்கள் 
சிலர் காவியங்களில் வாழ்கிறார்கள் 
என்றேன்.

காவியமாகவே வாழ்ந்து விடுகிறேன் 
என்றாய் !

எழுதி வைக்கப்படாத 
எந்தக் காவியமும் 
நிலைக்காது என்பதை 
நினைத்துப் பார்த்தாயா?



கனவுகளை நான் வெறுக்கிறேன் 
அவை எத்தனை 
அழகாய் இருந்தாலும்.

நிழல்களின் ஒப்பந்தங்களைவிட 
நிஜங்களின் போராட்டமே 
எனக்குப் பிடிக்கும்.

உன் பிடிவாதம் 
எனக்குப் பிடிக்கிறது 
அதனால் தான் 
இதயம் கிடந்து துடிக்கிறது!



நீ 
நீயாகத்தான் இருக்கிறாய் 
நான்தான் 
நானாக இல்லை.


தொட முடியாத 
தொலைவில் 
இருப்பதாகக் 
கனவு காணாதே!

இந்த பூமியின் 
விளிம்பையே 
தீண்டிவிடும் 
அளவிற்கு 
என் விரல்கள் 
நீளமானவை.

ஏனென்றால் 
என் கைகள் 
வெறும் கைகளல்ல...

கவிதைகள்!



ஒரு மக்கள் கவிஞனின் 
இறுதிக் கேள்வி...



உங்களுக்காக 
உங்களைப் பற்றி 
ஒரு பாடல் பாடினேன் 
அது உங்கள் 
நரம்பு வயல்களில் 
நடவு நட்டதாக 
நீங்கள் கூறினீர்கள்!

உங்களுக்காக 
உங்களைப் பற்றி 
ஒரு கவிதை எழுதினேன் 

அது உங்கள் 
காலப் புயலின் 
காவியம் என்று 
கைதட்டினீர்கள் 



மக்கள் சபைகளில் 
எனக்கு 
மாலைகள் போட்டீர்கள்!

நீங்கள் போட்ட மாலைகளை 
நான் 
மேடையிலேயே 
விட்டு விட்டேன் 

என் பாடலை மட்டும் 
நீங்கள் 
வீட்டுக்குக் 
கொண்டு சென்றீர்கள் !



உங்களுக்காக 
உங்களைப்பற்றி 
ஒரு பாடல் பாடினேன் ...
என் பாடலுக்காக 
என் மீது ஒரு 
விசாரணை வந்தது.

அதிகாரத்தின் கைகள் 
அர்த்த ராத்திரியில் வந்து 
என்னை 
அழைத்தபோது-

ஓ! என் தோழர்களே!
நீங்கள் 
எங்கே சென்றீர்கள்?



என் நிழலுக்கும் 
விலங்கிடத் துடிக்கும் 
அந்த நியாய ஸ்தலங்களில்-

என் பிணத்துக்கும் 
தண்டனை கொடுக்கத்  
தயாராயிருக்கும் 

அந்த நீதிமான்களின் எதிரில் 

அந்தத் தீர்ப்புத் திருநாளில் -

என் குரல் கேட்கும்!
என் வைகறைப் பாடல் 
மறுபடியும் ஒலிக்கும்!

அந்தக் அழுக்குக்  கரங்களிலிருந்து 
தன்  சமுதாயத்தைக் காக்கப் 
போராடும் ஒரு 
மனிதாபிமானியின் 
வாத விவாதங்கள் நடக்கும்!

அப்போது-
எந்த இருண்ட சுவரின் 
மூலையிலிருந்தாவது 
இதயங்கள் துடிதுடிக்க 
நீங்கள் 
என் குரல் கேட்டுக் 
கை தட்டுவீர்கள் 
கரகோஷம் செய்வீர்கள்!



உங்களுக்காக உங்களைப்பற்றி 
ஒரு பாடல் பாடினேன் 
என் பாடலுக்காக என் மீது ஒரு 
விசாரணை வந்தது...

இந்தக் குற்றக் கூண்டில் ...
சிறைவாசல் முற்றத்தில் ...
சிந்தனையின் புழுக்க அறையில் ...

ஓ! என் தோழர்களே!
என் பாடலை 
பத்திரப்படுத்தினீர்களே -

இப்போது 
என்னை 
என்ன செய்யப் போகிறீர்கள்?


கருத்துரையிடுக

0 கருத்துகள்