கிழக்கு தூரமில்லை!

ஆசிரியர் : ஜோ மல்லூரி 



விதையே! 

கொஞ்சம் புதைந்து கொள்!


வா .... வாழ்க்கை என்பது 
சூதாடிப் பெறுவதல்ல.
போராடிப் பெற வேண்டிய ஒன்று.

இங்கு பெரும்பாலான இளைஞர்கள்,
வாழ்க்கை என்பது பூப்பல்லக்கிலே 
புறப்பட்டு வருமென்று
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
இல்லை ... நிச்சயமாக இல்லை ....

வாழ்க்கைக்கு இன்னொரு பெயர் தேடல்;
இந்தத் தேடல்தான் உனது முதற்படி,
நீ சிந்திப்பதிலிருந்து அல்ல,
பலவற்றைச் சந்திப்பிலிருந்துதான் 
இந்தத் தேடல் ஆரம்பிக்கும்.

வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகளைச் 
சந்திக்கிறாய்.  ஒவ்வொரு நிகழ்வுகளும் 
ஒவ்வொரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது.
கற்றுக் கொள்ள வேண்டியது நீதான்.

இப்படித்தான், எவ்வளவோ மனிதர்களைச் 
சந்திக்கிறாய்.  எல்லோருமே உன்னைப் 
பாதித்துவிடவில்லை.  ஒரு சிலர்தான் 
உனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி
விடுகிறார்கள்.

இப்படிச் சந்தித்த நிகழ்வுகளும் சந்தித்த 
மனிதர்களும் உனக்குள் ஒரு பாதிப்பை 
ஏற்படுத்துகிறதென்றால், நிச்சயமாக 
அந்தப் பாதிப்பு உன்னைச்  சிந்திக்கவைக்கும் .

இப்பொழுதுதான் வாழ்க்கையும் 
தொடங்குகிறது.

வாழ்க்கை என்பது சூதாடிப் பெறுவதல்ல,
போராடிப் பெறவேண்டிய ஒன்று.

இளையவனே!
உனது போர்க்களம் இந்த மண்மீதுதான் ...
உனது போராட்டம் இந்த மனிதர்களோடுதான்.

ஆனால், இந்த மண்ணோடும்,
மனிதர்களோடும் என்னால் வாழ்க்கையை 
வளர்த்துக் கொள்ள முடியாது.  கடினமான 
இந்த வாழ்க்கையை நான் சந்திக்க 
விரும்பவில்லை, என்று தயங்கி நிற்கிற 
தன்னம்பிக்கை இல்லாத இளைஞர்கள் தான் 
இன்றைக்கு அதிகமாகி வருகிறார்கள்.
வாழ்க்கையின் சுகமான 
எல்லைக் கோடுகளைச் சந்திக்க 
வேண்டியவர்கள், அவநம்பிக்கையின் 
அடிவாரத்தில் அமர்ந்துகிடக்கிறார்கள்.

இந்த வாழ்க்கையை நீ சந்தித்தே 
தீர வேண்டும்.
இதுதான் நியதி.

வாழ்க்கையில் உனக்கு வருகிற இன்பத்தை 
அனுபவிக்கிறபோது , உனக்கு வருகிற 
துன்பங்களை உனது இன்பத்துக்கு போடுகிற 
பிச்சையாக நினைத்துக் கொள்ளலாமே!

தொடக்கத்திலேயே இந்த வாழ்க்கையில் 
தோல்வி அடைந்து விடுவேனென்று 
பயப்படாதே! தோல்வியைச் சந்திக்காத 
வாழ்க்கையை,  ஒரு வாழ்க்கை என்றே 
வகுத்துவிட முடியாது.

தோல்விகள் கற்றுதருகிற பாடங்கள் மாதிரி, வேறெதுவும் இந்த மண்ணில்
கற்றுத் தர இயலாது.

பத்தாம் வகுப்பு தோல்வியால் 
பாடையில் போனவனும் உண்டு.
வரலாற்றுப் பாதையில் போனவனும் உண்டு.
தோல்விகள் வாழ்க்கையை 
திசை திருமப்புகிற வழிகாட்டிகள்.


ஒன்றைப்பெரும் போது கிடைக்கிற 
அனுபவத்தைக் காட்டிலும் 
ஒன்றை இழக்கும் போது  கிடைக்கிற 
அனுபவம் அபாரமானது.

தோல்வி வாழ்க்கையை 
வழிநடத்துகிற வேள்வி.
கல்வியில் தோல்வியா?
காதலில் தோல்வியா?
நீ தொட்டதெல்லாம் தோல்வியா?

கவலைப்படாமல் இவற்றையெல்லாம் 
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், 
இந்தத் தோல்விகளெல்லாம், 
வெறொரு வெற்றிக்கு உன்னை 
அழைத்துப் போகிற சுவடுகளாகத்தான் 
இருக்கும். முடியாது என்று நினைக்கும் 
போதுதானே தோல்வியே வருகிறது.

உன்னால் முடியும்.

நிகழவே முடியாது என்று 
நினைக்கப்பட்டவையெல்லாம் 
பிறகு நிகழ்ந்ததை சரித்திரம் பலமுறை 
எடுத்துக் காட்டியுள்ளது.

அரிசியில் கல்லெடுத்துக் கொண்டிருந்த
 சமூகத்தில் நிலாவில் போய்  கல்லெடுத்து 
வரலாமென மனிதன் சிந்தித்தான் 
போய்வந்தான்.

செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறதென்று 
அறிய விண்கலத்தை அனுப்பினான்.
இப்பொழுது அங்கே மலை இருக்கிறது.
வெள்ளத்தின் அலை இருந்திருக்கிறது.
என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.

எட்டாத கற்பனைகளென்று எதுவும் 
மனித முயற்சியின் முன் கிட்டாமல் போகாது.
மனிதனின் சில கனவுகளும் கற்பனைகளும் 
பல வரலாறுகளையே உருவாக்கியிருக்கின்றன.

உரக்கச் சிந்திக்கிற மனிதர்கள்தான் 
உலக சரித்திரத்தில் உயர்ந்த நிலையில் 
வலம் வந்திருக்கிறார்கள்.  இந்தியாவின் 
இணையற்ற கவிஞர் அல்லமா இக்பால் 
எழுதுகிறார்.

"இளைஞர்களே! பஞ்சனை மெத்தையில் 
ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பாதீர்கள்.
நீங்கள் பறந்து செல்லும் ராஜாளிப் பறவைகள்.
மலை உச்சியிலே உங்கள் கூடுகளைக் 
கட்டிக் கொள்ளுங்கள்".

நீ ஞானியாவதற்கும் நாசமாவதற்கும் 
மனிதனே போதுமானவன்.
சில நேரங்களில் உனது துயரங்களுக்குத் 
தோள் கொடுப்பான்.
சில நேரங்களில் உனது உயரங்களுக்குப் 
பள்ளம் பறிப்பான்.
தேவைப்பட்டால் கூட்டிக் கொடுப்பான் ,
எதிரியானால் அதையே காட்டிக் கொடுப்பான்.

மனிதன் தானே!
அவனுக்கு நாக்கும் புரளும் வாக்கும் புரளும்.
படைப்பில் உயர்ந்தவன் என்றாலும்,
காட்டுக்குள்ளிருந்து வந்தவன் தானே!...

காட்டுக்குள் இருந்தபோது,
தனக்குள் இருந்த மனிதத்தை 
தெரிந்து கொள்ளவில்லை.
நாட்டுக்குள் இருக்கும் போது ,
தனக்குள் இருந்த மிருகத்தை 
மறந்து விடவில்லை.
****
நண்பா!... வரலாறே வேண்டாமென்று 
வாழ்ந்து விட்டுப் போக நீ என்ன மண்புழுவா?
மனிதனல்லவே ....!

சரித்திரமே வேண்டாமென்று 
சாம்பலாகிப் போவதற்கு 
நீயென்ன சவுக்கு மரமா?
சாய்ந்த பிறகும் மனம் கமழுகிற 
சந்தன மரமல்லவா ....!

இந்த மண்ணில் சாதித்து 
எதையும் நீ விட்டுப் போகாவிட்டாலும்,
குறைந்த பட்சம் 
ஒரு மரத்தையாவது நட்டு விட்டுப்போ.

அதற்காக உன்னை எதிர்வரும் தலைமுறை 
எழுந்து வணங்கும்.

இருந்தாலும் இங்கே பல இளைஞர்கள் 
முகாம் கிடைக்காத போராளிகளாய் 
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உழைக்கச் சித்தமாக இருப்பவனுக்கு 
வாய்ப்பில்லை, வாய்ப்பு உள்ளவனுக்கு 
உழைக்க மனமில்லை. இது தான் மாறி மாறி 
சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சரியான களம் கிடைக்காமல் கண்ணீரோடு 
காலம் தள்ளுகிறார்கள்.

போனது போகட்டும், விதியை வீதிக்கு 
அனுப்பிவிட்டு,
மதியோடு மாத்திரமே வாழ்ந்து வர 
சிந்திக்கவேண்டும்.

உன்னை நேசிப்பது பூக்களல்ல!
முட்கள் தான்! இருக்கட்டுமே!

முள்மரத்தில் அமர்ந்தாலும் குயிலே!
நீ கூவிக் கொண்டுதான் இருக்க வேண்டும்!
வனாந்திரத்தில் வாழ்ந்தாலும் கிளியே!
நீ பேசிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
*****
விதையே! என்றாவது ஒரு நாள் 
நீ முளைக்காமலா போவாய்.
நிச்சயமாய் இந்த விதை முளைக்கும் என்று 
நம்பிக்கையோடு உனக்குள்ளே
சொல்லிக் கொள்.

ஒரு நாள் வானம் வந்து 
உனது கொடிகளை அழைக்கும்.
இமயத்தை உனது இதயம் கடக்கும் 
இது நடக்கும். நம்பு ... நம்புவது நடக்கும்.

ஆனால் நம்புவதற்கே 
சோம்பேறித்தனப்பட்டால் ...
இறக்கைகள் இருந்தும்
பறக்காமல் இருந்தால் 
அது படைப்பின் குற்றமல்ல !
பறவையின் குற்றம் 

அதைப்போலத்தான், வாழ்க்கையை 
வெற்றி கொள்ளாமல் இருந்தால்,
அது மனிதனின் குற்றமே தவிர 
படைத்தவன் குற்றமல்ல.
****
நீ இறந்து போவதற்காக 
படைக்கப்படவில்லை.
இறந்த பிறகும் 
வாழ்ந்து கொண்டிருப்பதற்காக 
வார்க்கப்பட்டிருக்கிறாய்.
வாழ்ந்து காட்டு.

வாழ்கிற பொழுதுகளில், வகை வகையாய் 
இன்பமும் துன்பமும் 
எழுந்து வரும்! எதிர்கொள்.

இந்த வயதில் நீ எவ்வளவோ 
துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறாய்.
இனி வரப்போகிறவைகளையா 
கடக்க முடியாது.

வேறுவழியில்லை 
உனது போர்க்களம் இந்த மண் மீதுதான் 
உனது போராட்டம் இந்த மனிதர்களோடுதான்.
எனவே உனது வாழ்க்கை நிலம் 
வளமாக அமைய 
விதையே! கொஞ்சம் புதைந்து கொள் .
நிச்சயம் நீ முளைப்பாய் .


கிழக்கு தூரமல்ல!


விதி கிடக்கட்டும்! நதி நடக்கட்டும்!

வானத்தில் நட்சத்திரங்கள் 
எரிந்து விழலாம்!
வாழ்க்கையில் நம்பிக்கைகள் 
எரிந்து விழக்கூடாது.

விதி கிடக்கட்டும் 
நதி நடக்கட்டும் 

இன்று காற்று 
வரட்டும் வராமல் போகட்டும்!
நான் குழலாக மாறுவேன்.
என்றாவது ஒருநாள் 
அந்தக் காற்று 
இந்தப் புல்லாங்குழலுக்குள் 
புரண்டு படுக்காமலா போய்விடும்.

உண்மைதான் ...
அப்படி ஒரு நாள் 
புரண்டு படுக்கும் போது ,
நன்மைகளைக் கண்டு 
பூபாளமாய் இசைக்கவும்,
தீமைகளைக் கண்டு 
பூகம்பமாய் அசைக்கவும்,
வாழ்ந்து காட்டு.

அதோ! கிழக்கு 
வெளிச்சத்தைச் சுமந்து நிற்கிறது.
இது வரை இருட்டுக்குள் 
இருந்தது போதும்.
வெளிச்சத்திற்குள் 
புரண்டு கொள்ள 
விடியல் நம் வீட்டு 
வாசற்படியில் 
விழுந்து கிடக்கிறது.

நமக்கு கிழக்கு தூரமல்ல ...
வாழ்க்கை தூரமல்ல ...
இதோ வாழ்க்கை வந்து விட்டது.
வா ... தொட்டுவிடலாம்.
தொடர்ந்து வாழ்ந்து விடலாம்.

கிழக்கை கிழித்து 
விளக்கை எடுக்க வரும் ராஜாளிகளே!
வாழ்க்கைப் போராளிகளே!
கிழக்கு கிளை விரிக்கிறது.
வெளிச்சம் வேர் பரப்புகிறது.

வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற 
இந்தத் திசையை 
நினைக்கும் போது ,
எல்லா திசைகளும் 
எனக்காகக் கிழக்காக 
இருக்கக் கூடாதா 
என்கிற ஏக்கம் பிறக்கிறது.

இளைய இதயங்களே!
கிழக்கு தூரமல்ல!
வாழ்க்கை தூரமல்ல!

இது வெறும் வதந்தி அல்ல.
வரலாற்றிலே நடக்கப் போகிற வசந்தம்.
*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்