இன்பமும் துன்பமும்

      அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா! இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார்:

     உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை களையப்பட்ட துன்பங்களே.

     உங்களது இதயத்தின் நிறைவினின்று எது உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக இருந்ததோ அதுவே உங்கள் கண்களைக் 
கண்ணீரால் நிறைக்கவும் காரணமாகலாம்.

     மற்று  வேறெப்படி இருக்க முடியும்?

     துன்பம் உங்கள் உள்ளத்தின் எவ்வளவு அடி  ஆழத்தில் உளைகின்றதோ அவ்வளவுக்கு அதிகமான இன்பத்தை நீங்கள் 
அடைகின்றீர்கள்.




     நீங்கள் பழரசத்தை ஏந்திப் பருகும் அந்தக் குவளை, குயவனாள் சூளையிலே வேகவைத்து எடுக்கப்பட்டது அன்றோ?

     உங்கள் இதயத்தை இன்னிசையால் பரவசப் படுத்தும் அந்த வேய்ங்குழல் கத்தியால் வெட்டிச் சீவி, துளையிட்டுச் செப்பஞ் செய்யப்பட்டது தானே?

     நீங்கள் மகிழ்ச்சியில் மைந்துறும் போது உங்கள் உள்ளத்தையே உள்முகமாக நோக்க அங்கே, எது உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்ததோ,  அதுவே உங்களுக்கு முன்னர் இன்பத்தை நல்கியதாக இருக்கக் காண்பீர்கள்.

     அதைப் போலவே நீங்கள் துன்பத்திலே உழன்றிருக்கும் போதும், உங்கள் நெஞ்சத்தை நோக்குவீர்களானால் எது உங்களுக்கு முன்னர் 
இன்பமாகக் காணப்பட்டதோ, அதுவே, உங்கள் இப்போதைய அழுகைக்கும் காரணம் என்பதைக் காண்பீர்கள்.

     சிலர் இன்பமே துன்பத்தைக் காட்டிலும் சிறந்ததென்றும், மற்றும் சிலர் இல்லை இல்லை துன்பமே இன்பத்தைக் காட்டிலும் 
சிறந்ததென்றும் கூறுகின்றீர்கள்.

     நான் கூறுகிறேன் அவை பிரிக்க முடியாதவை.

     அவை இரண்டும் இணைந்தே வந்தன.  உங்கள் இருக்கையில் ஒன்று உங்களுடன் அமர்ந்திருந்தால் மற்றொன்று உங்கள்  படுக்கையில் உறங்குகின்றதென உணர்வீர்களாக.

     இன்பமும் துன்பமும் இரண்டு புறமும் தொங்கும் துலாத் தட்டாக நீங்கள் இருக்கின்றீர்கள்.

     துலாக்கோல் காலியாக இருக்கும் போது நீங்கள் ஒருபுறம் சாயாமல் நிலைத்துச் சமனாக நிற்கின்றீர்கள்.

     ஆனால், கருவூலத்து முதல்வன் உங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் சீர்தூக்கிப் பார்க்கும்போது தான் உங்கள் இன்பத்தட்டோ துன்பத்தட்டோ தாழ்கின்றது அல்லது உயர்கின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்