ஆல்மித்ரா பின்னர் அவரை நோக்கி, 'நாங்கள் இப்போது மரணத்தைப்பற்றி விளக்கங் கேட்கிறோம்' என, அவர் சொல்வார்:
மரணத்தின் இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும்.
ஆனால், வாழ்க்கையின் இதயத்திலே தேடினால் அன்றி, நீங்கள் அதை எவ்வண்ணம் காண இயலும்?
இரவில் மட்டுமே காணக் கண் படைத்திட்ட ஆந்தை, பகலில் காண இயலாததால் ஒளியின் தத்துவத்தை அஃது அறிய முடியாது.
உண்மையாகவே மரணத்தின் ஆற்றலை நீங்கள் காண விரும்பினால் உங்கள் வாழ்வின் பரு உடலைக் காண, இதயத்தை நன்கு திறந்து விடுங்கள்.
ஏனெனில், வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போல் ஒன்றேயாகும்.
உங்கள் நம்பிக்கை, ஆசை இவற்றின் ஆழத்திலே எட்டாத் தொலைவின் மௌன அறிவு தங்கியுள்ளது.
பனிப்படலத்தின் கீழே நிலத்தின் அடியில் புதைந்துள்ள ஒரு விதை கனவு காண்பதைப் போல, உங்கள் இதயம் வசந்தத்தைப் பற்றிக் கனவு காண்கிறது.
கனவுகளை நம்புங்கள். ஏனெனில், அவற்றிலே தான் மோட்சத்தின் வாயில் அமைந்திருக்கிறது.
மரணத்துக்கு நீங்கள் அஞ்சி நடுங்குதல் கௌரவத்தின் அடையாளமாகத் தன் தலை மீது கைவைக்கக் கையை நீட்டும் அரசன் முன்னர் நிற்கும் ஓர் ஆட்டிடையன் நடுங்குகின்ற நடுக்கத்தைப் போன்றதே ஆகும்.
ஆட்டிடையனுக்குத் தன் நடுக்கத்தின் அடித்தளத்திலே தான் அரசனின் கௌரவத்தைப் பெறப் போகிறோம் எனும் மகிழ்ச்சியும் உள்ளதன்றோ?
மாறாக, அதைக் காட்டிலும் அவன் தன்னுடைய நடுக்கத்தைப் பற்றிய உணர்வும் அதிகமாகப் பெற்று இருக்கிறான் அல்லனோ?
இறந்து விடுதல் என்பது என்ன? பனிக்கட்டியைப் போலப் புயலிலே நின்று, கதிரவனால் உருகிப் போவதைப் போலன்றி மற்றென்ன?
மூச்சுவிடுவதை (உயிர்ப்பை) அதனுடைய ஓய்வற்ற அலைகளில் இருந்து விடுதலையளித்து, அதன் மூலமாக, அந்த மூச்சு உயர்ந்து வியாபித்துத் தளையற்ற கடவுளைத் தேடுவதைத் தவிர, மூச்சு நின்றுவிட்டது என்பதற்குப் பொருள் என்ன?
அமைதி என்னும் ஆற்று நீரைப் பருகினால் தான் உங்களால் நிச்சயமாகப் பாட முடியும். மலை உச்சியை நீங்கள் அடைந்த பின்னர் தான் உங்களால் இன்னும் மேலே உயர முடியும்.
நிலம் எப்போது உங்கள் உறுப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறதோ அப்போது தான் உங்களால் உண்மையில் களிக்கூத்தாட முடியும்.
0 கருத்துகள்