கஸ்தூரியைத் தேடி அலையும் மான் என் அழுகை சூரியனை நனைத்தது என் கண்ணீர்த் துளிகள் விழுந்த இடத்தில் நட்சத்திரங்கள் பூத்தன . நட்சத்திரங்களையும் பூக்களையும் ஒரே மாலையாகத் தொடுத்தவன் என் கண்ணீர்த் துளிகளையும் சேர்த்துத் தொடுத்தான் . என் சூரியனுக்கு உதயம் மட்டுமே உண்டு அஸ்தமனம் இல்லை என் அணுவில் அண்ட சராசரங்கள் சுழல்கின்றன எனக்குள் எனக்கே தெரியாத ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன வசந்தத்தின் ஸ்பரிசம் படுவதற்கு முன்பே என் பூங்கா மலர்ந்துவிடுகிறது. பூக்கள் சொல்ல முடியாத பேருண்மைகளை என் பாக்கள் சொல்கின்றன என்னிலிருந்து எழுந்த இசையைக் கேட்டு இசைக் கருவிகள் எல்லாம் ஊமையாயின இசைத் தேவதையே என் பாடல்களைக் கேட்டு வியந்தாள். கண்ணுக்குத் தெரியாத ஒரு சூரியனின் கிரணத்தைப் போல் நான் இந்த உலகிற்கு வந்திருக்கிறேன் என்னை நானே அறியவில்லை என்னைத் தேடுவதில் நான் என்னைத் தொலைத்து விட்டேன் தனக்குள் இருக்கும் கஸ்தூரியைத் தேடி அலையும் மான் நான் தேடல் எனக்கு விதிக்கப்பட்டிருந்தது...