பின்னர் ஒரு நங்கை, 'எங்களுக்குத் துன்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள் ' என்று கேட்க , அவர் சொல்லத் தொடங்கினார் .
உங்கள் துயரம் என்பது உங்களது பகுத்தறிவை மூடி மறைத்துள்ள புற ஓட்டினை உடைத்தலே ஆகும். பழத்தின் உட்சுளையாகிய இதயம்,சூரிய ஒளிச் சந்நிதியிலே நிற்பதற்கென, அப் பழத்தின் ஓட்டை உடைக்கும் கல்லைப் போலவே , துயரத்தை நீங்கள் அறிதல் வேண்டும்.
உங்கள் வாழ்க்கையிலே ஏற்படும் அன்றாட அதிசயங்கள் உங்கள் இதயத்தை வியப்பிலே நிலைக்கச் செய்ய முடியுமானால், உங்கள் துன்பம் உங்கள் இன்பத்தைவிடக் குறைந்த அளவு அதிசயமானதாக இராது.
உங்கள் வயல்கள் மீது கடந்து செல்லும் பருவ காலங்களைப் போலவே, உங்கள் இதயத்தின் பருவக்காலங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.
பின்னரே நீங்கள் உங்கள் துயரமாம் குளிர்காலத்தையும் அமைதியோடு கண்காணிப்பீர்கள் . உங்கள் துயரத்தின் பெரும்பகுதி நீங்களாகத் தேர்ந்தெடுத்ததே.
உங்கள் துயரமோ உங்களுள்ளே உள்ள மருத்துவன், பிணி வாய்ப்பட்ட உங்கள் ஆத்மா குணமடைவதற்குத் தரும் ஒரு கசப்பான மருந்தாகும்.
எனவே, அந்த மருத்துவமனை நம்பி அவன் தரும் மருந்தை மௌனத்தோடும் அமைதியோடும் நீங்கள் அருந்த வேண்டியதே.
ஏனெனில், அம் மருத்துவன் கொணர்ந்து தரும் மருந்து நிறைந்த அம் மருந்துக்கிண்ணம் உங்கள் உதடுகளைத் தீய்க்குமாயினும், அக் கிண்ணம், அப் பரம்பொருளின் தூய கண்ணீரால் நனைக்கப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்டதே ஆகும்.
0 கருத்துகள்