அதன் பின் கோயில் அர்ச்சகரின் மனைவி அவரைப் பார்த்து, எங்களுக்கு விவேகத்தைப் பற்றியும் மன எழுச்சியைப் பற்றியும் சொல்ல வேண்டும்' என, அவர் சொல்வார்:
பல நேரங்களில் உங்கள் ஆத்மா ஒரு போர்க்களமாக மாறி நிற்க, அங்கே உங்கள் விவேகமும் தீர்ப்பும் உங்கள் மன எழுச்சி, அவா எனும் இவற்றோடு போர் செய்கின்றது.
உங்கள் ஆத்மாவுக்கு நான் ஒரு சமாதானத் தூதுவனாகி, விலக்கப்பட்ட, போட்டி இடுகின்ற உங்களது புலன் உணர்ச்சிகள் யாவும் ஒருங்கிணைந்து
பண்ணிசைக்கும்படி என்னால் மாற்ற இயலுமா?
உங்களுள் நீங்களே அமைதியை விரும்புபவர்களாக விளங்காத முன், இல்லை -- புலன் உணர்வினைக் காதலிப்பவர்களாக அமையாத காலத்து, என்னால் இஃது எப்படிச் செய்வதற்கு இயலும்?
கடற்பயணம் செய்யும் உங்கள் ஆத்மாவுக்கு உங்கள் பகுத்தறிவும் மனவெழுச்சியும் சுக்கானும் பாய்மரமுமாய் விளங்கும்.
அந்தச் சுக்கான் உடைந்து விட்டாலும், பாய்மரம் முறிந்து விட்டாலும் நீங்கள் தட்டுத் தடுமாறித் திகைக்க அலைத்து இழுத்துச் செல்லப்பட்டோ, நடுக்கடலில் அசைவற்றோ நின்றுவிடுவீர்கள்.
ஏனெனில், தனித்து ஆளுகின்ற பகுத்தறிவோ மூடி அடைத்து வைக்கப்பட்ட சக்தியாகும். கவனிக்கப்படாத மனவெழுச்சியோ தன்னைத் தானே எரித்து அழித்துக் கொள்ளும் சுடராகும்.
எனவே, உங்கள் ஆத்மா தன் பகுத்தறிவை மனவெழுச்சியின் உயரத்திற்கு, அந்த மனவெழுச்சி தான் இனிய பண்பாடும் படியாக உயர்த்தட்டும்.
உங்கள் ஆத்மா உங்கள் மனவெழுச்சியைப் பகுத்தறிவோடு இணைத்துச் செலுத்த, அதனால் உங்கள் அவாவும் மனவெழுச்சியும் நாள்தோறும் உயிர்த்தெழுந்து வாழ்வதோடு, தன்னுடைய (ஆத்மாவின்) சிலையின் சாம்பலில் இருந்தும் அம் மனவெழுச்சி உயிர் பெற்று எழுந்து சிரஞ்சீவியைப் போல் நீடூழி வாழச் செய்யட்டும்.
உங்களுடைய பகுத்தறிவின் தீர்ப்பையும், உங்கள் உளப் பசியையும் உங்கள் இல்லத்திலே தங்கும் இரு விருந்தினர்கள் எனக் கருதுங்கள் என நான் கூறுகிறேன்.
நிச்சயமாக நீங்கள் ஒரு விருந்தினரைக் காட்டிலும் மற்றொரு விருந்தினரை அதிகமாகக் கௌரவிக்க மாட்டீர்கள். ஏனெனில், யார் ஒருவர் ஒரு விருந்தினரைப் பிறனிலும் அதிகமாகக் கவனிக்கிறாரோ, அவர் இருவருடைய அன்பையும் நம்பிக்கையையும் இழந்து விடுபவர் ஆவார்.
குன்றின் மீது குளிர்ந்த புங்கமரத்தின் நிழலிலே அமர்ந்து சேய்மையிலே உள்ள நிலத்தின் பள்ளத்தாக்குகளிலே, அமைதியும் சலனமற்ற தன்மையும் பங்கேற்று இருப்பதை நீங்கள் காணும் போது, உங்கள் உள்ளம் தன்னுள்ளே, 'இறைவன் பகுத்தறிவிலே வசிக்கிறான்' என்பதாகச் சொல்லட்டும்.
புயற்காற்று சழன்றுவீச, அவ்வலிய காற்றால், காடுகள் நடுநடுங்க, இடியும் மின்னலும் விண்ணின் காம்பீர்யத்தை நிலை நிறுத்தும் போது, உங்கள் இதயம் பயபக்தியோடு, இறைவன் மன வெழுச்சியிலே
நடனமாடுகின்றான்' எனக் கூறுங்கள்.
நீங்களோ இறைவனின் வெட்டவெளியிலே காற்றாகவும் , பராசக்தியின் கானகத்திலே ஓர் இலையாகவும் இருப்பதால் பகுத்தறிவிலே அமைதி
அடைந்து மனவெழுச்சியலே நடமாடுங்கள்.
0 கருத்துகள்