நட்பு

      அங்கிருந்த ஓர் இளைஞன், 'எமக்கு நட்பைப் பற்றிச் சொல்ல வேண்டும்' என, அவர் கூறுவார்:

     உங்களது நிறைவேற்றப்பட்ட தேவைகளே உங்கள் நண்பன் ஆகும்.

     நீங்கள் அன்போடு விதை தூவி, நன்றியோடு அறுவடை செய்யும் வயலும் அவனே.

     உங்கள் உணவும் உங்களது குளிர்காயும் கணப்பும் அவனே.

     ஏனெனில், அவனிடம் நீங்கள் பசியுடனே வருகின்றீர்கள்;

     உங்கள் அமைதிக்காகவே அவனைத் தேடுகின்றீர்கள்.

  உங்கள் நண்பன், தன் உள்ளத்தைத் திறந்து உங்களிடம் பேசும் போது, உங்கள் உள்ளத்திலே உதிக்கும் மாறான கருத்துக்கான அச்சமும் நீங்கள் கொள்வதில்லை.  உடன்பாட்டுக் கருத்தையும் நீங்கள் மறைப்பதில்லை.

     அவன் பேசாமல் மௌனமுற்றிருக்கும் போதும் உங்கள் நெஞ்சம் அவன் இதய ஒலியைக் கேட்பதைத் தடுப்பதும் இல்லை.

     ஏனெனில், நட்பின் இடையே சொற்களின்றி எல்லா நினைவுகளும், எல்லா அவாக்களும், விருப்பு வெறுப்புகளும், எல்லா எதிர்பார்த்தலும் உதித்து இருவரிடையேயும் மகிழ்வோடு, ஆனால் ஆரவாரமின்றிப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

     உங்கள் நண்பனிடமிருந்து, நீங்கள் பிரியும் காலத்திலே நீங்கள் வருந்த வேண்டா.

     ஏனெனில், சமவெளியில் இருந்து காணுவதைக் காட்டிலும் மலைமேல் ஏறி உச்சியை அடைந்தவனுக்கு மலை எப்படி விளக்கமாகத் தெரியுமோ, அதைப்போல், உங்கள் நண்பனிடமிருந்து எதை நீங்கள் அதிகமாக விரும்பி அன்பு கொண்டீர்களோ, அஃது அவன் பிரிவுக் காலத்திலே மிக விளக்கமாகத் தென்படும்.

     உங்களது உயிராற்றலை ஆழச் செய்வதன்றி வேறு எப்படிப்பட்ட பிரதிபலனும் நட்பிடையே நிலவாமல் இருக்கட்டும்.




     ஏனெனில், அன்பென்பது தன்னுடைய மறைபொருளை வெளிப்படுத்துவதன்றிப் பிறவற்றைத் தேடுவது அன்று.  ஆனால், அன்பற்ற ஒன்றோ வீசப்பட்ட வலையை ஒப்பானதே ஆகும்.  அந்த வலையில் இலாபமற்றவையே அகப்படும்.

     உங்களுடைய மிகச் சிறந்தவை யாவும் உங்கள் நண்பனுடையவை ஆகட்டும்.

     அவன் உங்கள் உள்ளக் கடல் அலைகளின் தணிவை அறிவதைப் போலவே, அவ்வலைகள் பொங்கிவரும் பெருக்கத்தையும் அறியட்டும்.

     நாழிகைகளைக் கொலை செய்ய உங்கள் நண்பனை நீங்கள் தேடுவதானால் அந்த நண்பன் எத்தகையவன்? 

     எப்போதும் வாழும் நாழிகைக்காக அவனைத் தேடுங்கள்.  உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது தான் அவன் கடமையேயன்றி உங்கள் வெறுமையைப் பூரணமாக்குவதன்று.

     நட்பின் இனிமையிலே, நகையும் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளுதலும் நிலவட்டும்.

     ஏனெனில், சிறிய பொருள்களின் பனித்துளியிலே தான் இதயம் தன் வைகறையைக் கண்டு புத்துணர்வைப் பெறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்