பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப் பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும் எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார்.
உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத் தருகிறாள். நீங்கள் உங்கள் கைகளை எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென அறிந்தால் போதும். நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள்.
மண் தந்த வளத்தைப் பரிமாறிக் கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக் கண்டு திருப்தி உறுவீர்கள்.
ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும் கருணை வாய்ந்த நீதியின் மூலமும் நடைபெற வில்லை எனின், அது சிலரைப்
பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கி விடும்.
அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும், திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும் உழைப்பாளிகளாகிய நீங்கள், நெசவாளர்களையும், குயவர்களையும், வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும் காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள் மத்தியிலே வந்து உங்கள் துலாக் கோலைத் தூயதாக்கிப் பின் மதிப்புக்கு மதிப்பு எவ்வண்ணம் சீர் தூக்குவதென விளக்குமாறு உலகமகா சக்தியை வேண்டிக் கொள்ளுங்கள்.
வெறுங்கையோடு வந்த தங்கள் வெற்று வார்த்தைகளையே 'உங்கள் உழைப்புக்கு ஈடாகப் நேரம் பேசுபவர்களை உங்கள்
வியாபாரத்தில் பங்கு கொள்ளும்படி வற்புறுத்தாதீர்கள்.
அப்படிப் பட்டவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்:
எங்களுடன் வயல்வெளிக்கு வாருங்கள். அல்லது எங்கள் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்று உங்கள் வலைகளை வீசுங்கள்.
ஏனெனில் நிலமும் கடலும் எப்படி எங்களுக்குத் தாராளமாகத் தருகின்றனவோ அப்படியே உங்களுக்கும் தரும்.
மற்றும் பாடகர்களும், நாட்டியக் கலைஞர்களும், குழலிசை வாணர்களும் அங்கு வந்தால் அவர்களுடைய கலைப்பரிசையும்
வாங்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அவர்களும் உங்களைப் போலவே பழங்களையும் வற்றல்களையும் சேகரிப்பவர்களே. அவர்கள் கொண்டு வந்துள்ளவை, கனவுத் தன்மையே பொருந்தியனவாயினும் உங்கள் ஆத்மாவுக்கு அவை உணவும் உடையுமாக அமையும்.
நீங்கள் அங்காடி வீதியை விட்டு நீங்குமுன்னர் ஒருவரும் தாங்கள் வந்த வழியே வெறுங் கையோடு திரும்பிப் போகா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், உங்களிடையே உள்ள மிகக் கடைப்பட்ட கடைசி மனிதனுடைய தேவையும் நிறைவேற்றப் பட்டு விட்டதென அறிந்தபின் அல்லாமல் உலக மகாசக்தி மன நிம்மதியோடு காற்றின் மீது கண்ணுறங்காள்.
0 கருத்துகள்