இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார் 

உன்னைச் சுற்றி 
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும் 


ராத்திரியின் நீளம் 

விளங்கும் 

உனக்கும் 

கவிதை வரும் 

கையெழுத்து

அழகாகும்

தபால்காரன்

தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே 

கண்ணாடி உடையும் 
கண்ணிரண்டும் 
ஒளிகொள்ளும் 

காதலித்துப்பார் 

***

தலையணை  நனைப்பாய் 
மூன்றுமுறை பல்துலக்குவாய் 

காத்திருந்தால் 
நிமிஷங்கள் வருஷமென்பாய் 

வந்துவிட்டால் 
வருஷங்கள் நிமிஷமென்பாய் 

காக்கைகூட உன்னை 

கவனிக்காது 
ஆனால் இந்த உலகமே 
உன்னை கவனிப்பதாய் 
உணர்வாய் 

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் 

உருவமில்லா உருண்டையொன்று 
உருளைக் காண்பாய் 

இந்த வானம் இந்த அந்தி 

இந்த பூமி இந்தப் பூக்கள் 
எல்லாம் 
காதலை கௌரவிக்கும் 
ஏற்பாடுகள் என்பாய் 

காதலித்துப் பார் 

***
இருதயம் அடிக்கடி 
இடம்மாறித் துடிக்கும் 

நிசப்த அலைவரிசைகளில் 

உனது குரல் மட்டும் 
ஒலிபரப்பாகும் 

உன் நரம்பே நாணேற்றி 

உனக்குள்ளே அம்புவிடும் 

காதலின் திரைச்சீலையைக் 

காமம் கிழிக்கும் 

ஹார்மோன்கள் 

நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும் 

உதடுகள் மட்டும் 

சகாராவாகும் 
தாகங்கள் சமுத்திரமாகும் 

பிறகு 

கண்ணீர்த் துளிக்குள் 
சமுத்திரம் அடங்கும் 

காதலித்துப் பார் 

***
பூக்களில் மோதி மோதியே 
உடைந்து போக 
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை 

அடைந்ததுண்டா?

அழுகின்ற சுகம் 

அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே 

புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும் 

தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம் 

அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில் 

அமிர்தம் இருந்தும் 
பட்டினி  கிடந்து 
பழகியதுண்டா?

காதலித்துப் பார் 

***

சின்னச்சின்னப் பரிசுகளில் 

சிலிர்க்க முடியுமே 

அதற்காகவேனும் 


ஆண் என்ற சொல்லுக்கும் 

பெண் என்ற சொல்லுக்கும் 
அகராதியில் ஏறாத 
அர்த்தங்கள் விளங்குமே 

அதற்காகவேனும் 


வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே 
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே 

அதற்காகவேனும் 


காதலித்துப் பார் 

***

சம்பிரதாயம் 

சட்டை பிடித்தாலும் 

உறவுகள் 

உயிர்ப்பிழிந்தாலும் 

விழித்துப் பார்க்கையில் 

உன் தெருக்கள் 
களவு போயிருந்தாலும் 

ஒரே ஆணியில் இருவரும் 

சிக்கனச் சிலுவையில் 
அறையப்பட்டாலும் 

நீ நேசிக்கும் 

அவனோ அவளோ 
உன்னை நேசிக்க மறந்தாலும் 

காதலித்துப்பார் 


சொர்க்கம் - நரகம் 

இரண்டில் ஒன்று 
இங்கேயே நிச்சயம் 

காதலித்துப்பார்.

***

மழைப்  பிரசங்கம்


யாரங்கே? 


வாருங்கள் 


வருந்திப்பாராம்  
சுமக்கிறவர்களே 

வாருங்கள் 


வாழ்க்கையை 

வயிற்றுக்கு 
விற்றுவிட்டவர்களே 

வாருங்கள் 


கால்களின் 

எண்ணிக்கையால் மட்டும் 
விலங்கினின்றும் 
வித்தியாசப்பட்டவர்களே 

வாருங்கள் 


விண்ணுக்கும் மண்ணுக்கும் 

தண்ணீர்ப்பாலம் பாருங்கள் 

திரவ முத்துக்கள் 
தெறிப்பது பாருங்கள் 

யாசித்த பூமிக்கு 
அந்த வானம் 
வைரக் காசுகள் 
வீசுவது பாருங்கள் 
***

மழை! மழை! மழை!
மழை! மழை! மழை!

மண்ணின் அதிசயம் மழை 

பூமியை வானம் 
புணரும் கலை மழை 

சமுத்திரம் எழுதும் 
சமத்துவம் மழை 
***

அதோ பாருங்கள் 

தாவரங்களுக்கு 
ரத்ததானம் நிகழ்கிறது 

இதோ பாருங்கள் 

மழைபாடும் 
பள்ளியெழுச்சியில் 
ஒவ்வோர் இலையிலும் 
உயிர் சோம்பல் முறிக்கிறது 

இது என்ன ....?

மழையை இந்த மண் 
வாசனை அனுப்பி 
வரவேற்கிறதா?

அங்கே பாருங்கள் 

பள்ளிக்கூடம் விட்ட 
குழந்தைகளாய் 
மழைத் தாரைகள் 

அதோ! அதோ!
பூமியின் மர்மங்கள் 
நனைகின்றன 

சரிதான் 

பூமிக்கு அடிக்கடி 
புனித நீராட்டு விழாவா?
***

வாருங்கள் மனிதர்களே 
சிந்தும் மழையோடு 
சிநேகமாவோம் 

மழையில் தெப்பமாவோம் 

ஒரு துளி உதட்டில் ...
ஒரு துளி கண்ணில்...
ஒரு துளி உயிரின் வேரில்....
***

என்ன...
என்ன சத்தம்?
சாத்தாதீர் ஜன்னல்களை 
அது மழைக்கெதிரான 
கதவடைப்பு 

குடையா....
குடை எதற்கு?
அது 
மழைக்கெதிராய் 
மனிதன் பிடிக்கும் 
கறுப்புக் கொடி 

ஏன்...
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம் 
தபசி ஓடுவதா?
***
அய்யோ!

மழையோடு  வாழாத 
வாழ்வென்ன வாழ்வோ ?

மழையை யாரிங்கே 

மழையாய்  பார்த்தது ....?

திட்டுவார் அதிகாரி 

மழைக்கு 
ஊழியர் வைத்த பெயர் 
'மெமோ'

மூழ்கியது பயிர் 
மழைக்கு 
விவசாயி வைத்த பெயர் 
'கடன்'

கூட்டம் ரத்து 
மழைக்கு 
அரசியல்வாதி வைத்த பெயர் 
'சனியன்'

விற்பனை மந்தம் 
மழைக்கு
வியாபாரி வைத்த பெயர் 
'நஷ்டம்'

வாடிக்கை இல்லை 
மழைக்கு 
விலைமகள் வைத்த பெயர் 
'பட்டினி'

பள்ளி இல்லை 
மழைக்கு 
மாணவர் வைத்த பெயர் 
'விடுமுறை '

மழையை யாரிங்கே 
மழையாய்ப் பார்த்தது ?
***
இனிமேல் மழை பெய்தால் 

நின்ற இடம் பெயராது 
நில்லுங்கள் 

நகரும் வாகனங்களுக்கு 
நங்கூரம் பாய்ச்சுங்கள் 

வீட்டுப் பறவைகளே 
வெளியேறுங்கள் 

கதவுகள் ஜன்னல்கள் 
கண்கள் காதுகள் 
திறந்து வையுங்கள் 

மழை தேவதை 
மண்ணுக்கும் விண்ணுக்கும் 

சங்கீதம் பாடிக்கொண்டே 
சதுராடுகிறாள் 

எல்லோரும் ஒருமுறை 
கைதட்டுங்கள் 

இதுவரை நீங்கள் 
மழையைப் பார்த்தது 
பாதிக் கண்ணால் 

ஒலி கேட்டது 
ஒரு காதால் 

போதும் மனிதர்களே

பூட்டுப்  போட்டுப் 
பூட்டுப்  போட்டுப் 
புலன்களே பூட்டாயின 

திறந்து விடுங்கள் 

வாழப்படாத வாழ்க்கை 
பாக்கி உள்ளது 

உங்கள் வீட்டுக்கு 
விண்ணிலிருந்து வரும் 
விருந்தாளியல்லவா மழை?

வாருங்கள் 

மழையை 
நம்வீட்டுத் 
தேநீருக்கழைப்போம் 
***

புத்தக புராணம் 


என்னை 
மணல்கருகும் 
பாலையில் விடுங்கள் 

இருப்பேன் 

ஜீவராசி இல்லாத் 
தீவில் இடுங்கள் 

கிடப்பேன் 

காற்றே தொடாத 
கிரகத்தில் விடுங்கள் 

உயிர்ப்பேன் 

ஆனால்
என்னைப் 
புத்தகம் இல்லா அறையில் 
பூட்டுங்கள் 

இரண்டொரு மணியில் 
இறப்பேன் 
***

உயிரின் சுவாசமல்லவா 
புத்தகம்?

உனக்குள் ஒரு சூரியனல்லவா 
புத்தகம்?

அட்டையிட்ட  அமுதமல்லவா 
புத்தகம்?

உனக்கு வரம்வர 
யாரோ இருந்த தவமல்லவா 
புத்தகம்?
***

ஒரு 
நல்ல புத்தகம் திறந்து கொண்டால் 
நரகத்தின் வாசல் மூடப்படும் 

ஒவ்வொரு பக்கம் நகரும்போதும் 
நீ 
எதிர்காலத்துள் எட்டுவைக்கிறாய் 

ஒரு புத்தகம் முடிகிறது 
மனசின் மர்மப்பிரதேசம் விடிகிறது 
***

புத்தகம் என்பது 
எத்தனை அற்புதம்?

தூரம் 
தூர்ந்துபோகும் 

இறந்தகாலம் 
மீண்டும் வாழும் 

கத்தியின்றி ரத்தமின்றி 
உள்ளங்கையில் யுத்தம் 
***

புத்தகம் என்பது 
எத்தனை சௌகரியம்?

இதோ
செவ்வாய் கிரகம் 
பத்து ரூபாய் 

இதோ 
கிளியோபாட்ரா 
என் பக்கத்தில் 

அதோ 
என் மேஜைமேல் நிலா 

என் பரண்மீது 
பசிபிக் கடல் 

கால்மாட்டில் 
அண்டார்டிக்கா 

கட்டிலின் கீழே 
ராஜராஜசோழன் 

அடடா 
புத்தகம் என்பது 
எத்தனை சௌகரியம்?
***

சில நூல்கள் 
மலைகள் 
பார்க்கலாம் 
பெயர்க்க முடியாது 

சில நூல்கள் 
சாலை ஓரப் பெண்கள் 
ரசிக்கலாம் 
பின்பற்றக்கூடாது 

சில நூல்கள் 
கண்ணாடிகள் 
நித்தம் ஒருமுறை 
பார்த்தாக வேண்டும் 

சில நூல்கள் 
விலை மகளிர் 
முடித்ததும் 
மறந்துவிட வேண்டும் 

சில நூல்கள் 
பணம் மாதிரி 
எப்போதும் கையில் 
இருக்க வேண்டும் 
***

புத்தகத்தின் புனிதம் 
எத்தனைபேர் அறிவார்?

மாணவர்க்கு அது 
கட்டாயத்தாலி 

காதலர்க்கு 
தபால்பெட்டி 

விருந்தாளிகட்கு 
தலையணை 

சிலருக்கு 
அது சேமிப்புவங்கி 

நூலகர்க்கு அது 
ஓர் எண்ணிக்கை 

புத்தகத்தின் புனிதம் 
எத்தனைபேர் அறிவார்?
***
புத்தகம் 
நாகரிகத்தின் உச்சம் 

மணல் - கல் 
பனைஓலை - காகிதம் 
ஒலியிழை - ஒளியிழை 
கணிப்பொறி 

புத்தகத்தின் அவதாரம் 
காலந்தோறும் மாறும் 

வாகனம் வேறு வேறு 
இலக்கு ஒன்றுதான் 

மானுடம் 
மானுடம் 

***
ஐந்து பெரிது  ஆறு சிறிது 


"சீ மிருகமே!"
என்று 
மனிதனைத் திட்டாதே 
மனிதனே
***

எந்த விலங்கும் 
இரைப்பைக்கு மேலே 
இன்னொரு வயிறு 
வளர்ப்பதில்லை 

எங்கேனும் 
தொப்பைக் கிளியோ 
தொப்பை முயலோ 
பார்த்ததுண்டா?
***

எந்த விலங்குக்கும் 
சர்க்கரை வியாதியில்லை 
தெரியுமா?
***
இன்னொன்று:
பறவைக்கு வேர்ப்பதில்லை 
***

எந்தப் பறவையும் 
கூடுகட்டி 
வாடகைக்கு விடுவதில்லை 
***
எந்த விலங்கும் 
தேவையற்ற நிலம் 
திருடுவதில்லை 
***
கவனி மனிதனே 
கூட்டு வாழ்க்கை இன்னும் 
குலையாதிருப்பது 
காட்டுக்குள்தான் 
***
அறிந்தால் 
ஆச்சரியம் கொள்வாய் 

உடம்பை உடம்புக்குள் புதைக்கும் 
தொழுநோய் 
விலங்குகளுக்கில்லை 
***
மனிதா 
இதை 
மனங்கொள் 

கர்ப்பவாசனை 
கண்டுகொண்டால் 
காளை பசுவைச் 
சேர்வதில்லை 
***
ஒருவனுக்கொருத்தி 
உனக்கு வார்த்தை 
புறாவுக்கு  வாழ்க்கை 

எந்தப் புறாவும் 
தன் ஜோடியன்றி 
பிறஜோடி  தொடுவதில்லை 
***

பூகம்பம் வருகுதெனில் 
அலைபாயும் விலங்குகள் 
அடிவயிற்றில் சிறகடிக்கும் 
பறவைகள் 
***

இப்போது சொல் 

அறிவில் 
ஆறு பெரிதா?
ஐந்து பெரிதா?
***
மரணம் நிஜம் 
மரணம் வாழ்வின் பரிசு 

மாண்டால்....
மானின் தோல் ஆசனம் 
மயிலின் தோகை விசிறி 
யானையின் பல் அலங்காரம் 
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம் 
***

நீ மாண்டால்....

சிலரை 
நெருப்பே நிராகரிக்கும் 
என்பதால்தானே 
புதைக்கவே பழகினோம் 
***

ஒன்று கேட்கிறேன் 

எல்லா விலங்கும் 
மனிதனுக்குப் பாலூட்டும் 

எவளேனும் ஒருதாய் 
விலங்குக்குப் பாலூட்டியதுண்டா?
***
"சீ மிருகமே!"
என்று 
மனிதனைத் திட்டாதே 
மனிதனே 
***
கொஞ்சம்பொறு 
காட்டுக்குள் என்ன சத்தம்...

ஏதோ ஒரு  மிருகம் 
இன்னொரு மிருகத்தை 
ஏசுகிறது 

"சீ மனிதனே!"
***


கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை 


தற்கொலை  புரியப்போய் 
மரணம் மறுதலிக்க 
வாழ்க்கைக்குள் மீண்டும் 
துப்பப்பட்டவனே 
சொல் 

பேய்களின் விருந்துமண்டபமாய் 
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது 
முள்முளைத்தது உனக்கு?
***
மரணத்தின் கர்ப்பப்பையில் 
கலைந்து போனவனே 

நீ செத்திருந்தால் 
ஊர் அழுதிருக்கும் 
சாகவில்லை 
நீயே அழுகிறாய் 
***

கைக்குட்டை இந்தா 
கண்களைத் துடை 

உயிரின் உன்னதம் 
தெரியுமா உனக்கு?

மனிதராசியின் 
மகத்துவம் தெரியுமா?
***
உயிர் என்பது 
ஒரு துளி விந்தின் 
பிரயாணம் இல்லையப்பா 
அது 
பிரபஞ்சத்தின்  சுருக்கம் 

உன்னை அழித்தால் 
பிரபஞ்சத்தின் 
பிரதியை அழிக்கிறாய் 
பிரபஞ்சத்தை அழிக்க 
உனக்கேதப்பா உரிமை?

வாழ்க்கை உன்னை 
பூமிக்கு அனுப்பியபோது 
கைநிறையப் பூக்கள் 

இப்போதென்ன...
பைநிறைய சவப்பெட்டி ஆணிகள் ....?

ஓ!
வாழ்க்கையோடு உடன்பாடு 
மனிதரோடுதான் முரண்பாடா?

மனிதரைக் கழித்தாலும் 
பூமி மிச்சப்படுமடா பாவி 
***
பூமியைக் கைவிடப் பார்ப்பவனே 
பூமி உன்னைக் கைவிடவில்லையப்பா

காற்று உன்னை மட்டும் 
விட்டுவிட்டு வீசியதா?

தன் கிரணக் கீற்றுகளை 
நிலா உன்மீது 
நிறுத்திக் கொண்டதா?

பூக்கள் உன்னைக் கண்டு 
இலைகளின் பின்னால் 
தலைமறைவாயினவா?

தன் சிகரங்களில் வசிக்க 
வாழ்க்கை உன்னை 
வரவேற்கிறது 

நீ ஏன் 
மரணத்தின் பள்ளத்தாக்கை 
நகங்களால் தோண்டுகிறாய் 
***

உயிரின் விலையை 
உணர்த்த வேண்டும் உனக்கு 

எழுந்திரு 
என் பின்னால் வா 

அதோ பார் 

உயிரில் பாதி 
ஒழுகிவிட்டாலும் 
மிச்ச உயிரைக் 
கோணிப்பையில் கட்டிவைத்துக் 
கூனிக்கிடக்கிறானே கிழவன்! ஏன்?

அபாயம் அறிந்தால் 
அங்குலப் புழு 
மில்லி மீட்டர்களாய்ச் 
சுருள்கிறதே! ஏன்?

பறவையாய் இருந்தும் 
பறக்காத கோழி 
பருந்து கண்டதும் 
பறந்தடிக்கிறதே! ஏன்?

மரணம் என்ற 
நிஜத்திற்கு எதிராய் 
மருத்துவமனையெல்லாம் 
பொய்யாக இன்னும் 
போராடுவது ஏன்?

வலையருந்து நிலை குலைந்தும் 
அந்த ஓரிழைச் சிலந்தி 
ஊசலாடுகிறதே! ஏன்?

வாழ்க்கையின் 
நிமிஷ நீட்டிப்புக்குத்தான் 
***
தம்பீ!

சாவைச் 
சாவு தீர்மானிக்கும் 
வாழ்க்கையை
நீ தீர்மானி 

புரிந்துகொள் 

சுடும் வரைக்கும் நெருப்பு 
சுற்றும் வரைக்கும் பூமி 
போராடும் வரைக்கும் மனிதன் 
நீ மனிதன் 
***

கடைசிப் பகல் 

(இன்னும் பலலட்சம் ஆண்டுகளில் சூரியன் அணைந்து விடுமாம். அதன்பின் எப்போதும் பூமிக்கு இரவுதானாம்.  பூமிக்கு வரவிருக்கும் 
அந்தக் 'கடைசிப்பகல்' பற்றிச் சிந்தித்தபோது )

பூமிக்கு இன்றுதான் 
கடைசிப் பகல் 
இனி இந்த பூமி 
சூரியனின் கல்லறை 

இன்று ஏற்றப்படும் விளக்குகளை 
இனி அணைக்க முடியாது மனிதனே 

இனி 
பூபாளம் இல்லை 

வாசல் தெளிக்கும் 
வளையோசை இல்லை 

உன் ஜன்னல் கம்பிகளுக்குத் 
தங்கமுலாம் பூசும் 
அதிகாலை இனி இல்லை 

பூமியரங்கில் 
யுகம் யுகமாய் 
ஓடிக் கொண்டிருந்த பகல்காட்சி 
இன்றுதான் கடைசி 

நாளைமுதல் 
கிழக்கு திலகமிழக்கும் 
திசைகள் 
பதவியிழக்கும் 

கார்களில் 
மின்னணுக்கள் திசைகாட்டும் 

வான சாஸ்திரம் 
திருத்தப்படும் 

இனி 
கிரகத் தொகுதிக்குப் பெயர் 
சூரிய குடும்பமல்ல 
சூன்ய குடும்பம் 
***

பூமிக்கு இனிமேல் 
வருடங்கள் இல்லை 
பூமிக்கு இனிமேல் 
பருவங்கள் இல்லை 

இருளின் மடியில் உலகம் 
உலகின் மடியில் இருள் 
நிலாவுக்கு இனிமேல் 
நித்திய அமாவாசைதான் 
***

விஞ்ஞானிகள் 
விடிய விடிய (மன்னிக்கவும்)
இருள இருளச் 
சிந்திப்பார்கள் 

மரணப் படுக்கையில் பூமி 
ரத்ததானம் செய்வது யார்?

இந்த பூமி ஓட்டின் மேல் 
படிப்படியாய்ப் பனிப்படலம் 
கடல் இருந்த பரப்பெல்லாம் 
பனிக்கட்டிப் பாலவனம் 

மாஜி கடல்களில் 
'மனைகள் வாங்க - விற்க'
அறிவிப்புப் பலகைகள் 

பூமிக்கு இனிமேல் 
புயல்மழை இல்லை 

குடி தண்ணீர் ...?

பரவாயில்லை 
பாலித்தீன் பைகளில் 
பனிக்கட்டி விற்கலாம் 
***
இலைகளுக்கு இனி 
ஒளிச்சேர்க்கை இல்லை 

மரங்கள் மரிக்கும் 
கரியமில வாயுவால் 
காற்று கனக்கும் 

அங்கங்கே 
மொத்தமாகவும் சில்லறையாகவும் 
ஆக்சிஜன் விற்கும் 

மண்ணின் மனிதர்கள் 
மலையேறும் மனிதர்களாய் 
ஆக்சிஜன் சுமந்து 
அலைந்து திரிவர் 
***

ஏது செய்வாய் 
மனிதா?

தன் அடிவயிற்று நெருப்பும் 
அணைந்து விட்டால் 
இந்த பூமியும் இறந்துவிடும் 

பூமியைப் புதைக்க 
அவ்வளவு பெரிய கல்லறைக்கு 
எங்கே போவாய்?

கூடாது 
பூமி இறந்துவிடக் கூடாது 

கூடாது 
மனிதராசி மாண்டுவிடக்கூடாது 
***

ஒவ்வொரு நட்சத்திரமும் 
பலமடங்கு சூரியனாமே 

மனிதா 
இந்த பூமியை 
ஒரு 
நட்சத்திரத்தை நோக்கி நகர்ந்து 
அல்லது 
ஒரு 
செயற்கைச் சூரியன் சிருஷ்ட்டி 






அல்லது 
உஷ்ணம்தானே வேண்டும் 
ஏதேனும் ஒரு கிரகத்தை எரி 

உன்னால் முடியும் 
நீ கடவுளையே படைத்தவன் 
இதையா படைக்க மாட்டாய் 
****




கருத்துரையிடுக

1 கருத்துகள்