குற்றமும் தண்டனையும்

      பிறகு அந்நகர நீதிபதி ஒருவர் அவர் முன்பு வந்து,'

     'குற்றத்தைப்பற்றியும் தண்டனையைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லுங்கள் ' என்றார்.

அவர் சொல்லத் தொடங்கினார்:

     உங்கள் உயிர் காற்றிலே அலைந்து திரியும்போது தான் - நீங்கள் மட்டுமே துணையின்றி உள்ள போது தான் - நீங்கள் பிறருக்குத் தவறிழைத்து அதன் மூலம் உங்களுக்கு நீங்களே ' தவறிழைத்துக் கொள்கின்றீர்கள் .

     அத்தகைய உங்கள் தவறுகளுக்காக , நீங்கள் பரலோகத்தின் கதவைத் தட்டும் போது, ஆங்குப் பதிலளிப்போர் இல்லாமையால், சிறிது காலம் 
பரலோகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டியதே.

     உங்கள் அரிய உயிர் ஒரு கடலைப் போன்றது. எக்காலத்திலும் அது வற்றாது.  வேறு நீரைப் பெய்து அதை நிரப்ப வேண்டியும் இராது.

     காற்றைப் போல இலேசான சிறகுடையவற்றை மட்டுமே அது மேலெழுப்ப வல்லது. மற்றும் உங்கள் தூய ஆத்மா கதிரவனைப் போன்றதுமாகும்.

     அந்த ஆத்மாவோ கறையானின் வழிகளையும் அறியாது; பாம்பின் வளைகளையும் தேடாது.

     உங்கள் தூய உயிர் உங்களுள்ளே தான் மட்டும் தனித்து வசிக்கவில்லை. உங்களுள்ளே ஒரு பகுதி மனிதன் இருக்கிறான்.  ஆனால்,பெரும்பகுதி மனிதன் அல்லாத ஒன்றும் இருக்கிறது.

     மனிதத் தன்மையற்ற அதுவோ, ஓர் உருவமற்ற குறளன் மூடுபனியிலே தூக்கக் கலக்கத்தோடு நடந்து தன் விழிப்புணர்வைத் தானே தேடுவதைப் போன்றது.

     நானோ இப்போது உங்களுள் இருக்கின்ற மனிதனைப் பற்றியே சொல்லப் போகிறேன். ஏனெனில், தூய ஆத்மாவோ, மனிதன் அல்லாத  உருவமற்ற குறளனோ அன்று.  உங்களுள் உள்ள மனிதனே, குற்றங்களைப் பற்றியும்
தண்டனைகளைப் பற்றியும் அறிய முடியும்.

     பல தடவைகளில், குற்றவாளிகளைப் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.  அவர்கள் யாரோ அன்னியரைப் போலவும் உங்களுக்குள் 
ஒருவரே அவர் அல்லர் எனவும் காரணமின்றியே உங்கள் உலகில் அவர் தலையிட்டு விட்டதைப் போலவும் பேசுகின்றீர்கள்.

     ஆனால், நான் கூறுகிறேன் உங்கள் அனைவருடைய மன உயர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக உங்களிலே மிகச் சிறந்த அறநெறிச் செல்வரும் பரிசுத்தவான்களும் கூட உயரமுடியாது.

     அதைப்போலவே உங்களுள் மண்டிக் கிடக்கும் கீழ்மையைக் காட்டிலும் தாழ்வாக, எப்படிப்பட்ட கொடியவனும் கயவனும் தாழ்ந்து வீழ்ந்து விடமாட்டான்.

    மரத்தினது மோன அறிவாற்றலின்றி எந்தப் பசுமையான இலையும் பழுப்படைதலில்லை. அதைப் போலவே , உங்கள் எல்லாருடைய, 
உள்ளத்திலேயும் மறைந்துள்ள தீய சக்தியின் ஆற்றலின்றி எந்தத் தீயவனும்,
தவறிழைப்பவனும், தவறு செய்ய முடியாது.

     நீங்கள் அனைவரும் உங்கள் சுத்த ஆத்மாவை நோக்கி ஊர்வலம் செல்வதைப் போல நடந்து செல்கின்றீர்கள்.  நீங்களே வழியும் வழிப்போக்கர்களும் ஆவீர்கள்.

     உங்களுள் யாராவது ஒருவர் தடுக்கி வீழ்ந்தால் அவர் தம் பின்னால் நடந்து வருபவர்களுக்கு,இடறுங் கல்லுக்கான எச்சரிக்கையாக வீழ்ந்தவர் ஆவார்.

     தமக்கு முன்னால் சென்றவர்கள் வேகமாகவும் நடையில் தன்னம்பிக்கை மிகுந்தும் சென்றவர்களாயினும் வழியிலே உள்ள இடறி விழுங் கல்லை முன் சென்றவர்கள் அப்புறப்படுத்தாத காரணத்தினால், அவர்களுக்காகவும் இவர் இடறி விழுந்தவர் ஆவார்.

     ஒருவேளை இச் சொற்களும் உங்கள் இதயத்தின் மீது சுமை என அழுத்தமாய்.

     கொலை செய்யப்பட்டவன் தன் மரணத்திற்குத் தானே காரணமாகாமல் இருந்ததில்லை.  திருடப்பட்டவனோ தான் திருடப்பட்ட தற்கான குற்றத்திலிருந்து விடுபட்டவனல்லன்.

     சன்மார்க்கர்களும், துன்மார்க்கர்களின் செயல்களை அறியாத
களங்கமற்றவர்கள் அல்லர்.

     கறையற்ற கைகளை உடையவர்களும் குற்றவாளிகளின் குற்றங்களிலிருந்து விடுபட்டுப் தூயவர்களாகிவிட முடியாது.

     ஆம் . தீங்கு செய்தவனும் தீங்கு செய்யப்பட்டவனின் கோரப் பிடிப்பிலே பல தடவைகள் சிக்கினவனே.

     பல சமயங்களில் குற்றஞ் சாட்டப் பட்டவர்களே குற்றஞ் சாட்டப் படாத சன்மார்க்கர்களின் பழி பாவங்களைச் சுமக்கும் சுமை தாங்கிகளாக உள்ளனர்.

     நீங்கள் நீதியை அநீதியில் இருந்தும், நன்மையைத் தீமையில் இருந்தும் வேறுபடுத்தி அறிய முடியாது.

     ஏனெனில், அவர்களும் (தீயவர்களும்) உங்களுடன் கதிரவன் எதிரிலே, வெள்ளை நூலோடு கறுப்பு நூல் கலந்து நிற்கின்றனர்.

     கறுப்பு நூல் அறுந்து விடுமானால் நெசவாளி பாவை முற்றிலும் பார்வை இடுவதோடு, தறியையும் பரிசோதிக்கிறான்.

     உங்களுள் யாராவது துரோகமிழைத்த ஒரு மனைவியின் மேல் நீதி வழங்க
விண்ணப்பிப்பீர்களானால், அத்தகையவர் அவள் கணவனுடைய இதயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து அவனுடைய ஆத்மாவையும் அளந்தறியட்டும்.

     தவறிழைத்தவனுக்குக் கசையடி தரும் ஒருவன் தவறிழைக்கப் பட்டவருடைய ஆவியையும் கூர்ந்து ஆராயக் கடவன்.

     உங்களுள் யாராவது ஒருவர் சன்மார்க்கத்தின் பேரால் பிறரைத் தண்டித்து, தீய நச்சு மரத்தினை வீழ்த்தக் கோடாரியை ஓங்குவீர்களானால், அவர்கள்,
அம்மரத்தினுடைய வேர்களின் அடி ஆழம் வரையிலும், கூர்ந்து ஆராய்ந்து காணட்டும்.

     உண்மையாகவே, அவர்கள் அக்காலத்திலே தான், அமைதியான நிலத்தின் இதயத்திலே, நல்லனவற்றின் வேர்களும், தீயனவற்றின் வேர்களும், பலன் தருவனவற்றின் வேர்களும், பயனற்ற வற்றின் வேர்களும் ஒன்றோடொன்று 
பின்னிக் கிடக்கக் காண்பார்கள்.

     நீதியை அவாவுகின்ற நீதிபதிகளே, பருஉடலிலே அறம் வழுவாமல் நடந்தும் தன் நுண்ணுடலிலே தீய உள்ளம் கொண்டுள்ளவனுக்கு என்ன நீதி வழங்குவீர்கள்?

     பிறர் தம் பரு உடல்களை மாய்த்து அதனால் தான் தன் நுண்ணுடலையே மாய்த்துக் கொண்டவனுக்கு என்ன தண்டனை தருவீர்கள்?

     ஏமாற்றுவதையும் துன்புறுத்துவதையும் தன் தொழிலாகக் கொண்டவனான ஒருவன், அதே நேரத்தில் தானும் ஏமாற்றப்பட்டுக் கொடுமைக்குள்ளாகிறான் எனில் அவனை எவ்வண்ணம் தண்டிப்பீர்கள்?

     நீங்கள் மகிழ்வோடு கடமையாற்றுகின்ற சட்டங்களால் நிருவகிக்கும் நீதி நியாயம் என்பது, மனந்திரும்புதலேயன்றோ?

     ஆயினும் உங்களால் களங்கமற்றவர்கள் மீது மனந்திரும்புதலைச் சுமத்தவோ, குற்றவாளிகளின் இதயத்தில் இருந்து அந்த மனந்திரும்புதலை விலக்கிவிடவோ இயலாது.

     உறக்கத்திலிருந்து மாந்தர்கள் விழித்துத் தங்களைத் தாங்களே உய்த்துணர்ந்து ஆராயும்படி இரவிலே அது (மனந்திரும்புதல்) அழைக்காமலேயே வரும்.

     ஆனால், நீதியை நன்கு அறிந்தவர்களான நீங்கள் எல்லாச் செயல்களையும் பகலின் முழு ஒளியிலே காணவில்லையானால் எப்படி அதை இரவிலே அறிவீர்கள்?




     அக்காலத்திலே தான் நீங்கள், நிமிர்ந்து நிற்பவர்களும் சரி, தடுக்கி வீழ்ந்தவர்களும் சரி, - குன்றிய மனிதத் தன்மையின் இரவும், தூய ஆத்மாவின் பகலும் கலந்துள்ள மங்கிய மாலைக் காலத்திலே நிற்கும் ஒரே வகை மனிதன் தான் என்பதை உணர்வீர்கள்.


     மற்றும் கோயிலின் தலைக்கல் அதனுடைய அடிப்படைக் கல்லைக் காட்டிலும் உயர்ந்தன்று என்பதையும் அறிவீர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்