திருமணம்

 திருமணம் 

     நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள்.  இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள்.

     உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன் வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும் இணைந்தே இருப்பீர்கள்.

     ஆம், இறைவனுக்கான அமைதி மிக்க தியான நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள்.ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே 
சிறிது இடைவெளி இருக்கட்டும்.  அந்த இடைவெளியிலே வானுலகத்தில் காற்று நடனம் புரியட்டும்.

     ஒருவரை ஒருவர் காதலியுங்கள்.  ஆனால், அக் காதலினால் பிணிப்பான தளையை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.

     அக் காதல் உங்கள் உயிராற்றங் கரைகளிலே அலை மோதும் கடலாக விளங்கட்டும்.

     நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய குவளையை நிரப்புங்கள்.  ஆனால், ஒரே குவளையிலுள்ள பானத்தை இருவரும் 
பருகாதீர்கள்.

    அதைப்போலவே, தனக்குரியதான உணவையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள்.ஆனால், ஒரே அப்பத் துண்டினை இருவரும் 
உண்ணாதீர்கள்.

     இருவரும் இணைந்து பாடி ஆடிக் களித்திருங்கள்.  ஆயினும் இருவரும் தனிப்பட்டே இருங்கள்.

     ஒரே பாடலின் இனிய இசையை யாழின் நரம்புகள் ஒன்று சேர்ந்து நல்க வல்லதாயினும்,அந் நரம்புகள் தனித்தனியே உள்ளதைப் 
போலவே, தனித்து இணைந்து நில்லுங்கள்.

     உங்கள் இதயத்தைக் கொடுங்கள்.  ஆனால், கொடுத்ததை அப்படியே பற்றிக் கொள்ளாதீர்கள்.



     ஏனெனில்,  வாழ்க்கையின் கரங்களே உங்கள் இதயத்தைப் பற்றிக் கொள்ளவல்லன.

     நீங்கள் இணைந்தே நில்லுங்கள்.  ஆனால்,நெருங்கியன்று.  ஏனெனில், கோயிலின் தூண்கள் கூட விலகி நின்றே தான் கோயிலைத் தாங்குகின்றன.

     மற்றும் மரங்கள் கூடத் தனித்து நின்று தான் வளர்ச்சியடையுமே அன்றி, ஒன்றன் நிழலிலே மற்றொன்று வளர முடியாது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்