அதன் பின் ஒருவர், 'எங்களுக்குத் தன்னையறிதலைப் பற்றிச் சொல்லுங்கள்' என்றார் . அவர் சொல்லத் தொடங்கினார்:
உங்கள் இதயம் தன் அமைதியினால், பகல் இரவு ஆகியவற்றின் மறைபொருளை அறியவல்லது. ஆனால் உங்கள் காதுகளோ, அறிவின் இதய ஓலத்தைக் கேட்கத் தாகங் கொண்டனவாக இருக்கின்றன.
நீங்கள் எவற்றை உங்கள் நினைவாற்றலால் அறிந்துள்ளீர்களோ, அவற்றைச் சொற்களால் நீங்கள் அறியமுடியும்.
உங்கள் கனவின் (ஆடை) போர்வையற்ற உடல்களை உங்கள் விரல்களால் நீங்கள் தொடமுடியும்.
உங்களால் இப்படி இயல்வது நல்லதே!
உங்கள் ஆத்மாவினுள் மறைந்துள்ள நீர் ஊற்று, மேலே பொங்கி வழிந்து, கடலை நோக்கி இன்னிசையோடு ஓட வேண்டும்.
அப்போதே உங்களுடைய, எல்லையற்ற ஆழ்ந்த கருத்தின் பெருநிதியம் உங்கள் கண்களுக்கு விளக்கமுறும்.
அனால், உங்களுக்குப் புலப்படாத அப் பெருநிதியத்தைச் சீர்தூக்க எந்த துலாக்கோலையும் நீங்கள் தேட வேண்டா.
உங்கள் அறிவாற்றலின் ஆழத்தை அளந்தறியத்தக்க கைத்தடியையோ, ஆழம் பார்க்கும் கருவியையோ நீங்கள் தேட வேண்டா.
ஏனெனில், ஆத்மா அளக்க முடியாத வரம்பற்ற ஓர் ஆழமான கடல்.
உண்மையைக் கண்டுபிடித்து விட்டேன் என்று நீங்கள் கூறாதீர்கள். ஓர் உண்மையை மட்டும் கண்டேன் என்று சொல்லுங்கள்.
ஆத்மா செல்லத்தக்க நெறியினைக் கண்டேன் என்று கூறாதீர்கள். மாறாக, நான் நடந்து போகின்ற வழியிலே, ஆத்மாவைச் சந்தித்தேன் என்று சொல்லுங்கள்.
ஏனெனில், ஆத்மா எல்லா நெறிகளிலும் நடக்கின்றது.
ஆத்மா ஒரு கோட்டின் மீது நடப்பது இல்லை; நாணலைப் போல் நீளமாக வளர்வதுமில்லை.
அது எண்ணற்ற இதழ்களை உடைய, தாமரை மலர்வதைப் போல மலர்கின்றது.
0 கருத்துகள்