ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா! எங்களுக்கு இல்லங்களைப் பற்றிக் கூறுங்கள்', என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்:
நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள் கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக் கானிலே கட்டுங்கள் .
மாலைக் காலத்தின் மங்கிய ஒளியிலே நீங்கள் எவ்வண்ணம் வீடு திரும்புவீர்களோ,அவ்வண்ணமே சேய்மைக் கண்ணே தனித்துள்ள உங்கள் உள்ளமெனும் வழிப்போக்கனும், தன் வீட்டை நோக்கியே திரும்புவான்.
உங்கள் பரு உடலே உங்கள் இல்லம்.
அந்த இல்லம் கதிரவனின் கதிரொளியிலே வளர்ந்து இரவின் அமைதியிலே உறங்குகின்றது.
உங்கள் குடிசை கனவு காண்பதில்லையா? கனவோடே இந்த நகரத்தைவிட்டு நீங்கி, பூங்காவுக்கோ, குன்றின் உச்சிக்கோ போவதில்லையா?
உங்கள் இல்லங்களை எல்லாம் நான் என் கைகளில் ஏந்தி, விதைப்பவன் விதை தூவுவதைப் போலக் காட்டிடையேயும் வயற்புறத்தேயும் தூவுவதற்கியலுமா?
மலையிடையே உள்ள பள்ளத்தாக்குகளே உங்கள் வீதிகளாகவும், பச்சைப் புல்வெளி ஒற்றையடிப் பாதையே உங்கள் வீதிச் சந்துகளாகவும் அமைய, நீங்கள் ஒருவரை ஒருவர் கொடிமுந்திரித் தோட்டங்களிலே
சந்தித்து உங்கள் உடைகளிலே நில நல்லாளின் தூசுபடிய வருதல் கூடுமா?
இவை இப்போதைக்கு இயலாதன .
உங்கள் முன்னோர்கள் தங்களது அச்சத்தினால் உங்கள் யாவரையும் மிக அணுக்கமாக ஒருங்கு சேர்த்தார்கள். அந்த அச்சம் இன்னும் சில காலம் நீடிக்கலாம். இன்னும் சில காலமே, உங்கள் நகரத்தின் மதிற்சுவர்கள் உங்களுடைய வயற்புறத்தை உங்கள் அடுப்பங் கரையிலிருந்து வேறுபடுத்தி நிற்கும்.
ஆர்பலீஸ் நாட்டு மக்களே! உங்கள் இல்லங்களிலே என்ன வைத்திருக்கின்றீர்கள்?மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் எதைக்
காப்பாற்றுகிறீர்கள் என எனக்குக் கூறுவீர்களா?
ஆங்கே உங்கள் வல்லமையை வெளிப்படுத்திக் காட்டும் சாந்த சக்தியாம் அமைதியுண்டோ? நினைவுச் சின்னங்களோ, ஒளிவீசும் விளைவுகளோ, மாட கூடங்களோ உங்கள் உள்ளத்தினைத் தம் உயர்ந்த உச்சியளவுக்கு உயர்த்துவன ஆங்கு உண்டோ?
கற்களாலும் மரத்தாலும் பொலிவூட்டப்பட்டுள்ள அந்த இல்லங்களிலே உங்கள் இதயத்தைத் தூய மலை உச்சிக்கு உயர்த்தத் தக்கதாய் அழகு தான் உண்டோ? இவை உங்கள் இல்லங்களிலே உள்ளனவா?
ஆம் . அந்த ஆசை தான் உங்களுக்குத் தலைவனாகி விடுவது மட்டுமல்லாமல், உங்களை ஆட்டுவிப்போனுமாகிச் சாட்டையால் தாற்றுக்கோலாலும் அடித்துச் சொடுக்கிக் குத்தி உங்களுடைய பேராசைகளைப் பொம்மலாட்டமென ஆட்டியன்றோ வைக்கின்றது.
அதனுடைய கரங்கள் பட்டைப் போல் மிருதுவாக இருந்தாலும் அதன் இதயம் இரும்பைக் காட்டிலும் கடினமானது.
நீங்கள் உறங்கும் படியாக அது தாலாட்டுப் பாடுவது, உங்கள் படுக்கையின் பக்கத்திலே அது நின்று, உங்கள் உடலின் பெருமித்தத்தைக் கேலி செய்வதற்கே.
அந்த ஆசை தான் உங்களுடைய கூர்மையான புலன் உணர்ச்சிகளைப் பார்த்துக் கேலியோடு சிரித்து அவற்றை உடைந்து போகும் மட்பாண்டங்களைப் போல் முட்புதர்களிலே வீசிவிடும்.
உண்மையிலேயே இன்பத்துக்கான பேராசை தான், தன் உயிரின் வேட்கையைக் கொன்றுவிட்டுப் பிறகு, தானும் அந்த மரண ஊர்வலத்திலே கேலிச் சிரிப்போடு கலந்து கொள்ளும்.
ஆனால், நீங்கள் பரவெளியின் குழந்தைகள். அமைதியில் அமைதியற்றிருப்பவர்கள். நீங்கள் வலைக்குட்படவோ ஆட்டி வைக்கப்படவோ கூடாது.
உங்கள் இல்லம் ஒரு நங்கூரமாக இல்லாமல் பாய்மரமாக இருக்க வேண்டும்.
அது புண்ணை மறைக்கும் சல்லாத் துணியாக இல்லாமல் கண்ணைக் காக்கும் இமையாக விளங்கட்டும்.
நீங்கள் வாயில் வழியிலே நுழைவதற்காக, உங்கள் சிறகுகளை மடக்க வேண்டாம். வாயில் நிலை முட்டும் என்பதற்காகத் தலையை வணங்கத் தேவையுமில்லை. மூச்சுவிட்டால் சுவர்கள் எங்கே ஓட்டை விட்டு விடுமோ என்று அஞ்சவும் வேண்டா.
இறந்து போனவர்கள் இருப்பவர்களுக்காகக் கட்டிய கல்லறையிலே நீங்கள் வசிக்கவும் வேண்டா.
எழிலும் பொலிவும் மிகப் பெற்று இருப்பினும், உங்கள் இல்லம் உங்கள் உள்ளக் கிடக்கையை மறைத்துக் காப்பாற்றவோ உங்கள் ஏக்கங்களை
மூடி மறைக்கவோ முடியாது.
ஏன் எனில், உங்களுக்குள்ளே வரம்பற்றுக் கிடக்கும் ஒன்று, (ஆத்மா) விண்வெளியாகிய பெரிய மாளிகையிலே குடி இருக்கிறது; அம்
மாளிகையின் கதவுகளோ, மலர்ந்தும் மலராத விடியலின் தண் பனியே! அம் மாளிகையின் பலகணியோ, இரவுக் காலத்தின் அமைதியும் ஒலிக்கும் இன்னிசையுமே ஆம்.
0 கருத்துகள்