உண்ணும் சோறும் பருகும் நீரும்

     ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப் பற்றியும் பருகுவதைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:

     நிலத்தின் புழுதியிலே  வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று  நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ?




     நீங்கள் உண்ணுவதற்காகப் பிற உயிர்களைக் கொல்கின்கிறீர்கள்.  உங்கள் நீர்வேட்கையைத் தணித்தற்கெனவும் பருகுவதற்கெனவும்,
பசுவின் பாலைப் பச்சைப் பசுங்கன்றுக்கும் கொடாமல் பறிக்கின்றீர்கள். அவற்றிடையேயும் வாழ்க்கையின் வழிபாடு பின்னிக் கலந்து விளங்கட்டும்.

     உங்கள் இருக்கை ஒரு பலிபீடமாக அமையட்டும்.அங்குப் பலியிடப்படும் வயல்வெளிகளின் தூய விளைவுகளும், முல்லை நிலத்தின் கள்ளங் கபடமற்ற கால்நடைகளும், மாந்தர்களின் 
உள்ளத்திலே உறையும் மிகத் தூயதும் கபடமற்றதுமான ஆத்மாவுக்குப் பலியிடப்படுவதாகட்டும்.

     நீங்கள் ஓர் உயிரை அழிக்கும் போது உங்கள் உள்ளத்திலே  இவ்வண்ணம் நினைவு கூருங்கள்:

     எந்தச் சக்தி உங்களைக் கொள்கிறதோ அதே சக்தியால் நாங்களும் அழிக்கப்படுவோம்.  நாங்களும் உங்களைப் போலவே  சீரணிக்கப்படுவோம்.  ஏனெனில், எந்த நியதி உங்களை எங்கள் கரங்களில் சிக்க வைத்ததோ,அதே நியதியால் நாங்களும் எங்களிலும் வலிய கரங்களால் சிக்கித் தவிக்கத் தள்ளப்படுவோம்.
உங்களது குருதியும் எங்களது குருதியும் வானுலகத்துத் தாவரத்துக்குப் பெய்யும் நீரேயன்றிப் பிறிதில்லை.

     மற்றும் நீங்கள் ஓர் ஆப்பிள் பழத்தை உங்கள் பற்களால் கடித்து மெல்லும்போது உங்கள் உள்ளத்திலே இவ்வண்ணமாகச் சிந்தியுங்கள்:

     உனது விதை என் உடலிலே வசிக்கட்டும்.  உன்னுடைய நாளைய அரும்புகள் என் இதயத்தில் மலர்ச்சியடையட்டும்.  உன்னுடைய நறுமணமே என் உயிர்ப்பாக இருக்கட்டும்.  இவ்வண்ணமாக நாம் இருவரும் எல்லாப் பருவங்களிலும் மகிழ்ந்து நினைவு கூர்வோம்.

     கார் காலத்திலே கொடிமுந்திரிச் சாற்றைப் பிழிந்தெடுக்கப் பழங்களைத் திரட்டும் காலத்திலே உங்கள் உள்ளத்திலே இங்கனம் 
நினைவு கொள்ளுங்கள்:

     நானும் ஒரு கொடிமுந்திரித் தோட்டமே,  என் பழங்களும் கொடிமுந்திரி ஆலைக்காகத் திரட்டப்படும், புத்தம் புதிய கொடிமுந்திரிச் சாற்றைப் போலவே நானும் பரலோகப்  பாண்டங்களிலே சேமித்து வைக்கப்படுவேன்.

     மற்றும் நீங்கள் மழைக் காலத்திலே அச் சாற்றைப் பயன்படுத்த எடுக்கும்போது,  அதனுடைய ஒவ்வொரு குவளைக்கும் உங்கள் 
உள்ளம் இன்னிசை இசைக்கட்டும்.

     கார்காலம், கொடிமுந்திரித் தோட்டம், கொடிமுந்திரி ஆலை இவற்றின் இனிய நினைவுகளால் நிறைந்ததாக உங்கள் இன்னிசை அமையட்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்