காலம்

      பின்னர் ஒரு வான்வெளிக் கலைஞர் அவரை நோக்கி, 'காலத்தைப் பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் விளக்கலுற்றார்.

     அளத்தற்கு அரியதும், அளவிட முடியாததுமான காலத்தையும் 

உங்களால் அளந்திட முடியும்.

     உங்களுடைய ஒழுக்கத்தையும், ஏன் உங்கள் உயிராற்றலின் இயக்கத்தையும், நாழிகைகள், பருவ காலங்கள் இவற்றுக்கேற்ப நேராக்கி நெறியுய்க்கலாம்.

     காலத்தையே ஓர் அருவியாக்கி அவ்வருவிக் கரையோரம் 

     நீங்கள் அமர்ந்து அதன் நீரோட்டத்தைக் காணலாம்.

     உங்களுள் வசிக்கும் காலங்கடந்த ஒன்று. வாழ்க்கையின்

     காலங்கடந்த தன்மையை உணர்ந்துள்ளது.

     நேற்றென்பது இன்றைய நினைவே என்பதும், நாளை என்பது இன்றைய நாளின் கனவே என்பதும் அஃது அறிந்த ஒன்றேயாகும்.


     உங்களுள்ளே எந்த ஒன்று இசைபாடிச் சிந்திக்கின்றதோ, அஃது அப் பரந்த வெளியிலே விண்மீன்களைச் சிதறிய அம் முதல் விநாடியின் வரம்பிடையேதான் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது.

     தன்னுடைய அன்பின் வலிமைக்கு எல்லையே கிடையாது

என்றுணராத மனிதன் உங்களிலே யார்?

     மற்றும் அந்த அன்பு தான் எல்லையற்ற தாயினும், தன் ஆத்மாவை அது சூழ்ந்து இருப்பதாயினும், அஃது ஓர் அன்பு உணர்விலிருந்து, மற்றோர் அன்பு உணர்வுக்குத் தாவாமல், ஓர்  அன்புச் செயலில் இருந்து மற்றோர் அன்புச் செயலுக்கு விரையாமல் இருப்பதை உணராதார் யார்? 

     காலமும் அன்பினைப் போலவே பகுக்க முடியாததும் வரம்பற்றதும் அன்றோ? 

     உங்கள் எண்ணத்திலே காலத்தைப் பருவத்தினால் அளக்கும் எழுச்சி உண்டாகுமானால் அப்போது ஒவ்வொரு பருவமும் மற்ற எல்லாப் பருவங்களையும் சூழ்ந்து நிற்கட்டும்.

     மற்றும் இன்றைய நாள், கடந்த  காலத்தை நினைவினாலும் எதிர்காலத்தை விருப்பத்தினாலும் தழுவி நிற்கட்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்