அதன்பின், அந்நகரத்தின் முதியவர்களுள் ஒருவர், 'நல்லன, தீயனவற்றைப்பற்றி எங்களுக்கு விளக்குங்கள்' என, அவர் கூறுவார்.
உங்களுள் உள்ள நல்லதைப்பற்றி மட்டுமே நான் கூற முடியும். ஆனால் தீமையைப் பற்றியல்ல.
ஏனெனில், தன்னுடைய பசியாலும் தாக்கத்தாலும் சித்திரவதை செய்யப்பட்ட நன்மையின் வேறுருவமே தீமை என்பது அல்லாமல், தீமை என்பது வேறென்ன?
உண்மையாகவே, நன்மையானது தான் பசியோடிருக்கும் போது , தன் உணவை இருண்ட குகைகளிலும் கூடத் தேடுகின்றது; தண்ணீரில்லாமல் நா வறண்டு தாகம் எடுக்கும் போது, நச்சு நீரைக் கூடப் பருகுகின்றது.
நீங்கள் உங்களுள் ஒன்றி நிற்கும் நல்லவர்கள்.
ஆனால், உங்களோடு நீங்கள் ஒன்றி நிற்காமலிருக்கும் போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.
ஏனெனில், பகுக்கப்பட்ட வீடு திருடர்களின் குகை அன்று. அஃது இரண்டாக்கப்பட்ட ஒரு வீடு தான்.
சுக்கான் இல்லாத கப்பல் இலக்கில்லாமல் ஆபத்து நிறைந்த பல தீவுகளுக்கிடையே திரிந்தாலும் கடலின் அடித்தளத்திற்கு மூழ்கிப் போகாது.
உங்களையே தியாகம் செய்ய நீங்கள் போராடும் போது, நீங்கள் நல்லவர்கள்.
அப்படியன்றி , உங்கள் இலாபத்தை மட்டுமே கருதி நிற்கும் போது கூட, நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.
ஏனெனில், நன்னலத்திற்காக நீங்கள் போராடும் போது, நிலத்திலே ஊன்றி, நிலத்தின் பாலை உறிஞ்சும் மரத்தின் வேரை ஒப்பானவர்கள் இவர்கள்.
மரத்தின் உச்சியிலே உள்ள பழம் கீழே உள்ள வேரைப் பார்த்து, 'உண்மையாகவே நீ என்னைப் போலப் பழுத்து முழுமை அடைந்து தன்னையே முழுமையும் கொடுத்துவிடும் தியாகியாக இரு,' என்று சொல்லாது.
ஏனெனில், பழத்துக்குத் தன்னை முழுமையாகக் கொடுத்துத் தியாகம் செய்வது தான் அதன் இயல்பும் தேவையும் ஆகும். ஆனால், வேருக்கோ நிலத்தின் பயனை உறிஞ்சுவது மட்டுமே அதன் இயல்பும் தேவையுமாகும் .
நீங்கள் உங்கள் உரையாடலிலே விழிப்போடிருக்கும்போது
நல்லவர்களே.
ஆனால், தூக்கத்திலே உங்கள் நாக்குத் தடுமாறிக் கருத்தின்றி உளறும்போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.
ஏனெனில், தடுமாறி உளறுதலும் வலியற்ற நாவைப் பலப்படுத்தும்.
உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் உறுதியான பெருமிதம்
நடையோடு நடந்து போகும்போது நல்லவர்கள்.
ஆயினும் அவ்விலக்கை நோக்கியே நீங்கள் தட்டுத்தடுமாறி
நொண்டிச் சென்றாலும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.
நொண்டிகளும் பின்னோக்கிச் செல்வதில்லையே.
வலிவும் விரைவும் மிக்க நீங்கள், முடவர்கள் முன்னிலையில், அவர்களிடம் அன்பு காட்டுகிறோம் என்னும் நோக்கத்தோடு நொண்டி நடக்க வேண்டா.
நீங்கள் எண்ணற்ற நெறிகளிலே நல்லவர்கள். ஆனால்,
நல்லவர்களாக இல்லாத போது கெட்டவர்களாக இல்லை.
அக்காலத்திலே நீங்கள் மந்தமாகவும் சோம்பியும் நடக்கின்றீர்கள் என்பதன்றி வேறில்லை.
அந்தோ! மான்கள் தங்கள் வேகத்தை ஆமைகளுக்குக் கற்றுத்தர இயலாதே.
உங்களது பேருருவமான, தனக்கெனக் கொள்ளும் தன்னலமான அவாவிலே நன்மை நிலவுகின்றது. அந்த அவாவோ,உங்கள் யாரிடத்திலும் உண்டு.
ஆனால், சிலரிடத்திலே அந்த அவாவானது, மலையடுக்கத்திலே உள்ள பொருள்களையும், காட்டினது இனிய இசையையும் நல்லனவும் தீயனவும்
சுமந்து கடலிலே கலக்கச் செல்லும் பெருவெள்ளத்தைப் போல அமைந்திருக்கும்.
மற்றும் சிலருக்கோ அந்த அவா, ஊர்ந்து சென்று பல வளைவுகளையும் திருப்பங்களையும் பெற்றுக் கடலைச் சென்று அடையுமுன் மிக மந்தகதியிற் செல்லும் ஆற்றைப் போல அமைந்திருக்கும்.
பேராசைக்காரன் குறைவாக விரும்புகின்றவனை நோக்கி, 'நீ ஏன் நின்று நின்று வருகிறாய்,விரைந்து வரவில்லை?' எனக் கூறாது இருக்கட்டும்.
ஏனெனில், உண்மையிலேயே நல்லவன் ஆடையற்ற மற்றவனை நோக்கி உன் உடை எங்கே என்றோ,வீடு இல்லாதவனைப் பார்த்து உன் வீடு என்னவாயிற்று என்றோ கேட்பதில்லை.
0 கருத்துகள்