உரையாடல்

      பின்னர் ஒரு புலவர், 'சொற்பொழிவைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார்:

     உங்கள் எண்ணங்களோடு உற்ற அமைதி முடிவடைந்த பின்னரே நீங்கள் பேசுகின்றீர்கள்.

     உங்கள் இதயத்தின் தனிமையிலே வசிக்க முடியாத நேரத்தில் எல்லாம் உங்கள் உதட்டினாலே வாழ்கின்றீர்கள்.  பேச்சொலி உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் பொழுது போக்காகவுமே உள்ளது.



     அதிகமான பேச்சால் உங்கள் சிந்தனை பாதிக்கு மேல் கொலை செய்யப்படுகிறது.

     ஏனெனில், சிந்தனை என்பது பரந்த வெளியிலே பறக்கும் பறவையாகும்.  வார்த்தைகளாம் கூட்டிலே உண்மையாகவே அது தன் சிறகுகளை விரிக்க இயலுமாயினும் அதனால் பறக்க முடியாது.

     உங்களிலே பலர் தனித்திருத்தலுக்கு அஞ்சிப் பேசுபவர்களைத் தேடிப் போகின்றீர்கள்.

     தனிமையின் அமைதி அப்படிப்பட்டவர்கள் கண்களுக்குத் தங்கள் ஆத்மாவின் உண்மை உருவை வெளிப்படுத்துகிறது.  எனவே, அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.

     இன்னும் பலர் பேசுவார்கள்.  அவர்கள் பேசும்போது சிந்தனையோ முன்யோசனையோ இன்றி, தாமே அறிந்து கொள்ள இயலாத சில உண்மைகளை எப்படியோ வெளிப்படுத்தி விடுவார்கள்.

     மற்றும் சிலர் பல உண்மைகளைத் தங்கள் உள்ளத்திலே புதைத்து வைத்திருப்பார்கள்.  ஆனால், அவர்கள் அவ்வுண்மைகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது இல்லை.

     இப்படிப் பட்டவர்களின் இதயத்திலே தான் உயிராற்றல் சாந்தம் இயைந்த கவிதையின் அமைதியிலே தங்கி இருக்கிறது.

     உங்களுடைய நண்பரை நெடுஞ்சாலையிலோ அங்காடித் தெருவிலோ நீங்கள் காண நேர்ந்தால், உங்களின் உள்ளே வசிக்கும் உயிராற்றல், உங்கள் உதடுகளை அசைத்து நாக்கை நெறியுய்க்கும்.

     உங்கள் குரலுக்குள்ளே உள்ள குரல் அவர்கள் புறச்செவிகளைத் துளைத்து, அகச் செவிக்குச் செல்லட்டும்.

     ஏனெனில், அவர்களுடைய ஆத்மா உங்கள் இதயத்தின் உண்மைகளை அவர் தம் நினைவில் வைக்கத்தக்க திராட்சை ரசத்தின் இனிப்பைப் போல நினைவில் வைத்திருக்கும்.

     திராட்சை ரசம் வைத்திருந்த ஜாடி மறைந்து போகலாம்.  அதன் மேற்பூச்சு வண்ணம் ஒளி இழந்துவிடலாம்.  ஆனால், பானத்தின் இனிப்பு மட்டும் நினைவில் இருந்து மாறாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்