பின்னர் ஒரு வயது முதிர்ந்த பூசாரி அவரை நோக்கி, 'எங்களுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்' என அவர் கூறினார்.
நான் உங்களிடையே இன்று, வேறு எதைப் பற்றியாவது பேசினேனா?
சமயம் என்பது எல்லாச் செயல்களும் எல்லாச் சிந்தனைகளுமேயன்றோ?
அதுதான் செயல்களும் சிந்தனைகளும் இல்லையாயினும், கைகள் கல்லைச் செதுக்கும் போதோ, தறியைச் செப்பனிடும் போதோ, மக்கள் ஆத்மாவிலிருந்து திடீரென உதயமாகும் வியப்பும் உணர்வுமே அன்றோ?
யாரால் தன்னுடைய செயல்களில் இருந்து தன் விசுவாசத்தைத் துண்டித்துக் கொள்ள முடியும்? அல்லது தன் தொழிலில் இருந்து தன் நம்பிக்கையைப் பிரிக்க முடியும்?
யார் தன்னுடைய காலத்தைத் தனக்கு முன்னால் பரப்பி, இது கடவுளுக்காக, இஃது எனக்காக என்றும், இஃது என் ஆத்மாவுக்கு, இஃது என் உடலுக்கு என்றும் கூற முடியும்?
எல்லா நாழிகைகளும் ஓர் ஆத்மாவிலிருந்து மற்றோர் ஆத்மாவுக்குச் சிறகடித்துப் பறப்பனவே.
யார் தம்முடைய ஒழுக்கமே, தனக்குச் சிறந்த ஆடை எனக் கொள்கின்றனரோ அவருக்கு வேறு ஆடையே தேவை இல்லை.
புயலும் ஞாயிற்றின் வெப்பமும் அவர் உடலைத் துளைத்தெடுக்க முடியாது.
எவன் தன்னுடைய நடத்தைகளுக்கு நீதி நூல்களை ஆதாரம் காட்டுகிறானோ, அவன் தன்னுடைய பண்ணிசைக்கும் குயிலைக் கூட்டில் அடைத்தவன் ஆவான்.சுதந்தரமாக கீதம் இரும்புக் கதவுகளுக்கு உள்ளிருந்து கிளம்புவதில்லை.
யாருக்கு வழிபாடு என்பது திறந்து மூடக்கூடிய ஒரு பலகணியாக விளங்குகின்றதோ, அவர் விடியற்காலம் முதல் அடுத்த விடியற்காலம் வரையிலும் உள்ள காலமெல்லாம், வழிபாடு செய்யும் பலகணியாக விளங்கும் தன் ஆத்மாவின் வீட்டைக் கண்டவர் அல்லர்.
உங்களுடைய அன்றாட வாழ்வே உங்கள் கோயிலும் சமயமுமாகும்.
நீங்கள் அதில் நுழையும் போதெல்லாம் உங்களிடமுள்ள அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள்.
கலப்பை, உலைக்களம் , சம்மட்டி, வீணை முதலிய யாவற்றையும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், இவை எல்லாம் உங்கள் தேவைக்கும் மகிழ்ச்சிக்குமாக நீங்கள் அமைத்துக் கொண்டவையே.
ஏனெனில், வெறும் வழிபாட்டின் மூலமாக, அவர்களது நம்பிக்கையைக் காட்டிலும் நீங்கள் உயரப் பறக்கவோ, அவர்கள் தம் நம்பிக்கை இழந்த பரிதாப நிலையைக் காட்டிலும் உங்கள் பணிவினால் நீங்கள் தாழவோ முடியாது.
நீங்கள் இறைவனை அறியக் கூடுமானால், வாழ்க்கைச் சூத்திரங்களுக்குப் பேருரை செய்யாதீர்கள். அதைவிட உங்களைச் சுற்றி நோக்குங்கள்.
இறைவன் உங்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
வெட்ட வெளியைக் காணுங்கள் இறைவன் முகில் மீது நடந்து சென்று, மின்னலெனத் தன் கைகளை நீட்டி மழையூடே கீழிறங்குவதைக் காண்பீர்கள்.
அவன் மலர்களிலே முறுவலித்தது. பின் மேலுறு மரக்கிளைகளிலே தன் கைகளை நீட்டி உங்களை அழைப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.
0 கருத்துகள்