அன்பு

 அன்பு 

     அன்பினது வழி கரடுமுரடாகவும் பள்ளத்தாக்குகள் நிறைந்ததாகவும் இருப்பினும்,அன்பு உங்களை அழைக்கும் போது  அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த அன்பு தன்னுடைய சிறகுகளால் மூடி உங்களைப் பாதுகாக்கும் போது , அதனிடையே நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.ஒருவேளை அதன் சிறகுகளின் இடையிலேமறைந்துள்ள குத்துவாள்  உங்களை ஊறு செய்தாலும் அதனால் பாதகமில்லை.


     அன்பு உங்களுடன் உரையாடும்போது அதன் குரலொலி உங்கள் கனவுகள் அனைத்தையும் வாடைக்காற்று பூங்காவை அழித்து விடுவதைப் போலச் சிதறச் செய்வது போல் இருப்பினும் நீங்கள் அதன் வார்த்தையை நம்புங்கள். ஏனெனில், அன்பு எப்படி உங்களுக்கு முடி சூட்டுகிறதோ அப்படியே உங்களை அழிக்கிறது.  அது எவ்வண்ணம் உங்களை வளர்க்கிறதோ  அவ்வண்ணமே உங்களைத் தேய்க்கிறது.


     உங்களின் உச்சிக்கு அது உயர்ந்து சூரியன் முன் அசைந்தாடும் பசிய இளந்தளிர்களை எல்லாம் எங்கனம் அது தடவிக் கொடுத்துத் தழுவி நிற்கிறதோ, அங்ஙனமே அது நிலத்தில் ஊன்றியுள்ள உங்கள் ஆணிவேர் வரையிலும் கீழிறங்கி அசைத்து ஆட்டவும் வல்லது.

     தானியக் கதிர்களைக் கட்டுக்கட்டிப் பிணிப்பதைப்போல அன்பு உங்களை ஒன்று சேர்க்கிறது.  தானியப் போர்க்களத்திலே போர் அடித்தலைப் போன்று அது உங்களை மோதி அடிக்கின்றது.

     பதர்களிலிருந்து, உங்களை வேறுபடுத்திப் பிரித்தெடுக்க அது உங்களைக் கொழித்தெடுக்கிறது.உங்களை வெளுக்கும்படி செய்ய , அஃது உங்களை மாவாக அரைத்துவிடுகிறது.

     அன்பு, நீங்கள் இளகத் தக்கவாறு அது உங்களைப் பிசைந்து வைக்கிறது.  பின்னர் அவ்வன்பு உங்களைத்  தன்னுடைய   தூய்மையான நெருப்பிலே இட்டு இறைவனின் தூய்மையான விருந்துக்கு ஏற்றதோர் உணவாகச் சமைத்து வைக்கிறது.

     அன்பு தான் உங்களை இப்பாடுபடுத்துகிறது. ஏனெனில், இவற்றாலேயே நீங்கள் உங்கள் இதயத்தின் இரகசியங்களை அறிந்துணர்ந்து அவ்வறிவின் மூலமாக வாழ்வினது இதயத்தின் 
ஓர் அணுவாக மாற முடியும்.

     ஆனால், உங்களது அச்சத்தினால் அன்பினது அமைதியையும் அன்பால் வரும் இன்பத்தையுமே நீங்கள் தேடுவீர்களானால்,
அக்காலத்திலே நீங்கள் உங்கள் உண்மை உருவத்தைப் போர்வையிட்டு மூடி, அன்பினது கடின பாதையை விட்டு விலகிச் செல்வதே நலம்.  அங்கே அந்தப் பருவ மாறுதலற்ற உலகத்திலே 
நீங்கள் சிரிக்கலாம்.  முழுச் சிரிப்பாக அன்று.அழலாம், மனங் கசிந்து, அனைத்துக் கண்ணீரையும் சிந்தி அன்று.

     அன்பு தன்னைத் தவிர, வேறொன்றையும்  தருவதில்லை. அதைப் போலவே அது தன்னைத் தவிர்த்து வேறொன்றையும்  உங்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுவதுமில்லை. அன்பு எதையும் வைத்துக் கொள்வதுமில்லை.  ஏனெனில், அன்புக்கு அன்பு மட்டுமே போதுமானது.

     நீங்கள் அன்பு கொண்டால் 'கடவுள் எம் உள்ளத்திலே இருக்கிறார் ' என்று கூறாதீர்கள்.மாறாக, 'இறைவன் உள்ளத்திலே நாங்கள் 
உள்ளோம் ' என்று கூறுங்கள்.

அன்பின் பாதையை வகுக்க நீங்கள் முயல வேண்டாம். உங்களை ஒரு பொருட்டாக அவ்வன்பு கருதுமானால் அதுவே உங்கள் பாதையை வகுக்க வழிகாட்டும்.




     அன்புக்குத் தன்னை முழுமை உடையதாக்கிக் கொள்வதைத் தவிர வேறு பிற ஆசை கிடையாது.  ஆனால், நீங்கள் அன்பு கொண்ட 
பின்னரும் ஆசை உங்களிடம் முகிழ்க்குமானால் இவையே உங்கள் ஆசையாக இருக்கட்டும்.

     இரவின் தனிமைக்குப் பண்பாட உருகி ஓடும் அருவியைப் போல உள்ளம் அமையும் படியும்,

     அளவுக்கு மீறிய கருணையினால் எழும் நெஞ்சத்தின் துன்பத்தை அறியவும்,

     அன்பை நீங்கள் நன்காராய்ந்து அறிவதால், நீங்கள் புண் எய்தவும்,

     முழுமனத்தோடும் மகிழ்வோடும் நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவும்,

     பறந்து செல்லும் இறக்கைகளையுடைய இதயத்தோடு, ஒவ்வொரு நாள் விடியலிலும் எழுந்து,

     நாம் அன்பு செலுத்துவதற்காக மற்றொரு நாளை அளித்தமைக்கு இறைவனுக்கு வணக்கஞ் செலுத்தவும்,

     நடுப்பகல் நேரத்திலே ஓய்வெடுத்து, அன்பின் பரவசத்தை ஆழ்ந்து சிந்திக்கவும்,

     நன்றியுணர்வுடன் மாலைக்  காலத்திலே இல்லம் திரும்பவும்,

     பின்னர் உங்களது உள்ளங்களிலே உள்ள அன்பின் வடிவங்களுக்கு வாழ்த்துக் கூறி, புகழ் பாடவுமான 

இவையே உங்கள் ஆசைகளாக விளங்கட்டும் என்றார் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்