பணி

     நீங்கள் பணியில் ஈடுபடுவதால் பூமியோடும் 

     பூமியின் ஆன்மாவோடும் நீங்கள் பயணிக்க 

     முடிகிறது.  முடங்கி கிடப்பது நடக்கும் பருவ காலங்களுக்கு அந்நியமாவதாகும் . எல்லையில்லாத ஒன்றுக்கு  பெருமையோடு 
கீழ்படிந்து அதை நோக்கி கம்பீரமாக நடைபோட்டு செல்லும் பேரணியிலிருந்து விலகுவதாகும்.

     நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது  ஒரு புல்லாங்குழல் ஆகிறீர்கள், உங்கள் இதயத்தின் வாயிலாக காலத்தின் முனுமுனுப்புகள் இசையாக மாறுகிறது .  உங்களில் யார் துளைகள் அற்ற மூங்கிலாகவே, அமைதியாக,பேச முடியாமல் இருக்க விரும்புகிறீர்கள், மற்றவை எல்லாமே இசைந்து பாடும் போது .

     உங்களுக்கு எப்போதும் கூறப்பட்டு இருக்கிறது, பணி என்பது ஒரு சாபம் என்றும் உழைப்பில் ஈடுபட வேண்டியிருப்பது ஒரு துரதிட்டம்  என்றும்.

     ஆனால், நான் சொல்கிறேன் நீங்கள் பணியில் ஈடுபடும்போது தொலைவில் இருக்கும் பூமியின் கனவை நிறைவேற்றுகிறீர்கள், அந்த கனவு பிறந்த போதே உங்களுக்கு என அது வழங்கப்பட்டது.

     நீங்கள் பணியில் ஈடுபடுவதால் வாழ்வை உண்மையாகவே நீங்கள் நேசிக்கிறீர்கள். பணியின் வாயிலாக வாழ்வை நேசிப்பது என்பது வாழ்வின் உள்மைய்ய இரகசியங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகும்.

     ஆனால், உங்கள் வேதனையின் காரணமாக பிறப்பை துன்பம் என்று கூறுகிறீர்கள்.  வயிற்றுக்கான உங்கள் பிழைப்பை நெற்றியின் 
மீது எழுதப்பட்ட சாபமாக கருதுகிறீர்கள். அதற்கு என் பதில், உங்கள் நெற்றி வேர்வையை தவிர வேறு எவற்றாலும் அந்த சாபத்தை அழிக்க முடியாது.

     வாழ்வு என்பது ஒரு இருள் என்று உங்களுக்கு கூறப்பட்டு இருக்கிறது.  நீங்கள் சோர்ந்து  போயிருக்கும் போது, சோர்ந்து  போனவர்களால் கூறப்பட்ட அந்த வார்த்தையை  எதிரொலிக்கிறீர்கள்.




     நான் சொல்கிறேன், வாழ்வு என்பது இருள் தான், ஒரு உயர் நோக்கம் இல்லை என்றால்.  எல்லா உயர்நோக்கமும் கண்மூடித்தனமானவை தான், மெய்யறிவு இல்லை என்றால்.

     எல்லா மெய்யறிவும் வீணானவை தான், பணியில் ஈடுபடவில்லை என்றால். எல்லா பணியும் வெற்றுத்தன்மை கொண்டவை தான்,
அன்பில்லை என்றால். நீங்கள் அன்போடு பணியில் ஈடுபடும் போது,
உங்களோடு ஒன்று கலந்து இருக்கிறீர்கள், ஒருவரோடு ஒருவர், மற்றும் இறைவனோடு இணைகிறீர்கள்.

     அன்போடு பணியில் ஈடுபடுவது என்றால் என்ன?

     உங்கள் இதயத்திலிருந்து திரித்து எடுக்கப்பட்ட நூலில் ஆடை நெய்வதாகும்,  உங்கள் உள்ளன்பானவர் உடுத்திக் கொள்ளப் போகிறார் என்ற எண்ணத்தில்.

     நேசத்தோடு ஒரு வீட்டை காட்டுவதாகும், உங்கள் உள்ளன்பானவர் அதில் வாசம் செய்யப் போகிறார் என்ற எண்ணத்தில்.

     விதைகளை கனிவோடு விதைப்பதாகும், அறுவடையை மகிழ்ச்சியை கொண்டாடுவதாகும், உங்கள் உள்ளன்பானவர் அதை உண்பார் என்ற எண்ணத்தோடு.

     உங்கள் உள்மனத்துடிப்பால் எல்லாவற்றுக்கும் ஒரு காந்த சக்தியை கொடுப்பதாகும். எல்லா இறந்த அருளாசி பெற்றவர்களும் உங்கள் 
அருகே நின்று பணியில் ஈடுபடுவதை கவனிக்கிறார்கள் என அறிந்திருப்பதாகும்..

    அடிக்கடி நீங்கள் இப்படி சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன், தூக்கத்தில் பேசுவதைப் போல,பளிங்கு கல் கொண்டு பணி  செய்பவன்,தன் ஆன்மாவில் வடிவை அந்த கல்லில் காண்கிறான் என்றால், அவன் நிலத்தை உழுபவனை விட சிறந்தவன் என்று.

     வானவில்லை பிடித்து இழுத்து அதன் வண்ணங்களை ஒரு துணியில் மனிதனுக்காக இடுபவன், கால்களுக்கு செருப்பு தயார் 
செய்பவனை விட மேலானவன் என்று.

     ஆனால், நான் சொல்கிறேன், தூக்கத்தில் அல்ல, பகல் பொழுதின் விழிப்புடன், காற்றானது ஓங்கி வளர்ந்த ஓக் மரத்தோடு கூடுதல் இனிமையோடு பேசுவது இல்லை, மிகத் தாழ்ந்து இருக்கும் புல்லின் இதழோடு பேசுவதை விட.

     யார் காற்றின் குரலை தன் வாழ்வின் முயற்சியால் இனிய பாடலாக மாற்றுபவன் எவனோ அவனே  உயர்ந்தவன்.

     பணியில் ஈடுபடுவது என்பது கண்களால் காணப்படும் அன்பு.  உங்களால் விருப்புடன் பணி செய்ய முடியவில்லை, ஆனால் வெறுப்புடனே தான் பணி செய்ய முடிகிறது என்றால்,அந்த பணியை  நீங்கள் விட்டு விலகி கோயில் வாசலில் அமர்ந்து விருப்பமுடன் பணி  
செய்பவர்களிடமிருந்து பிச்சை எடுங்கள்.

     காரணம், நீங்கள் ஈடுபாடின்றி ரொட்டியை தணலில் இட்டால், அது மனிதனின் பாதி பசியை தான் போக்கும்.

     நீங்கள் திராட்சையை மனக்கசப்போடு பிழிந்தால், அந்த மனக்கசப்பு அதன் சாறில் விஷமாக கலந்து விடும்.

     நீங்கள் விருப்பமின்றி தேவதையை போல பாடினாலும் அது நாளின், இரவின் இரைச்சலாகவே மனிதனின் காதில் விழும்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்