பிறகு ஒரு பேச்சாளர், 'சுதந்தரத்தைப் பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார்.
நகர வாயிற் புறத்திலேயும், உங்களது குளிர் காயும் கணப் பருகிலேயும், நீங்கள் உங்கள் சொந்த விடுதலையினையே (சுதந்தரத்தையே) சாஷ்டாங்கமாக வீழ்ந்து தண்டனிட்டு வணங்கு கின்றீர்கள்.
கொடுங்கோல் மன்னன் முன்னர், ஓர் அடிமை தலைதாழ்ந்து நிற்பதைக் போலவும் அம் மன்னன் தன் கழுத்தை வெட்டுங் காலத்திலும் அவ்வடிமை அவனைத் துதி செய்வதைப் போலவுமே சுதந்தரத்தை நீங்கள் வணங்குகின்றீர்கள்.
கோயிலைச் சுற்றியுள்ள பூங்காவிலும் கோட்டையின் நிழலிலும் உங்களுக்குள்ளே உரிமை வேட்கை மிகுந்தவர்கள், தங்கள் சுதந்தரத்தையே தமக்கு நுகத்தடியாகவும் கைவிலங்காகவும் பிணிக்க அணிந்து உள்ளமையைக் கண்டு இருக்கிறேன்.
என் இதயம் என்னுள்ளே குருதி சிந்துகிறது. ஏனெனில் விடுதலையைத் தேடும் வேட்கையே உங்களுக்குக் கடிவாளம் போல அமையும் போது,
அத்தகைய சுதந்தரத்தையே எல்லை என்றும் பூரணமானது என்றும் பேசுவதை நீங்கள் எக்காலத்தில் நிறுத்துவீர்களோ, அக்காலத்திலே தான் நீங்கள் உண்மையிலேயே சுதந்தரமானவர்கள் ஆவீர்கள்.
உங்களுடைய நாள்கள் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தால், உங்களுடைய இரவுகள் தேவைகளும் துயரங்களும் சூழாமல் இருந்தால் மட்டுமே நீங்கள் சுதந்தரமானவர்கள்.
அந்தக் கவலையும் தேவையும் துயரமும் ஒருவேளை உங்கள் வாழ்வைப் பின்னிப் பிணித்திருப்பினும், அவற்றுக்கும் மேலாக , நீங்கள் தளையற்றும் கவசமற்றும் உயர்ந்து நிற்கும் போது தான் நீங்கள் விடுதலை உற்றவர்கள் ஆவீர்கள்.
அறிவு விளக்கத் தெளிவு என்னும் காலையிலே பின்னிய சங்கிலியே, நடுப்பகலில் உங்களைச் சுற்றிப் பிணித்து விடுமானால், நீங்கள் எங்ஙனம் பகலையும் இரவையும் கடந்து மேலே உயர முடியும்?
உண்மையிலேயே நீங்கள் எதைச் சுதந்திரம் என்று கூறுகின்றீர்களோ, அது நம் கண்களைக் கதிரவன் வெளிச்சத்தால் கூசவைக்கும் மின்னுகின்ற வலிமிக்க கரணைகளால் ஆன ஓர் சங்கிலியே அல்லாமல்
வேறென்ன? நீங்கள் விடுதலை அடைவதற்காக , உங்கள் ஆத்மாவின் உடைந்த துண்டுகளை வீசி எறியும் செயலன்றிச் சுதந்தரம் என்பது வேறென்ன?
இந்தச் சுதந்தரம் என்பது ஒரு நீதியற்ற சட்டமாக இருந்தாலோ இதை நீங்கள் அழித்து விடலாம். ஆனால், இந்தச் சட்டமோ நீங்களே உங்கள் கைகளாலேயே
உங்கள் நெற்றி மீது எழுதிக் கொண்ட தலையெழுத்தாகும் அன்றோ?
இச்சுதந்தரத்தை, உங்கள் சட்டப் புத்தகங்களை எல்லாம் கொளுத்தி விடுவதன் மூலமோ, நீதிபதிகளின் நெற்றிகளைக் கடல் நீர் முழுமையும் கொண்டு கழுவுவதன் மூலமோ நீங்கள் அழித்துவிட முடியாது.
இஃது ஒரு கொடுங்கோலனானால் நீங்கள் இதை அரியணையில் இருந்து தூக்கி எறிந்து விடலாம். ஆனால், அதற்கு முன்னதாக நீங்கள் உங்கள் உள்ளத்திலே இருந்து, இஃது ஆள்வதற்காக எழுப்பப்பட்டு உள்ள இதன்
அரியணையை அழித்து விடுங்கள்.
கொடுங்கோன்மை எப்படிச் சுதந்தரத்தையும் இறுமாப்பையும் ஆள
இயலும்? தங்கள் சொந்தச் சுதந்தரத்திலேயே கொடுங்கோன்மையும்,
தங்களது இறுமாப்பிலேயே இழி தன்மையும் அல்லவா பொருந்தி இருக்கின்றன.
இந்தச் சுதந்தரம் ஒரு கவலையாக இருந்தால் நீங்கள் உதறித் தள்ளிவிடுவீர்கள். ஆனால், இந்தச் சுதந்தரம் என்னும் கவலையோ உங்கள் மீது பிறரால் சுமத்தப்பட்டது அன்று. மாறாக நீங்களே வலியத் தேடிக்கொண்ட ஒரு சுமையாகும்.
இஃது ஓர் அச்சமாக இருந்தாலோ நீங்கள் விரட்டி விடுவீர்கள். அச்சப்படும் உங்கள் கைகளிலே அன்று உங்கள் இதயத்தை அன்றோ இஃது இருக்கையாகக்
கொண்டுள்ளது.
அன்பு மிகுந்ததும் , அச்சமடைந்ததும், துயரமுள்ளதும், மகிழ்வு மிக்கதும், தேடப்படுவதும், தப்பி ஓடிவிடுவதுமான எல்லாப் பொருள்களும் நிச்சயமாகவே உங்கள் உள்ளத்துள்ளேயே நிலையாகத் தொடர்ந்து
பாதிபாதியாக உலாவுகின்றன. இவை அனைத்தும் உங்கள் ஆத்மாவினுள்ளே ஒளியும் நிழலும் ஒன்றாக இணைந்துள்ளதைப் போல , இணைந்து உலாவுகின்றன.
நிழல் தன் உருவத்தைத் தேய்ந்து இழந்துவிட்ட பிறகு , தனித்து நிற்கும் ஒளிகூட, தன்னைவிடப் பேரொளிக்குத்தான் ஒரு நிழலாகவே மாறும்.
இங்ஙனமே உங்கள் சுதந்தரமும், தன்னுடைய தளைகள் அனைத்தும்
அறுந்துவிட்ட பிறகும், தன்னைக் காட்டிலும் பெரியதொரு சுதந்தரத்திற்குத் தானே ஒரு களையாக மாறிவிடும்.
0 கருத்துகள்