அதன் பின் ஒரு கவிஞன் அவரைப் பார்த்து, 'ஐய ! அழகைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள்' என்றான். அவர் சொல்லத் தொடங்கினார்:
அழகு எங்கே உள்ளது என்று உங்களால் தேட முடியுமா? அந்த அழகே உங்கள் வழியாகவும் வழித்துணையாகவும் இருந்தாலன்றி, அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?
அந்த அழகே உங்கள் வார்த்தைகளின் கோர்வையாக அமைந்தாலன்றி, அதைப்பற்றி நீங்கள் எப்படிப் பேசமுடியும்?
வருத்தப்படுவோரும் துன்பப்படுவோரும், அழகு என்னும் நங்கை, பரிவும் கனிவும் உடையவள்; தனக்கே உரிய பெருமிதத்தினால் நாணத்தோடு நடைபயிலும் கன்னித் தாயைப் போல், அந்த அழகு நம்மிடையே நடை பயில்கிறாள் என்கின்றனர்.
ஆர்வம் மிக்கவர்களோ அப்படியன்று. அழகென்பது வன்மையும் அச்சமும் நிறைந்தது. புயலைப் போல, அது நம் காலடியில் உள்ள பூமியையும் மேலுள்ள விண்ணையும் அசைத்து ஆட்டிவிடுகின்றது என்கின்றனர்.
களைப்புற்றவர்களும் சலிப்படைந்தவர்களும், அழகென்பது நம் காதின் அருகிலே கிசுகிசுக்கும். மென்மையாக ரகசியமாகப் பேசும் தன்மை வாய்ந்தது. நம்முடைய ஆத்மாவிலேதான் அது உரையாகும் என்றும், சிறிய சுடர் இருளுக்கஞ்சி நடுங்குவதைப்போல, நம்முடைய அமைதியிலே அதனுடைய குரல் வளைந்து கொடுக்கின்றது என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அமைதியற்றவர்கள் அந்த அழகு மலையினிடையே உறுமுவதை நாம் கேட்டிருக்கிறோம் என்றும், அவ்வழகினது ஒளியிலிருந்தே விலங்கினத்தின் குளம் பொலியும் , பறவைச் சிறகின் படபடப்பும், சிங்கத்தின் முழக்கமும் உண்டாகின்றன என்றும் உணர்கின்றனர்.
நகரத்தை இரவிலே காவல் காக்கும் காவலன், அழகு என்பது கீழ்த்திசையிலே வைகறையோடு தான் தோன்றுகிறது என்கின்றான்.
உச்சி வேளையிலே உழவர்களும் வழிப்போக்கர்களும், நாங்கள், அவ்வழக்கு மாலை நேரத்தின் பலகணியிலே சாய்ந்து, நிலத்தை நோக்குவதைக் கண்டிருக்கிறோம் என்கின்றனர்.
வீதியில் உறைந்து பனிக்கட்டியைக் கூட்டித் தள்ளும் பணியாளனோ அழகென்பது மலை முகட்டின் மீதிருந்து தாவிக் குதித்து வசந்தத்தோடு தான் வரும் என்கிறான்.
கோடையிலே அறுவடை செய்யும் உழவர்கள் அழகென்னும் நங்கை, சரத் காலத்திலே ,தன் கூந்தலில் பனித்துளிகள் சொட்டச் சொட்ட இலைகளூடே நடனமாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம் என்கின்றனர்.
அழகைப் பற்றி நீங்கள் இப்படி எல்லாம் பேசி இருக்கிறீர்கள்.
ஆனால், உண்மையிலே நீங்கள் அழகைப் பற்றிப் பேசவே இல்லை. உங்களுடைய நிறைவேற்றப்படாத தேவைகளைப் பற்றியே தான் நீங்கள் பேசியுள்ளீர்கள்.
அழகென்பது ஒரு தேவையன்று; மகிழ்ச்சியின் உச்சம்.
அஃது ஒரு நீர்வேட்கை கொண்ட வறண்ட நாவோ, இரப்பதற்கென நீட்டும் வெறுங்கையோ அன்று. உண்மையிலேயே அது ஒரு கொழுந்து விட்டெரியும் இதயமும், மந்திரத்தால் கட்டுண்ட உயிராற்றலுமாம். அது நீங்கள் பார்க்கின்ற உருவமுமன்று; கேட்கின்ற இன்னிசையுமன்று.
ஆனால், அழகென்பது நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டிருப்பினும் காணும் உருவமாகவும், உங்கள் காதுகளை அடைத்துக் கொண்டிருப்பினும் கேட்கின்ற இன்னிசையாகவும் விளக்குவதாகும்.
அது பிழியப்பட்ட மரப்பட்டையின் சாற்றிலே வடித்தெடுக்கும் பானமன்று ; அதல்லாமல் கூர் அலகோடு இணைக்கப்பட்டுள்ள சிறகுகளுமன்று.
உண்மையிலேயே அஃது எக்காலமும் மலர்ந்துள்ள பூங்காவும் எக்காலமும் பறந்து திரிகின்ற தேவ தூதர்களின் கூட்டமும் ஆகும்.
ஆர்பலீஸ் நகர மக்களே, வாழ்க்கை தனது புனிதமான முகத்திரையை விலக்கும் போது , வாழ்க்கையே அழகு வாய்ந்தது.
ஆனால் நீங்களே வாழ்க்கை, நீங்களே அதன் முகத்திரை.
அழகோ தோற்றமும் முடிவுமற்றது. அது தன்னைத் தானே ஒரு கண்ணாடியில் காண வல்லது.
ஆனால், நீங்களே தோற்றமும் இறுதியும் அற்றவர்களாயும் நீங்களே கண்ணாடியாகவும் இருக்கின்றீர்கள்.
0 கருத்துகள்