தோற்றுவாய்

      அன்பால் மக்கள் உள்ளங்களிலே குடி கொண்டவரும், அவர்களால்
மதிக்கப்பட்டு அவர் காலத்தின் விடி வெள்ளியாகக் கருதப்பட்டவருமான ஆல் முஸ்தபா என்பவர், ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டுக்  காலம் ஆர்பலீஸ் என்னும் நகரத்திலே தங்கித் தம் தாய்நாட்டுக்குத்
 திரும்பத் தகுந்த கப்பலுக்காக எதிர்நோக்கி இருந்தார்.

     பன்னிரண்டாவது ஆண்டிலே அறுவடைத் திங்களிலே, ஏழாம் நாளன்று, நகரின் புற மதில்களைக் கடந்து அவர் ஒரு குன்றின் மீதேறிக் காண, ஒரு கப்பல் மூடுபனியூடே வருவதைக் கண்டார்.

     அவருடைய இதயக் கதவுகள் விரிந்து, மகிழ்ச்சிப் பெருக்குக்
 கடல் கடந்து ஓடியது.  தம் கண்களை மூடி அவர், தம் இதயத்தின் அமைதியிலே தியானம் செய்தார்.

     ஆனால், குன்றிலிருந்து அவர் கீழ் இறங்கிய போழ்து, அவர்.  மனத்துள் கவலை புகவேே,  நினைக்கலுற்றார்நான்
எவ்வண்ணம் அமைதியோடும் வேதனை இன்றியும்  இங்கிருந்து  போவேன்? இல்லை இல்லை, மனப்புண் சிறிதுமின்றி  நான் 
இந்நகரத்தை விட்டுப் போகவே முடியாது.

     இந்நகரத்தின் மதில்களிடையே  நான் வேதனையோடு கழித்த
 மிக நீண்ட நாள்கள் பலப்பல . தனிமையிலே கழிக்கப்பட்ட  மிக நீண்ட இரவுகளோ மிகப் பல.  தன்னுடைய வேதனையினின்றும் 
தனிமையினின்றும் எவனால் தான் வருத்தமின்றி விடுதலையுற முடியும்?

     இந்த நகரத்தின் விதிகளிலே நான் சிந்திய ஆத்ம சிந்தனைத்
 துகள்கள் மிகப் பல. என் ஏக்கத்தினின்றும் உருவாகித்  தம் பிறந்த மேனியோடு இக்குன்றுகளிடையே உலவும் குழவிகளும் மிகப் பலவே .
அவற்றிடையே இருந்து மனச்சுமையும் இதயவேதனையும் இன்றி நான் விலகிப் போதல் கடினமே.

     இவற்றை விட்டு நான். நீக்குவது, உடலை மூடியுள்ள சட்டையைக் கழற்றி வீசுவது போல் அன்று. மாறாக உடலைப் போர்த்துள்ள  
புறத்தோலை என் கைகளாலேயே கிழித்து உதறுவது போல் அன்றோ? 

     நான் இங்கு புறம் விட்டுப் போவது  வெறும்  நினைவலைகளை மட்டுமே அல்ல .  பசியும் தாகமும்
கொண்ட இனிமை நிறைந்த ஓர் இதையத்தை அன்றோ நான்
இங்கு விட்டுச் செல்ல வேண்டியுள்ளது.




     ஆயினும் இனியும் நான் ஈண்டுத் தங்கலாகாது.

     எல்லாப் பொருள்களையும் தன்னிடம் வரும்படி அழைக்கும் கடல் என்னையும் அழைக்கிறது. எனவே, நான்.கப்பலில் புறப்பட்டாக வேண்டும்.

இரவுக் காலத்தில் எரிக்கப்படுகிற நாழிகையூடே, நான் இங்குத் தங்கினால் நான் உருகி உருகித் துகளாகி வார்ப்படத்தில்  வார்த்தெடுக்கப்பட்டு  விடலாம்.இங்குள்ள யாவற்றையும் நான் என்னுடன் எடுத்துச் செல்வதே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்.  ஆனால், அது எப்படி இயலும்?

     தனக்குச் சிறகுகளைத் தந்த நாவையும் உதடுகளையும் 'பேச்சு' தன்னோடு எடுத்துச் செல்ல இயலுகிறதா? தனியாகத்தானே அது
வானில் பறந்து செல்கிறது.

     தனியாகவே , தம்முடைய குடம்பை தனித்தொழியவே, 
கழுகுகள் வெய்யவன் கீழ் பறக்கின்றன.

     இவ்வண்ணம்சிந்தித்தப்படி, அவர்   அந்தக் குன்றின் அடிவாரத்தை அடைந்த பின்னர்த் திரும்பிக் கடலை நோக்க, அங்கே, தம்மை
 ஏற்றிச் செல்ல வந்த கலம், துறைமுகத்தை அடைவதையும் கப்பல் மேல்தளத்திலே மீகாமனும் தம்முடைய நாட்டு மக்களும் 
காணப்படுவதையும் கண்டார்.

     அவருடைய இதயம் அவர்களை நோக்கிக் கூவ,  அவர் சொல்லத் தொடங்கினார்:

     என் முன்னைப் பழம் அன்னையின் மக்களே, அலைகடலை ஆள்பவர்களே!

     எத்தனை முறை நீங்கள் எனது கனவுலகத்திலே கலஞ் செலுத்தி வந்தீர்கள். இன்று நீங்கள் உண்மையாகவே என் ஆழ்ந்த கனவாகிய விழிப்பிலே கலஞ் செலுத்தி வந்துள்ளீர்கள்.

     இதோ நான் புறப்பட்டு விட்டேன். கலத்தூடே பயணம் செய்யும் என் முழு அவாவும் காற்றை அவாவி நிற்கிறது.

     இங்கு வீசும் இந்த அமைதியான காற்றை இன்னும் ஒரே முறை நான் உயிர்க்கட்டும். ஒரே ஒரு தடவை அன்புப் பார்வையோடு என் கண்கள் உப்பக்கம் நோக்கட்டும். பிறகு நான் உங்களுள் ஒருவனாக, கலத்திலே செல்லும் மாந்தருள் ஒருவனாக  ஒன்றிவிடுவேன்.

     ஓ! ஆழ்ந்த கடலே, துயிலும் தாயே!

     ஆற்றுக்கும் ஓடைக்கும் அமைதியையும் விடுதலையையும்
 தருவது உன்னைத் தவிர வேறு யார்?

     இந்த ஓடையாகிய எனக்கும் இன்னும் ஒரே ஒரு சுழற்சி
 தான். இவ்வோடை இத்தோப்பில் ஓடுவது இன்னும் ஒரே ஒரு
 சலசலப்போடுதான்.

     பின்னர் யான் கரையற்ற கடலிலே கரையற்ற நீர்த்துளியாகி உன்னிடம் வந்து கலந்து விடுவேன்.

     இவ்வண்ணங் கூறியபடி அவர் நடந்து கொண்டிருக்கும் போது, சேய்மையிலுள்ள மாதர்களும் மாந்தர்களும், தங்கள் தங்கள் வயலை 
விட்டும் கொடிமுந்திரித் தோட்டத்தை விட்டும் நகர வாயிற்புறத்தை நோக்கி விரைந்து வருவதைக் கண்டார். 

     மற்றும் அவர் தம்முடைய பெயரைச் சொல்லி அவர்கள் 
தம்மைப் பற்றி பேசிக் கொள்வதையும் , தங்களுடன் ஒருவருக்கொருவர் , தம்மை ஏற்றிச் செல்லும் கப்பல் 
வந்துள்ளதைப் பற்றி உரையாடுவதையும் கேட்டார்.

     தமக்குள்ளே அவர் பேசிக் கொண்டார்.

     பிரிகின்ற நாளே ஒரு வேளை சேகரிக்கின்ற நாளாக இருத்தல் கூடுமோ? ஒருகால் என் இறுதி நாளே , என் விடியலாக இருக்கும் எனக் 
கூறத் தகுமோ? 

     கலப்பையைக் கனியின் சாலடியில் விட்டு வந்திருக்கும்  உழவனுக்கும், கொடிமுந்திரிச் சாற்றைப் பிழியும் ஆலைச் சக்கரத்தை இடையிலே விட்டு வந்திருக்கும் தொழிலாளிக்கும் நான் எதைக் கொடுப்பேன்?

     பயன் மரம், உள்ளூர் பழுத்துக் குலுங்கிய தொப்ப , என் இதயமாற அப்பழங்களை எல்லாம் திரட்டி இவர்களுக்குத் தரவல்லவனோ யான்? 

     தொடுமணற் கேணியில் சுரந்து நீர் பாய்வதை ஒப்ப, என் ஆர்வம் சுரத்தலைச் செய்ய, இவர்களது குவளைகளை எல்லாம் நான்
 வழியச் செய்வேனோ? 

     இசை வல்லுநனின் விரல்களால் தீண்டப்பெறும் யாழாகவும் அவன் மூச்சுப் புகுந்து இசை எழுப்பும் குழலாகவும் இருப்பவனோ யான்? 

     அமைதியைத் தேடுபவனன்றோ நான்அமைதியிலே நான் என்ன 
புதையலைக் கண்டெடுத்தேன்? இவர்கட்கு அதை நான் நம்பிக்கையோடு பங்கிட்டுத்தர.

     இது என்னுடைய அறுவடை நாளாக இருந்தால் , எந்த நிலத்திலே , மறத்தற்கியலாத எந்தப் பருவத்திலே நான் விதைகளைத் தூவினேன்? 

     என் கைகளின் மூலமாகத்தான் ஒளிவீசி விளக்கஞ் செய்ய வேண்டுமானால், விளங்க வைக்கும் நேரமும் இந்த நேரமானால் , 

     அவ்விளக்கு நல்கும் ஒளிச்சுடர் என்னுடைய சுடராக இராது.

     இருளிடையே, வெறுமையாய் விளக்கினை நான் ஏந்தி நிற்பேன்.

     இரவின் பாதுகாவலன். விளக்கிற்குத் தேவைப்படும்நெய்யைப் பெய்து, சுடர் கொளுவி அதை விளக்கஞ் செய்வான். 

     இவற்றையே அவர் வார்த்தைகளாகக்  கூறினார். ஆனால், அவர் இதயத்துள்ளே பலப்பல செய்திகள் கூறப்படாமல் மண்டிக் கிடந்தன.  ஏனெனில், அவராலேயே அவர் உள்ளத்துள்ள அரிய மறைகளைக் கூற 
இயலவில்லை.  

     அவர் அந்நகர வாயிலுள் புகுந்த போது, அவ்வூர் மக்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு, அவரைக் காண எதிர்கொண்டதோடு ஒரே குரல் ஒலித்தாலென மகிழ்ச்சியால் கூவினர். நகரத்தின் முதியவர்களோ அவர் முன் வந்து நின்று அவரை நோக்கிக் கூறலுற்றனர். எங்களை விட்டு நீர் பிரிந்து போக வேண்டா.

     மங்கிய காலை நேரத்திலே நீர் எங்களிடையே  இளஞாயிற்றைப்  போல் ஒளி நல்கினீர். உம்முடைய இளமையோ எமக்குள்ளே ,
கனவினைக் காணக் கனவைத் தந்தது.

     எங்களிடையே நீர் அன்னியரோ , விருந்தினரோ அல்லர். எம் புதல்வரும் கெழுதகை மிக்க அன்பருமே ஆவீர்.

    உமது முகத்தைத்  திரும்பவும் எப்போது காண்போம் என்னும் (உளப்) பசிக் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதீர்.

    பின்னர் அந்நகரத்துப் பாதிரிகள் அவரிடம் கூறலுற்றனர்:

     கடலலைகள் நமக்கிடையே பிரிவை உண்டாக்க , நீர் எங்களிடையே கழித்த ஆண்டுகளை வெறும் நினைவுச் சின்னமாக ஆக்கிவிட வேண்டா.

     எங்களிடையே நீர் ஒரு தேவனைப் போல் உலாவினீர். உமது நிழலே எங்கள் முகங்களிலே ஒளியாக நிலவிற்று.

     நாங்கள் உம்மை மிகமிக அதிகமாக நேசித்தோம்.  ஆனால், எங்கள் அன்பு திரையால் மூடப்பட்டிருந்ததால், எங்கள் பேச்சு அந்த அன்போடு கலந்து ஒன்றியதாக இல்லை.

     இப்போதோ அது (அவ்வன்பு) உமது முன்னால் கதறி நின்று தன்னை வெளிக்காட்டிவிட்டது.

     எக்காலத்திலுமே காதல் தன்னுடைய ஆழத்தை உணர்வதில்லை.  பிரிவுக் காலத்திலேதான் அது தன் ஆழத்தை உணர்கிறது என்றனர்.

     மற்றும் சிலர் அங்கு வந்து அவருக்குத் தம் வணக்கத்தைத் தெரிவித்தனர்.

     அவரோ யாரிடமும் பேசாமல் தம் தலையைத் தாழ்த்தியபடி இருந்தார்.  சூழ்ந்து இருந்தவர்களோ அவருடைய கண்களில் கண்ணீர் துளித்து வழிந்து மார்பின் மீது வீழ்வதைக் கண்டனர்.  பிறகு அவரும் பிற மக்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கோயிலின் முன்புறத்திலே திரளாக வந்து குழுமினர்.

     அந்தக் கோயிலின் உட்புறத்தில் இருந்து ஆல் மித்ரா என்னும் பெயருள்ள ஒரு நங்கை அவர் முன் வந்து நின்றாள்.  அவளோ ஒரு தீர்க்கதரிசினி.

     ஆல் முஸ்தபா அந்நங்கையைக் கனிவோடு நோக்கினார். ஏனெனில், அந்த நகரத்திற்குள் அவர் அடி வைத்த அந்த முதல் நாளிலே, அவள் ஒருத்திதான் அவரைக் கண்டு, நம்பிக்கையுடன் ஆதரித்தவள்.

     அவள் அவரை நோக்கி வணங்கிப் பின் சொல்லத் தொடங்கினாள்:

   கடவுளின் தீர்க்கதரிசியே, தாங்கள் பரிபூரணத்தைத் தேடுவதுடன் தாங்கள் ஏறிச் செல்ல வேண்டிய கப்பலுக்காகவும் பல நீண்ட தூரம் தேடினீர்கள்.

     இப்போது தங்களுக்காகக் கப்பல் இங்கு வந்துள்ளது.

தாங்கள் போகத் தான் வேண்டும்.

     தங்களுடைய நினைவுகளிலே உள்ள அந்த நகரத்தைக் காணவும் தங்களது பேரார்வம் பதிந்துள்ள இல்லத்துக்கு ஏகவும் தங்களது உள்ளத்திலே தேங்கியுள்ள அவா மிக மிக ஆழமானது. எனவே, தங்களை அங்குச் செல்லவொட்டாமல் எங்கள் அன்பு தங்களுக்குத் தளை பூட்டாது.  எங்களது தேவைகளோ தங்களைக் குறுக்கீடு செய்யா.

     ஆயினும் தாங்கள் எங்களை விட்டு பிரிந்து செல்லும் முன்னர், நாங்கள் தங்களைக் கேட்பதொன்று உண்டு.  தங்களது உள்ளத்திலே உதித்த உண்மையான தத்துவங்களை எங்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்பதே அது.  அவற்றை , அத் தத்துவங்களைத். தாங்கள் எங்களிடம் தாருங்கள்.  நாங்கள் அவற்றை எங்கள் குழந்தைகளுக்கு நல்குவோம். அவர்களோ அவற்றைத் தங்கள் சந்ததிகளுக்குத் தருவார்கள்.  இங்ஙனம் வழிவழியாக அத் தத்துவங்கள் அழியாமல் நிலவி நிற்கும். தாங்கள் தனித்து நின்று எங்களது நாள்களை நுனித்து நோக்கினீர்கள்.  நாங்கள் தூக்கத்திலே அழுததையும் சிரித்ததையும் தாங்கள் விழிப்புணர்வோடு கேட்டுணர்ந்தீர்கள்.

    எனவே, இப்போது எங்களையே எங்களுக்கு வெளிப்படுத்துங்கள்.  பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதாகிய, தங்களுக்குப் புலப்பட்ட அரிய உண்மைகளை எங்களுக்குக் கூறுங்கள் என்றாள்.

அவர் அவர்களை நோக்கி, 

ஆர்பலீஸ் நகர மக்களே, இப்போது உங்களுடைய இதயத்திலே உலாவுகின்ற ஒன்றைப் பற்றி அல்லாமல் வேறு எதைப் பற்றி நான் உங்களிடம் பேச முடியும்? என்று சொல்ல, 

ஆல்மித்ரா அவரை நோக்கி, 

'தாங்கள் எங்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்லுங்கள் என்று வேண்டினாள்.

அவர் உடனே தம் தலையை உயர்த்தி, அங்குள்ள மக்களை நோக்கினார்.  அவர்களிடையே அமைதி நிலவி இருந்தது.  பின்னர்க் கணீரென்ற குரலிலே அவர், அவர்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்