சட்டங்கள்

      பின்னர் ஒரு வழக்கறிஞர், 'ஐயா! அப்படியாயின் நம் சட்டங் களைப் பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் சொல்லத் தொடங்கினார்:

     நீங்கள் சட்டங்களை இயற்றுவதிலே இன்பங் காண்கின்றீர்கள்.

     ஆனால், அவற்றைச் சிதைப்பதிலே தான் அதைவிட இன்பத்தைக் காண்கின்றீர்கள்.

     உங்கள் செயலோ, கடற்கரையிலே குழந்தைகள் உறுதியுடன் மணல் வீடுகளைக் கட்டிப் பின் சிரிப்பலையுடனே, அவற்றை அழித்தலைப் 
போன்றதே ஆகும்.

     ஆனால், நீங்கள் மணல் வீடுகளைக் கட்டும்போது கடல் மேலும் மேலும் மணலைக் கொணர்ந்து  குவிக்க, நீங்கள் அவற்றை அழிக்கும் போது கடலும் உங்களுடனே சேர்ந்து பிரிக்கின்றது.

     உண்மையாகவே கடல் களங்கம் அற்றவர்களுடனே கூடிச் சிரிக்கின்றது.

     எவருக்கு வாழ்க்கை ஒரு கடல் அல்லாமலும், மனிதனால் செய்யப்பட்ட சட்டங்கள் மணல் வீடுகளைப்  போல் அல்லாமலும் உள்ளதோ?

     எவருக்குப் பாறையே தம் வாழ்க்கையாகவும், அப்பாறை மீது தாம் விரும்பியபடி செதுக்கிக் கொள்ளத்தக்க சிற்றுளியே சட்டமாகவும்
உள்ளதோ அவர்கள் எத்தகையவர்கள்?

     நடனக் கலையை வெறுக்கும் முடவன் எத்தன்மையானவன்?

     காட்டிடையே சுதந்நரமாக ஓடுகின்ற மானையும் கடமையையும் பார்த்து.  இவை நாடோடி என்றும் நெறி தவறியன என்றும் சொல்லுகின்ற, தன்
நுகத்தடியையே காதலிக்கின்ற வண்டிமாடு எப்படிப்பட்டது?

     திருமண விழாவுக்கு முன்னதாகவே வந்திருந்து, விருந்தை மிகுதியாக உண்ட பின்னர்க் களைத்துத் திரும்பித் தம் இல்லம் செல்லும்போது எல்லா விருந்தாட்டும் சட்டத்தை மீறியனவே என்றும் , விருந்து தருபவர்கள் அனைவரும் சட்டத்தை மீறினவர்களே என்று கூறும் ஒருவனைப் பற்றி என்ன வென்று கருதுவது?

     இவர்களும் கதிரவன் ஒளியிலேதான் நிற்கிறார்கள்.  ஆனால், தங்கள் முதுகைக் கதிரவனுக்குக் காட்டி நிற்கிறார்கள் என்பதைத் தவிர, வேறு என்ன நான் இவர்களைப் பற்றிச் சொல்ல முடியும்?

     இவர்கள் தங்கள் நிழலையே காண்கின்றனர்.  இவர்கள் நிழலே இவர்களுக்குச் சட்டங்கள்.  இவர்களுக்கோ, கதிரவன் என்பது நிழலை உருவாக்கும் ஒரு கருவியே அன்றி வேறில்லை.

     சட்டத்தினை ஒப்புக் கொள்ளுதல் என்பது இவர்கள் வரையிலும், தலை தாழ்ந்து தங்களது நிழலைத் தாங்களே நிலத்தின் மீது தேடுவது என்பது அல்லாமல் வேறென்ன?

     ஆனால், நீங்கள் ஞாயிற்றை நோக்கிச் சென்றீர்களானால், தரையின் மீது படியும் வேறு எந்த நிழல் தான் உங்களைச் சிறைப்படுத்த முடியும்?

     காற்றூடே  பயணம் செய்யும் உங்களை எந்தக் காற்றாடி தான் திசைமாற்றித் திருப்ப முடியும்?




     மற்றொரு மனிதனின் சிறைக் கதவின் மீதன்றி நீங்கள் உங்கள் நுகத்தடியை வேறெங்காவது உடைத்துக்கொள்ள முடியுமானால், மனிதனின் எந்தச் சட்டம் உங்களைக் கட்டுப்படுத்த முடியும்? 

     பிற எந்த மனிதனுடைய இரும்புத் தளையின் (விலங்கு) மீதும் தடுக்கி விழாமல் நீங்களே களித்தாடக் கூடுமானால், எந்தச் சட்டங்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டும்?

     யாருடைய நெறியிலும் இடையூறு உண்டாக்காமல் நீங்களே உங்கள் உடையைக் கிழித்துக் கழித்துப்போடக் கூடுமானால் , யார் உங்களை நீதி 
விசாரணைக்கு அழைக்க முடியும்?

     ஆர்பலீஸ் நகர மக்களே, நீங்கள் முரசத்தை மூடிப் போர்த்து வைக்கலாம்; யாழின் நரம்புகளைத் தளர்த்தி விடலாம்.  ஆனால், வானம்பாடியைப் பண் இசைக்காதே என உங்களிலே யாராவது உத்தரவிட முடியுமா?


கருத்துரையிடுக

0 கருத்துகள்